Monday, February 15, 2016

பாண்டேக்களையும் ஹரிஹரன்களையும் கார்த்திகைச் செல்வன்களையும் பட்டி பார்க்கும் பழ.கருப்பையாக்கள், தமிழன் பிரசன்னாக்கள், சிவஜெயராஜன்கள், மனுஷ்ய புத்திரன்கள்……………………………….





சமீபத்தில் வினவு தளத்தில் ‘ரங்கராஜ் பாண்டேக்களைப் பட்டி பார்க்க பழ.கருப்பையாக்களால் முடியாது’ என்ற பெயரில் பதிவொன்று வந்திருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தப் பதிவு சரியானதுபோல் தோன்றினாலும் அந்த நேரலையையே திரும்பவும் போட்டுப் பார்த்தால் பழ.கருப்பையாவின் தாக்குதல்களுக்கு வினையாற்ற முடியாமல் ரங்கராஜ் பாண்டே சோர்ந்து போவதையும், முகம் சுருங்கிப்போய் உட்காருவதையும் ‘நான் எதுவும் உங்களைக் கேள்வி கேட்கப்போவதில்லை. நீங்களே பேசுங்கள்’ என்று ஜகா வாங்குவதையும் பார்க்கமுடியும்.
பழ.கருப்பையா ஏதோ அந்த நேரலைப் பிடிக்காமல் பாதியிலேயே எழுந்துபோவதுபோல் தோற்றம் கொண்டுவர அவர்கள் முயன்றிருந்தபோதிலும்- சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிமுடித்துவிட்டு, பேசவேண்டியதையெல்லாம் பேசி முடித்துவிட்டு, பாண்டே போன்றவர்களை என்னென்ன கேட்கமுடியுமோ அத்தனையும் கேட்டுவிட்டு, அவர்களை என்னென்ன விமரிசிக்க முடியுமோ அத்தனையையும் விமரிசித்துவிட்டு பழ.கருப்பையா கம்பீரமாக எழுந்து வருவதையும் பார்க்கமுடியும்.

‘அதிமுகவில் சென்ட்ரலைஸ்ட் ஊழல்னு சொல்றேன். அதுபற்றிப் பேசமாட்டேங்கறீங்க. அதன் ‘பில்லர் ஜெயலலிதா’ன்னு சொல்றேன். அது தொடர்பான பேச்சை வளர்க்க மாட்டேங்கறீங்க. என்னுடைய தொகுதியில் நடைபெற்ற மைதான விவகாரத்தையும், பர்மா பஜாரில் கழிவறைக் கட்டமுடியாமல் போனது பற்றியும் கவலைப்பட மாட்டேன்றீங்க. நான் எந்தக் கட்சியில் இருந்தேன் என்பதுதானா பெரிய விஷயம்? முக்கியமான விஷயம் என்னவோ அதுக்கு வாங்க. நான் இன்னமும் நூறு கட்சிகூடப் போவேன். அது வேறு விஷயம்’- என்று பொட்டில் அடித்தாற்போல் பேசினார் பழ.கருப்பையா.

பழ.கருப்பையா போன்ற இலக்கிய ஜாம்பவான்களுடனெல்லாம் ரங்கராஜ் பாண்டே போன்றவர்களின் விவாதத் திறமைகளெல்லாம் உறைபோடக் காணாது.

ரங்கராஜுக்கெல்லாம் மாஃபா பாண்டியராஜன்களும், பண்ருட்டி ராமச்சந்திரன்களும்தான் சரிப்பட்டு வருவார்கள் என்பதைப் பறைசாற்றிய நேரலை அது.

ரங்கராஜ் பாண்டே தன்னுடைய பேச்சில் அடிக்கடி ஒன்றைக் குறிப்பிடுகிறார். அதாவது, யாரைப் பேட்டி காணுகிறாரோ அவர் சொல்லுவதையெல்லாம் அப்படியே கேட்டுக்கொண்டு உட்கார மாட்டாராம்.

அப்படியிருந்தால் அது வந்திருப்பவர்களின் ‘உரை’ யாகிவிடுமாம்.

உரைக்கு இங்கே இடமில்லையாம்.

உரையாடல் நடத்துவதுதான் அவர்கள் நோக்கமாம்.

உண்மையில் மிகவும் நல்ல நோக்கம். அவர்கள் ‘அப்படிப்பட்ட’ உரையாடலை எல்லாரிடமும் நடத்துவதாக இருந்தால்.

ஆனால் ரங்கராஜ் பாண்டேக்களின் ‘நோக்கம்’ அதுவாக இல்லை. ‘வேறுமாதிரியானதாகவே’ இருக்கிறது.


 ஜெயலலிதாவை ஆதரித்துப் பேசுகிறவர்கள் என்ன சொன்னாலும் அது வெறும் உரையாகவே இருந்தாலும் பதினாலு மணிநேரத்திற்கும் கேட்டுக்கொண்டு இருப்பது; ஜெயலலிதாவை எதிர்த்துப் பேசுகிறவர்கள் எவராயிருந்தாலும் முதல் வார்த்தையிலேயே அதனை திசை திருப்பி அவர்களை மேற்கொண்டு ஒற்றை வார்த்தைக்கூடப் பேசவிடாமல் செய்து இவர்கள் கேட்கும் ‘ஙொப்புரானக் கேள்விக்கெல்லாம்’ அவர்கள் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது………………


இதுதான் கேள்விக்கென்ன பதில் பகுதியிலும் நடக்கிறது;

நேருக்கு நேர் பகுதியிலும் நடக்கிறது.

புதிய தலைமுறையின் ஆயுத எழுத்து பகுதியிலும் நடக்கிறது.

அரசியல்வாதிகள் ‘உரை நிகழ்த்துவது’ எப்படி நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராதோ, அதைப் போலவே நெறியாளர்கள் வெறுமனே கேள்விகள் மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதும் நேயர்களுக்கு சுவாரஸ்யம் தராது என்பதை இந்த சேனல்களும் சரி - ‘நெறியாளர்களும்’ சரி -தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆயுத எழுத்து, நேருக்கு நேர் என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு இவர்கள் யாராவது ஒருவரைக் கூப்பிட்டு வைத்துக் ‘குடைந்துகொண்டிருப்பதற்குப்’ பெயர்தான் செவ்வி அல்லது பேட்டி அல்லது நேர்காணல் என்றால் –

அதற்குபதில் ‘இன்றைக்கு நாங்கள் அதிமுகவைக் கேட்கிறோம்; இன்றைக்கு நாங்கள் திமுகவைக் கேட்கிறோம்’ என்று நிகழ்ச்சி வைத்து அங்கே பிரமுகர்களுக்கு பதில் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களின் போட்டோவை வைத்துவிட்டு ரங்கராஜ் பாண்டேவோ, ஹரிஹரனோ, கார்த்திகைச் செல்வனோ உட்கார்ந்து ஒரு மணி நேரத்திற்கும் சரமாரியாய்க் கேள்விகளை மட்டும் வீசிக்கொண்டே இருக்கலாம்.

ஆமாம் வெறும் கேள்விகளை மட்டும்……!

நிகழ்ச்சிக்கு ‘கேள்வி நேரம்’ என்று சூப்பரான தலைப்பும் வைக்கலாம்.

அப்படியில்லாமல் இவர்கள் நேரலை என்றும் விவாதங்கள் என்றும் வைத்துக்கொண்டு பலதரப்பட்டவர்களையும் கூப்பிட நினைத்தால் பழ.கருப்பையா அனுபவம் மட்டுமல்ல, அப்பாவு அனுபவமும், மனுஷ்யபுத்திரன் அனுபவமும் நேரத்தான் போகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவர்களுக்கெல்லாம் யார் ஆப்பு வைக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்தபடி இருந்தது நடந்தே விட்டது. ஆரம்பத்தில் இந்த விளையாட்டை இவர்கள் தினசரி தாங்கள் நடத்தும் விவாதங்களில் கடை பரப்புவார்கள்.

அதுவும் மாதக்கணக்கில் யாரும் கவனிக்கப்படாமலேயே ஓடிக்கொண்டிருந்தது.

அதனை திமுக சார்பில் முதலில் முறியடித்தவர் தமிழன் பிரசன்னா.

இந்த நெறியாளர்களின் பாச்சாவும் சரி; இவர்களுக்கான நிலைய வித்வான்களின் பாச்சாவும் சரி பிரசன்னாவிடம் பலிக்கவில்லை. இதுபற்றி நானே ஒரு பதிவும் எழுதியிருந்தேன்.

அந்தப் பதிவுக்கான எதிர்வினை பிரமாதமாக இருந்தது.

எல்லாரிடமும் ஒரு தெளிவு பிறந்தது.

இனி இந்த நெறியாளர் என்ற பெயரில் உட்காரும் நரியாளர்களின் குயுக்திகளுக்குப் பணிவதில்லை என்ற உணர்வு எல்லாரிடமும் வந்தது. குறிப்பாகத் திமுக சார்பாகப் பேசவந்தவர்களிடம் அதிகமாகவே வந்தது. தங்களுக்கான முறை வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர் சிவ ஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும், அப்பாவுவும்.

‘அதிமுக மீது தவறு என்கிறாயா? அதிமுக தவறு செய்தது என்று சொல். அதை விட்டுவிட்டு இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான் திமுக இதனைத் துவங்கி வைத்தது. அதிமுகவும் அதன் வழியே போய்க்கொண்டிருக்கிறது என்ற தொனியிலேயே பேசாதே’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

‘இந்த திராவிடக் கட்சிகளே இப்படித்தான்’ என்று மொடாக்குடியர்களைப்போல் பேசிப் பழகியவர்களின் சுருதி சற்றே இறங்க ஆரம்பித்தது.

நெறியாள ‘மகாப்பிரபுக்கள்’ கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கமாகப் பார்த்தபிறகுதான் அவர்களின் வழக்கமான டயலாக்குகளை அவிழ்க்க ஆரம்பித்தனர்.

ஏனெனில் இளையவர்களான சிவஜெயராஜனும், பரந்தாமனும், சரவணனும் மாத்திரமல்ல அப்பாவுவும் இவர்களைப் போட்டு வறுத்தெடுக்க ஆரம்பித்தார். எல்லா விஷயங்களிலும் மிகவும் நிதானமாகவும் கண்ணியத்துடனும் பேசும் வழக்கறிஞர் கண்ணதாசனைப் போன்றவர்களின் கோபத்திற்கு இவர்கள் எப்போது ஆளாகப் போகிறார்களோ தெரியவில்லை.

‘எங்களைப் பேசவிடு; பேசிய பிறகு கேள்வி கேள். கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கு பதில் சொல்லத் துவங்குவதற்குள் மளமளவென்று பத்துப் பதினோரு கேள்விகள் கேட்டால் என்ன அர்த்தம்? அதிமுக சார்பாகப் பேசுபவர்களை நீ அப்படி மடக்குகிறாராயா?’ என்று நெறியாள ‘மகாப்பிரபுக்களைப்’ பார்த்து சிவஜெயராஜனும் அப்பாவுவும் கேட்க ‘மகாப் பிரபுக்கள்’ பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

‘சரி சொல்லுங்க’ என்று விட்டுக்கொடுத்து விட்டேற்றியாய் மவுனம் காத்தனர்.

திமுகவைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது அல்ல. கேள். தாராளமாகக் கேள். ஆனால் அதிமுக தவறு செய்தது என்பதைச் சொல்லும்போது ‘திமுக மட்டும் அதே தவறைச் செய்யவில்லையா?’ என்று கேட்டு அதிமுக செய்த தவறை நீர்த்துப் போனதாகக் காட்டி அதிமுகவின் அந்தத் தவறுக்கும் திமுக மீதே பழிபோட்டுத் தப்பிக்க வைப்பது எந்த நியாயத்தில் சேர்த்தி? என்ன கயவாளித்தனம் இது?

“இன்னமும் எத்தனை யுகங்களுக்கு இவன்கள் யார் எந்தத் தவறு செய்தாலும் உதயகுமார் மரணத்தையும், மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தையும், 2ஜி ஊழலையும் மட்டுமே சொல்லிக்கொண்டு எல்லா தவறுகளையும் நியாயப்படுத்திக்கொண்டே இருக்கப்போகிறான்கள்?” என்று கேட்டார் நண்பர் ஒருவர்.

அந்த நண்பருக்கு என்னிடம் பதில் இல்லை.

இந்தப் பெரிய சம்பவங்களை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

ஒரு விவாதத்தில் முத்துக்குமாரசாமி என்ற பொறியாளர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தைத் தவறு என்று சொல்லி வாதாட முன்வந்தபோது, உடனே அதனை இடை மறித்த ரங்கராஜ் “உங்களுக்கு சத்யநாராயணா என்பவர் திமுக ஆட்சியில் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனது தெரியுமா?” என்று கேட்டு இடை மறித்தபோதுதான் இந்த நெறியாள சண்டியர்கள் எந்தத் தவறையும் ‘நியாயப்படுத்தும்’ வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பதற்கு ‘மந்திரித்து விடப்பட்டிருக்கிறார்கள்’ என்ற உண்மை புரிந்தது.

ஆக நெறியாளர்களைப் பொறுத்தவரை தவறுகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்று மட்டுமே விரும்புகிறவர்கள் போலும்.

பல தவறுகள் நடைபெற்றன. அதனால்தான் அதற்கான தண்டனை திமுகவுக்கு வழங்கப்பட்டது.
திமுக தோற்கடிக்கப்பட்டது.

பல தவறுகளால் ஒரு கட்சி தோற்கடிக்கப்பட்ட பிறகு அடுத்துவந்த அரசியல் கட்சி அதுபோன்ற தவறுகளைச் செய்யாமல் இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொள்வதுதானே ஒரு அறம்சார்ந்த ஊடகத்தின் பணியாக இருக்கமுடியும்?

எந்தத் தவறு எங்கே நடந்தாலும் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி ‘இப்படியொரு தவறு நடந்ததனால்தானே அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதே போன்ற தவறை நீ எப்படிச் செய்யலாம்? என்று கேள்வி எழுப்புவதுதானே நியாயத்தின் பால் நிற்கும் ஊடகம் செய்யவேண்டிய காரியம்?

அதிமுக அதுபோன்ற தவறுகளைச் செய்யும்போது கண்டிக்கவேண்டுமா? வேண்டாமா?

ஏதோ ஒரு பெயரில் கதாகாலாட்சேபம் உருவாக்கி கீர்த்தனாம்பரத்திலே திமுக இந்தத் தவறைச் செய்தது, ஜெயலலிதா வாழ்கவாழ்க; ஆதி காலத்திலே மு.க. இப்படியொரு தவறைச் செய்தார் ஜெயலலிதா வாழ்கவாழ்க; திரேதா யுகத்திலே கருணாநிதி இதே தவறைச் செய்தார், ஜெயலலிதா வாழ்கவாழ்க; போன ஆட்சியிலே திமுக இந்தத் தவறைச் செய்தது அம்மா வாழ்க வாழ்க; என்று பஜனைப் பாடிக்கொண்டிருப்பதற்குப் பெயர் ஊடக விவாதங்களா?

இந்த மகாப்பிரபுக்களின் சிந்தனையெல்லாம் வேறுவகைப் பட்டது.

யார் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள். அது எத்தனை யுகங்களுக்கு வேண்டுமானாலும் நடக்கட்டும்….. நீடிக்கட்டும்.


எப்படியாவது தோண்டி, எங்கிருந்தாவது துருவி ‘திமுக இதற்கு முன்னரே இதே போன்ற தவறைச் செய்திருக்கிறது’ என்பதை நாங்கள் நிரூபித்துவிடுகிறோம். அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளன. அதற்கேற்ப பேசுவதற்குப் பழக்கப்பட்ட ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.


நீங்கள் தவறுகளைத் தொடருங்கள்’ என்ற சித்தாந்தம் மட்டுமே இந்த சேனல்களின் பிழைப்பாக இருக்கிறது.

கலைஞரின் மீதான எதிர்ப்பும் வெறுப்பும் இவர்களிடம் எந்த அளவுக்குப் புரையோடிப்போய் இருக்கிறது என்பதற்கு சமீபத்திய  உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாம்.

ஒருவிழாவிலே ஜெயலலிதா ஒரு குட்டிக்கதையைச் சொன்னார். ஜெயலலிதா சொன்ன கதையை வைத்துக்கொண்டு ஸ்டாலினையும் கருணாநிதியையும் ஒருநாள் முழுக்க கேலியாகவும் கிண்டலாகவும் சித்தரித்து பிழைப்பை ஓட்டிவிட்டார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அடுத்து வந்தது குட்டிக்கதைக்கான பதில். பதில் சொன்னவர் கலைஞர்.

‘அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல குட்டிக்கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்’ என்று ஜெயலலிதாவை லேசாக ஒரு தட்டுத்தட்டிவிட்டு ஆரம்பிக்கிறார் கலைஞர்.

‘எந்த பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்பமாட்டார். அது குடும்பம் நடத்தும், பிள்ளை பெற்றவர்களுக்குத் தெரியும்’ என்று எடுத்த எடுப்பில் ஒரு போடு போடுகிறார்.

‘அரசியலில் கீழே இருந்து கடுமையாக உழைத்து படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். எப்படியோ அடித்த காற்றில் மேலே வந்து கோபுரக் கலசத்தில் ஒட்டிக்கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச் சொல்லத்தான் தெரியும்’ என்கிறார்.

இந்த இடத்தில் ஆரம்பித்து விடுகிறது. ரங்கராஜ் பாண்டேக்களுக்கு அஸ்தியில் ஜூரம்.

‘கலைஞர் 

ந்தக் கதையைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் இந்தக் கதைக்கு பதில் சொல்லாமல் ஒதுங்கியிருந்திருக்கலாம்; கவுரமாக இருந்திருக்கலாம்; தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவை ஆப்பசைத்த குரங்கைப்போல் ஏமாறப்போவது நிச்சயம் என்கிறார்., ரத்தம் குடிக்கக் காத்திருக்கிறார் என்கிறார்……….’ இப்படியெல்லாம் அவ்வளவு கீழே போயிருக்கக் கூடாது. தன்னுடைய தரத்தை இவ்வளவு கீழே இறக்கியிருக்கக் கூடாது’ என்று எப்படி எப்படியோ விமர்சித்து கீழே விழுந்து அழுது புரள்கிறார் ரங்கராஜ்பாண்டே.


கலைஞர் தொடர்கிறார். ‘உண்மையில் கதை என்ன தெரியுமா? தந்தையும் மகனும் அன்போடும் பாசத்தோடும் இருப்பதையும் அரசியலை முழுமையாக நடத்துவதையும் கவனித்துவந்த எதிர்வீட்டுப் பெருமாட்டிக்குப் பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை. அந்த அம்மையாருக்குப் பிள்ளையும் கிடையாது. குட்டியும் கிடையாது. ஆனால் குடும்பமே எனக்கு இல்லையென்று சொல்லிக்கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களையெல்லாம் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள படாத பாடு படுவார். மலைப்பிரதேசங்களில் எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கிவைத்துக்கொண்டு நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதைப்போல் மாளிகையிலும், அரண்மனையிலும் ஓய்வெடுத்துக்கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு எதிர் வீட்டில் தந்தையும் மகனும் பாசத்தோடு இருப்பது பிடிக்குமா? அல்லது பொறுக்குமா? எப்போது தந்தை மகன் ஆகியோருக்குத் தகராறு வரும், பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர் வீட்டுச் சீமாட்டி ஆப்பசைத்த குரங்கைப்போல ஏமாறுவது நிச்சயம்.
கதையில் வரும் பேராசைப் பெருமாட்டியைப் பற்றித்தான் நான் இங்கே விளக்கினேன்.’ என்று கதையை முடித்திருக்கிறார். கலைஞரின் கதை முடிந்து விடுகிறது.

ரங்கராஜ் பாண்டேக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த பதில் வருமென்று ரங்கராஜ் பாண்டேக்களுக்கு மட்டுமல்ல, சாதாரண குப்பன் சுப்பன்களுக்கும் தெரியும்.

யாரோ எழுதிக்கொடுத்ததைப் படிக்கும் ஜெயலலிதாவே அவ்வளவு கிண்டலடிக்கிறார் என்றால், ‘சொந்தமாய்’ எழுதி பதிலளிக்கப்போகும் கலைஞரின் பதில் ஜெயலலிதாவை எப்படியெல்லாம் பதம் பார்க்கும் என்ற விஷயமும் முனியன்களுக்கும் தெரியும், முகேஷ்களுக்கும் தெரியும்.

தவிர கலைஞரின் எழுத்தைப் புரிந்தவர்களுக்கு அவர் எம்மாதிரி விஷயங்களுக்கு எம்மாதிரி எழுதுகிறவர் என்ற அடிப்படை சூட்சுமங்களும் புரியும்.

வாயைக் கொடுத்துவிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு புத்தி சொல்லுவதை விட்டுவிட்டு-

கலைஞரைப் போல் கைதேர்ந்த ஒரு படைப்பாளிக்குப் பாடம் சொல்லவந்துவிட்டார்கள் இந்தப் பரப்புரை வியாபாரிகள்.

இப்போது மனுஷ்யபுத்திரன் விஷயத்திற்கு வருவோம்.

இந்த விஷயமும் இணையத்தில் இப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆசிரியராகவும், ஒரு கவிஞராகவும், தொலைக்காட்சி விவாதங்களில் ஒரு வெற்றிகரமான பங்கேற்பாளராகவும் தன்னை சமூகத்தில் நிரூபித்துக்கொண்டுவிட்ட பின்னர் தமக்கொரு அங்கீகாரம் தேடிக்கொள்வதற்காக ஒரு அரசியல் கட்சியில் இணைகிறார்.

அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் அவர் அரசியல் கட்சியில் இணைந்தார் என்பதற்காகவே அவரை தரக்குறைவாக விமர்சிப்பதும் பேசுவதும் கண்ணியத்திற்குரியதாக இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்ட மனுஷ்யபுத்திரன் பழ.கருப்பையாவைப் போலவே ‘பட்டிபார்க்கும் வேலையை’ வெற்றிகரமாகச் செய்துவிட்டுப் போனார் என்பதுதான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் சில கட்சிகள் ஒன்றுசேர்ந்து வரப்போகும் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறார்கள்.

இவர்கள் ஒன்றும் நேற்றைக்குத் தொடங்கபட்ட புதிய இயக்கங்களோ புதிய கட்சிகளோ கிடையாது.
இந்த இயக்கத்தில் சகாயங்களோ குறைந்தபட்சம் புதிய சிந்தனைகளை விதைக்கும் சுப.உதயகுமார்களோ கூட இல்லை.

எல்லாரும் எல்லாக் கட்சிகளிலும் பழம் தின்று கொட்டைப்போட்ட பழைய நீர்த்துப்போன அரசியல்வாதிகள்தாம்.


இருக்கின்ற எல்லாக் கட்சிகளிலும் ஏதாவதொரு சமயத்திலோ பல சமயங்களிலோ கூட்டணி வைத்து எல்லாப் பந்திகளிலும் நன்றாக சாப்பிட்டுவிட்டு எழுந்து போனவர்கள்தாம்.

ஆனால் இவர்களை திடீரென்று ஆதரிக்கத் துவங்கியிருக்கின்றன இன்றைய ஊடகங்கள்.
காரணம் இவர்களுக்கு இருக்கும் சித்தாந்தம்தான்.

அதாவது திமுகவைப் போட்டுத் தாக்குவது.

அதிலும் எல்லா மகாப்பிரபுக்களைப் போலவும் அதிமுகவை ஒப்புக்காகவும், திமுகவை மரண அடி அடிக்கிறமாதிரியாக கடுமையாகவும்- மிகமிகக் கடுமையாகவும் விமர்சித்துத் திட்டித் தீர்ப்பது.

இந்தப் பாணி விவாதம் ஒன்றில் உட்காருகிறார் மனுஷ்யபுத்திரன்.

அந்த விவாதத்திலே மொத்தம் 4 பேர். மனுஷ்ய புத்திரனுக்கு கிட்டத்தட்ட நான்கு பேரின்- முன்னாள் எம்பி சுப்பராயன், ஆளூர் ஷாநவாஸ், ஷேக்தாவூத், ப.கோலப்பன் என்ற பத்திரிகையாளர் மற்றும் கார்த்திகைச் செல்வன் என்ற நான்குபேர்… அத்தனைப்பேருமே நேரடியாக அல்லது மறைமுகமாக ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்..

இவர்களுடைய கருத்துகளுக்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு மனுஷ்யபுத்திரனுக்கு மட்டுமே இருக்கிறது.

கார்த்திகைச் செல்வன் என்கிற ‘புதிய தலைமுறை’யின் நெறியாளர் ஆரம்பத்தில் நடுநிலையாளராகத் தமது தொழிலை ஆரம்பித்தாலும் இரண்டொரு நாட்களிலேயே வழக்கமான தமிழ்ச் சேனல்களுக்கேயுரிய நெறியாளராகத் தம்மைத் ‘தகவமைத்து’க் கொண்டுவிட்டவர்.
திமுக பிரதிநிதிகளைப் பேசவிடாமல் செய்வதும் ஒருவார்த்தைப் பேசத் துவங்குவதற்குள் பல நூறு கேள்விகள் கேட்பதுமாக இவரின் ‘முன்னோர்களிடமிருந்து’ மிகச் சுலபமாக ‘நெறியாளர் கலையைக்’ கற்றுத் தேர்ந்தவர்.

இத்தகைய அமைப்பில் இவர்கள் மனுஷ்யபுத்திரனை நோக்கி சரமாரிக் கேள்விகளை வீசி அவர் பதில் சொல்லாமல் தவித்துப்போகவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார்களோ என்னவோ வழக்கம்போல் அவர்களின் ‘மூன்றரை ஆண்டுக்கால பாணியில்தான்’ விவாதத்தை ஆரம்பித்தனர்.

ஆனால் மனுஷ்யபுத்திரனின் ‘எதிர்கொள்ளல்’ வேறு மாதிரி அமைந்துவிட்டது. 

மக்கள்நலக்கூட்டணியினரையும் சரி, கார்த்திகைச் செல்வனையும் சரி போட்டுத் தாளித்து எடுத்துவிட்டார் மனுஷ்யபுத்திரன்.

இவர்களின் எந்தக் குறுக்கீட்டிற்கும் பலியாகவில்லை அவர். இவர் பேச அவர்களும் பேச இவரை எப்படியாவது வாயடைத்து உட்காரவைத்துவிட அவர்கள் செய்த முயற்சி இறுதிவரை பலிக்கவே இல்லை.

குழாயடிச் சண்டையில் இருவர் அல்லது மூவர் நால்வர் என்று பேசியபோதும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதில் சளைக்காமல் இருந்து சாதித்தார் மனுஷ்யபுத்திரன். சில விஷயங்கள் புரிபடாமல் போய்விட்டனவே தவிர மற்றவர்களின் வாதங்களை விடவும் மனுஷ்யபுத்திரன் வாதங்கள் அதிகம் புரிந்தன.

இவருக்கும் ஆளூர் ஷாநவாஸுக்கும் நடந்த வாக்குவாதம்போல் தோன்றினாலும் மொத்த விஷயங்களையும் ஒருங்கிணைத்துத்தான் பதில் சொன்னார் மனுஷ்யபுத்திரன். (விவாத பங்கேற்பாளர்களில் ஆளூர் ஷாநவாஸைப் பற்றி எனக்கு வேறு நல்ல மதிப்பீடுகள் உள்ளன என்பது வேறு விஷயம்)

மனுஷ்யபுத்திரனின் பல வாதங்கள் சிந்தனைக்குரியவை. அவர் எடுத்துவைத்த ஆணித்தரமான வாதங்கள் சில;

1)‘அதிமுக தன் அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடி ஒளிகிறது.  அவர்கள் கட்சிகளிலிருந்து யாரையும் பதில் சொல்ல அனுப்பாமல் சில proxyகளை அனுப்புகிறது. மக்கள்நலக் கூட்டணியினருக்கும் அதிமுக பிராக்சிகளுக்கும் நாங்கள் தினமும் வந்து பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?’

2)‘ஒரு ஆளும் கட்சியின் நாலரை ஆண்டுக்கால மக்கள் விரோதக் குற்றச் செயல்களைப் பேசவேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவைக் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்ன?’

3)‘விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலைஞரை தலித்துகளின் கடவுள் என்றாரே எந்த உணர்வின் அடிப்படையில் அது சொல்லப்பட்டது?’

4)‘திமுகவின் சமூகநீதிக்கான போராட்டங்களை, சாதனைகளை அத்தனை எளிதில் நீங்கள் கடந்துசென்றுவிட முடியுமா?’

5)‘இன்று ம.ந.கூவை திடீர்ப் பாசத்துடன் ஆதரிக்கும் நடுநிலை ஊடகங்கள் எப்போதாவது விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களைக் கண்டுகொண்டதுண்டா? ம.ந.கூ மேல் ஏன் இந்த திடீர்ப் பாசம்?’

6)‘பாஜகவுக்கு ஒரு போலியான முக்கியத்துவத்தை ஊடகங்கள் உண்டாக்கி அதன் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் உருவாக்கப்பட்டதுபோல் இப்போதும் செயல்படவேண்டிய ரகசியமென்ன? அப்போது மூன்றாவது அணி அதிமுகவுக்கு ரகசியமாக உதவியதுபோல் இந்த அணியும் உதவும் என்பதுதானே?’

7)‘கடந்த காலம் முழுக்க மாறி மாறி கூட்டணி அமைத்தவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பு ஆட்சியில் பங்கு கேட்டு அதற்கான ரெஸ்பான்ஸ் இல்லையென்றதும் மாற்றத்திற்கான புதிய சக்தி என்பது யாரை ஏமாற்ற?’

8)‘மக்கள் நலன் சார்ந்து அப்படி இவர்கள் நடத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டங்கள் என்னென்ன?’

9)‘மக்கள்நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான் வாக்குவங்கி உள்ள கட்சி. இடதுசாரிகளுக்கோ வைக்கோவுக்கோ வாக்குவங்கி என்ன என்பது ஊரறிந்த ரகசியம்’ – என்ற மனுஷ்யபுத்திரனின் சரமாரியான கேள்விகள் அதிகம் கவனம் பெறவேண்டியவை.

மக்கள் நலக்கூட்டணியை ஒரு புறத்தில் வைப்போம்.

இது தேர்தல் காலம் என்பதால் வாக்கு வங்கி குறித்தும் பேசவேண்டியது அவசியமாகிறது.

அதாவது அதிமுக சென்ற நாடாளுமன்றத்தில் வாங்கிய அதே வாக்குகள் வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுகவுக்கு வரும் என்ற ஒரு வாதத்தை ‘ஊடக மகாப்பிரபுக்கள்’ திரும்பத் திரும்ப முன்வைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வாதம் என்பது-

அதிமுக சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகிதம் வாக்குகள் பெற்றன என்பது அவர்கள் கூற்று.

தேர்தல் வெற்றியையும், கோர்ட்டு தீர்ப்புகளையும் கண்களை மூடிக்கொண்டு ஏற்றாக வேண்டிய சமூகத்தில் இருக்கிறவர்கள் நாம். அதிமுக வெற்றி பெற்ற கட்சி என்பதனால் 44 சதவிகிதம் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

இந்த 44 சதவிகிதம் எப்படி வந்தது?

அதாவது இந்தியா முழுமைக்கும் மோடி அலை வீசிற்று. மோடிதான் பிரதமர் என்ற எண்ணம் இந்தியா பூராவும் விதைக்கப்பட்டது.

அதனால் இந்தியா முழுமைக்குமான பெருவாரியான ஓட்டுக்கள் மோடிக்கு ஆதரவாக விழுந்தன.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வேறொரு சிந்தனைதான் பலமாக எழுப்பப்பட்டது.

பாஜகவுக்குத் தமிழகத்தில் வேர்கள் இல்லை. அதனால் மோடிக்கு ஆதரவான வாக்குகள் தமிழகத்தில் ‘வருவதற்கு’ வாய்ப்பில்லை. காங்கிரஸில் தகுந்த ஆள் இல்லை. அதனால் காங்கிரஸ் நாடாளுமன்றத்தேர்தலில் ‘கணக்கிலேயே’ இல்லை.

ஆகவே, வேறொரு சிந்தனையும், வேறொரு செயல்திட்டமும் இங்கே முன்வைக்கப்பட்டது.
 தேர்தல் முடிவுகளில் யாருக்கும் மெஜாரிடி கிடைக்காது.
 

எல்லாக் கட்சிகளுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்றுதான் வரும்.


அப்படி எல்லாக் கட்சிகளுக்கும் மெஜாரிடி இல்லாமல் போகும்போது தமிழகத்தின் அத்தனைத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று போகும் ஜெயலலிதாவைத்தான் மற்றவர்களும் பிரதமர் பதவிக்கு முன்நிறுத்துவார்கள் என்ற சிந்தனை இங்கே விதைக்கப்பட்டது.

ஆம் மிக வலுவாக விதைக்கப்பட்டது.

அப்படி ஒரு நிலைமை வந்தால் அதில் ஜெயலலிதா தம்மை ‘எப்படியாவது முன்னிறுத்திக் கொள்வார்’- என்றே தமிழன் நினைத்தான்.

அந்த சிந்தனையை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா தம்மைத் தாமே வேட்பாளராக நிறுத்திக்கொண்டார்.

‘அடுத்த பிரதமர் தான்தான்’ என்பதைப் போகுமிடங்களில் எல்லாம் சொல்லிவந்தார்.
‘எனக்கு ஓட்டுப் போடுங்கள் நான் பிரதமராக வருவேன்’ என்றார்.

அதிமுக பேச்சாளர்கள் அத்தனைப்பேரும் ‘அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்றே உரக்கக் கூவினர்.
இந்தக் கூவல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்படிப் பார்த்துக்கொண்டனர்.

முப்பத்தெட்டுப்பேர் அல்லது முப்பத்தொன்பது அதிமுகவினர் எம்பிக்களாக வந்தால் எப்படி ஒரு கட்சியின் தலைவர் பிரதமராக வரமுடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தேவேகௌடா உதாரணமாகக் காட்டப்பட்டார்.

இருபது சொச்சம் எம்பிக்களை வைத்துக்கொண்டிருந்த தேவேகௌடாவே –

இந்த ‘வே’ ஒரு முக்கியமான ‘வே’. ஆமாம், தேவேகௌடா’வே’ பிரதமர் ஆகும்போது

அம்மா ஆகமாட்டார்களா?

என்ற சிந்தனை தமிழனின் மனதில் மிக ஆழமாக விதைக்கப்பட்டது.

அதனால் ‘அடுத்த பிரதமர் ஒரு தமிழர்’ என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டான் தமிழன்.

அதிமுகவின் 44 சதவிகிதம் என்பது இப்படி வந்ததுதான். இதற்காக வந்ததுதான்.

ஆனால்-
மோடி தனி மெஜாரிடியில் வந்துவிட்டார் என்றதும் ‘அம்மா பிரதமர்’ என்ற செய்தியெல்லாம் மறக்கவைக்கப்பட்டது.

‘அப்படிச்சொல்லித்தான் 44 சத ஓட்டுக்கள் பெற்றார்’ என்ற விஷயம் மூழ்கடிக்கப்பட்டது. அவர்களுக்குத் ‘தேவையென்னவோ’ அதனை மட்டும் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.

ஆமாம்-

அதிமுகவின் ஓட்டுவங்கி 44 சதம் என்பதை மட்டுமே தூக்கி நிறுத்தினார்கள்.

ஏனையச் செய்திகள் மிகமிக சவுகரியமாக மறக்கடிக்கப்பட்டன.

இதுதான் தமிழகம்.

ஆகவே ‘44 சதவிகித ஓட்டு’ என்பது ‘ஒரு தமிழன் பிரதமராக வருவதற்கு’ என்று மக்களை நம்பவைத்தால் சுலபமாக வரக்கூடிய சதவிகிதம்தானே தவிர,


குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஓட்டுவங்கி அல்ல.

இதனை அறிவார்ந்த மகாப்பிரபுக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து மதுவிலக்கு விஷயம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மறுபடியும் மது கொண்டுவரப்பட்டது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் கருணாநிதியே மறுபடியும் மதுவிலக்கைக் கொண்டுவந்தார் என்ற விஷயத்தை மட்டும் மறந்துவிடுவார்கள் இந்த ‘நன்மக்கள்’.

அப்படி கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கை மறுபடியும் நீக்கியவர் மனிதப் புனிதரான எம்ஜிஆர் என்பது மட்டும் இவர்களுக்கு மிகச் சவுகரியமாய் மறந்துவிடும்.

இதனைச் சொல்லாமலேயேதான் இவர்கள் தங்கள் வாதங்களை வடிவமைத்துக்கொள்வார்கள்.

யாராவது இவர்களை அதுபற்றிக் கேட்டுவிட்டால் (கவனியுங்கள். ‘கேட்டால்’ மட்டுமே)”சரி அப்படியே இருக்கட்டுமே. எம்ஜிஆர் நீக்கிய மதுவிலக்கை கருணாநிதி திரும்பவும் ஆட்சிக்கு வந்தாரே அப்போது ஏன் கொண்டுவரக்கூடாது?” என்று எகத்தாளமான கேள்விகளை வீசுவார்களே தவிர எம்ஜிஆர் ஏன் நீக்கினார் என்ற சின்னஞ்சிறு கேள்வியைக்கூட இவர்கள் கேட்கமாட்டார்கள்.

இந்த நன்மக்களுக்கு சிறிதாவது அறவுணர்வு இருந்தால் கருணாநிதி கொண்டுவந்த மதுவிலக்கை எம்ஜிஆர் ஏன் நீக்கவேண்டும் என்பதுபற்றிக் கண்டித்துப் பேசிவிட்டு


– எம்ஜிஆர் மீது கண்டனக்கணைகளை வீசிவிட்டு-


கருணாநிதி திரும்பவும் நீக்கியிருக்கக்கூடாதா? என்றுதானே பேசவேண்டும்?

அந்த யோக்கியதையை எல்லாம் இந்த நன்மக்களிடம் எதிர்பார்க்கக்கூடாது.

இவர்களுடைய நோக்கம் கருணாநிதியைத் திட்டித்தீர்க்கவேண்டும் என்பதுதான்.

இந்த அரசாவது மதுவிலக்கைக் கொண்டுவரக்கூடாதா என்பது கேள்வி.

அதனைப் பாடலாகப் பாடிய கோவன் கைது செய்யப்படுகிறார். சசிபெருமாள் என்ற பெரியவர் இதற்காகவே செல்போன் டவரில் ஏறி உயிரை விடுகிறார். இத்தகு விஷயங்களுக்காக ஆட்சியிலிருக்கும் கட்சி கேள்விகளுக்குள்ளாக்கப்பட வேண்டுமா இல்லையா?

இந்த இணையதள, தொலைக்காட்சி விவாத அரங்குகளை, பத்திரிகைகளைப் பொறுத்தவரை ‘இல்லை’ என்பதும் ‘கூடாது’ என்பதும்தான் பதில்.

இதற்காக குற்றம் சுமத்தப்பட வேண்டியவர் கருணாநிதி.

கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் கருணாநிதி.

 ஏனெனில் அவர்தான் மதுவிலக்கைக் கொண்டுவந்தவர். ராஜாஜி சொல்லியும் ‘கேட்காதவர்.’

ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்களின் மிடாஸ் ஆலையிலிருந்துதானே எழுபத்தைந்து சதவிகிதம் மது வருகிறது என்பது ‘கேள்வி’ அல்ல.

கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் மதுபான தொழிற்சாலையிலிருந்து மது வருகிறதே அதை ‘முதலில்’ மூடச்சொல். என்பது இவர்களின் பதில்.

ஆளுங்கட்சி ‘மதுவிலக்கு’ கொண்டுவந்தால் கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்கள் என்ன காளப்பனுக்கும் கோலப்பனுக்கும் வேண்டப்பட்டவர்களுடையதாக இருந்தாலும் அந்தத் தொழிற்சாலையும் பாதிக்கப்படும்தானே?


அப்படி கருணாநிதிக்கு வேண்டப்பட்டவர்களின் தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாமே ஏன் அதனை ஆளுங்கட்சி செய்வதில்லை? என்பதுதானே கேள்வி.

அந்தக் கேள்வியெல்லாம் இந்த மலைவிழுங்கிகளுக்குத் தோன்றுவதில்லை.

அதுமட்டுமல்ல. இந்த ஆட்சியில் அது எத்தனைப் பேர் வேண்டுமானாலும் இருக்கட்டும் 
தற்கொலையோ கொலையோ அரசியல் சார்பாக நடைபெற்று விடுகிறது என்றால் உடனடியாக இவர்கள் உதயகுமார் பாடையைத் தூக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நடைபெற்றுவிட்ட சம்பவத்தை கண்டிக்கலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்ற தார்மிக சிந்தனையெல்லாம் அறவே கிடையாது. இவ்வளவு அக்கிரமங்கள் இந்த ஆட்சியிலே நடக்கலாமா என்ற சிந்தனையோ எண்ணமோ சுத்தமாகக் கிடையாது.

‘அன்றைக்கு உதயகுமாரைக் காவல்துறை அடித்துக்கொல்லவில்லையா, அவன் தன்னுடைய மகனே இல்லையென்று அவன் தந்தையைச் சொல்லவைக்கவில்லையா?’ என்ற புலம்பல்தான் 

இவர்களுக்கு.  

மீண்டும் மீண்டும் உதயகுமார், உதயகுமார் உதயகுமார்தான்.

26.11.1980ம் ஆண்டு இவர்களின் வழிகாட்டி இதயதெய்வம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணாயாளராக இருந்த 
 சுப்பிரமணியப் பிள்ளையின் படுகொலை குறித்து இவர்களுக்குத் தெரியுமா என்றால் தெரியாது, 

தெரியாது, தெரியவே தெரியாது.

ஏனெனில் அது எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற படுகொலை.

அந்தப் படுகொலை தற்கொலை என்று பெயர் சூட்டப்பட்டதெல்லாம் இந்த இணைய மொண்ணைகளுக்குத் தெரியாது. உதயகுமாரை மட்டும்தான் தெரியும்.

அந்தச் சம்பவம் குறித்தும், படுகொலை குறித்தும் நீதிபதி பால் தலைமையில் கமிஷன் போடப்பட்டதும் அவர் கொடுத்த அறிக்கையில் இருந்த வாசகங்களும் பாண்டேக்களுக்கும், ஹரன்களுக்கும் செல்வன்களுக்கும் தெரியாது. ஆனால் ‘விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் கருணாநிதி’ என்று சர்க்காரியா கமிஷன் சொன்னது மட்டும் இணயப் பரமேஸ்வரன்களுக்கும், ஸ்மார்ட்போன் மகாவிஷ்ணுக்களுக்கும் விவாத கஜபதிகளுக்கும் தெரியும்.

உங்கள் மனதில் உள்ள அரசியல் வன்மங்களுக்காகப் பாதித்தகவல்களையும் அரைவேக்காட்டு சித்தாந்தங்களையும் பதிவுகளாக, தரவுகளாக, வரலாற்று உண்மைகள் போல் செப்பிடு வித்தைக் காட்டும் வாதங்களைப் பரப்பாதீர்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர திமுகவை விமர்சிக்காதீர்கள் என்று அல்ல. 


 திமுகவை மட்டும்  தவறுதலாக விமர்சித்து அதைவிட மோசமானவர்களை புனிதர் என்றும்  புடம்போட்ட தங்கம் என்றும் சொல்லி தவறானவர்களை ஆட்சியில் உட்காரவைத்து ஆரத்தி எடுத்துக்கொண்டிருக்காதீர்கள் என்றும்தான் சொல்கிறோம்.

ஊடக அறம் என்பதற்கு சிறிதாவது இடமளியுங்கள் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்.











46 comments :

வருண் said...

அமுதவன் சார்!

உங்க பதிவை வாசிக்கும்போது என் பாஸ் என்னிடம் அடிக்கடி சொல்வதுதான் ஞாபகத்துக்கு வரும்..

அதாவது அரசியலைப் பற்றி இளைய சமுதாயம் (அவர் பசங்களையும் சேர்த்து) கவலைப் படாமல் ஏனோதானோவென்று இருப்பது மிகப் பெரிய தவறு. ஏனென்றால் இந்நாடு (அமெரிக்கா) மோசமான ஆட்கள் கையில் போவதற்கு நீங்களும் காரணமானவர்களாகிவிடுவீர்கள். you really have to watch what is going on in politics. Otherwise you will be ruled by a "devil" and that's your fault that you did not pay attention to politics and you let the devil take over the power. :)

நண்பா said...

அருமை அருமை..
உங்களின் கருத்துக்கள்/கேள்விகள் எல்லாம் நடுநிலையாளர்கள், பொது மக்கள் யோசிக்க வேண்டும்..
வாழ்க வளமுடன்.

Amudhavan said...

வருண் said...
\\உங்க பதிவை வாசிக்கும்போது என் பாஸ் என்னிடம் அடிக்கடி சொல்வதுதான் ஞாபகத்துக்கு வரும்.. அதாவது அரசியலைப் பற்றி இளைய சமுதாயம் (அவர் பசங்களையும் சேர்த்து) கவலைப் படாமல்ஏனோதானோவென்று இருப்பது மிகப் பெரிய தவறு. ஏனென்றால் இந்நாடு (அமெரிக்கா) மோசமான ஆட்கள் கையில் போவதற்கு நீங்களும் காரணமானவர்களாகிவிடுவீர்கள்.\\
நிஜம்தான் வருண். அவர் சொன்னதுதான் இங்கே நடந்துகொண்டு இருக்கிறது. நம் மக்களெல்லாம் அவர்களுக்கு என்ன அன்றைக்குப் பரிமாறப்படுகிறதோ அது மட்டும்தான் சாஸ்வதம் என்றே நினைக்கிறார்கள். எழுபதுக்குப் பிறகுதான் இம்மாதிரியான சிந்தனைகள் இங்கே அதிகம் விதைக்கப்பட்டன என்று நினைக்கிறேன். சில படித்தவர்கள், அல்லது 'படித்திருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள்கூட' இம்மாதியான போதைகளுக்கு ஆளாகித்தான் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே சோகம்.

Amudhavan said...

நண்பா said...
\\அருமை அருமை.. உங்களின் கருத்துக்கள்/கேள்விகள் எல்லாம் நடுநிலையாளர்கள், பொது மக்கள் யோசிக்க வேண்டும்..\\
வாருங்கள் நண்பரே, தங்கள் பாராட்டிற்கு மிகவும் மகிழ்ச்சி.

Anonymous said...

//இணயப் பரமேஸ்வரன்களுக்கும், ஸ்மார்ட்போன் மகாவிஷ்ணுக்களுக்கும் விவாத கஜபதிகளுக்கும்//

I don't have any political views. But, the way you have written Tamil is interesting to read.

Amudhavan said...

Alien said...
\\I don't have any political views. But, the way you have written Tamil is interesting to read\\
வாங்க ஏலியன், சௌக்கியமாயிருக்கீங்களா? மிகவும் நன்றி.

நம்பள்கி said...

படித்தேன்! என்ன உழைப்பு!
பழ. கருப்பையா ஆனுபவசாலியான அரசியல்வாதி என்றாலும் விவிவாததுக்கு சென்றது தவறு. அவருக்கு தந்தி ஒரு சார்பு என்றும், அப்படி நமது கருத்து நன்றாக இருந்தாலும்...அங்கு எடுபடாது..எடிட் செய்து இருப்பார்கள். மேலும்,அதிமுக பார்வையில் அவர் துரோகி!

தெரிந்தே ஆடு கசப்புக்கு சென்ற மாதிரி, ஊடக backup, இருக்கும் சின்னப் பையன்
கிட்டே ஏன் போகணும்? இது அவர் தவறு!

வெளியில் நாலுபேர் முன்னிலையில் விவாதம் செய்ய கூப்பிட்டு இருக்கவேண்டும். காரணத்தை புட்டு வைத்து இருக்கணும்: அங்கு சென்றால் நேர்மையான விவாதம் இருக்காது என்று! இதையே நான் ஏன் பதிவில் சொல்லியிருக்கிறேன். பொது மேடையில் நானே அவர்களுடன் விவாதம் செய்வேன் என்று! But, not inside the television station as I know how these debates go one...as I have seen Arnap!

BTW, What happened to the soft spoken pleasant personality (a good anchor) Mr. Panai Rai?

உங்கள் இந்த பதிவு சினிமா பகுதியில் வந்ததால் பார்க்கத் தவறி விட்டேன்.

Anonymous said...

//அப்படி ஒரு நிலைமை வந்தால் அதில் ஜெயலலிதா தம்மை ‘எப்படியாவது முன்னிறுத்திக் கொள்வார்’- என்றே தமிழன் நினைத்தான். ///
தமிழன் ஏன் அப்படி நினைத்தான்... எத்தனை பேர் இத்தனை ஆண்டும் முழங்கியும் அப்படிதான் தமிழன் நினைத்தான் என்றால் அத்தனை தமிழனும் முட்டாள்கள் என்பதை ஏற்க வேண்டும்... இல்லை உங்களைப் போன்றோர் சொல்வதில் ஏதோ பெரும் பிரச்சனை தவறு இருக்க வேண்டும்...இதில் இரண்டாவதை நீங்கள் ஏற்க மாட்டீர்கள்..ஆக முதல்தான் (உங்களைப் பொருத்தவரை) சரி.....

தி.தமிழ் இளங்கோ said...

அமுதவன் அய்யா அவர்களுக்கு வணக்கம். பக்கச்சார்பு ஏதுமின்றி தி.மு.கவை மட்டுமல்லாது அ.தி.மு.க.வையும் விமர்சனம் செய்த நல்ல வெளிப்படையான அரசியல் அலசல்.

பொதுவாகவே இந்திய ஊடகங்கள் அன்றிலிருந்து இன்றுவரை ’கருணாநிதி எதிர்ப்பு அரசியல்’ செய்வதிலேயே குறியாக இருந்து வருகின்றன. எனவே ‘பாண்டேக்கள்’ அப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை. அ.தி.மு.க இணையதளத்தில் ஊடுருவி திமுகவை ’விமரிசனம்’ செய்வதைப் போல , தி.மு.க வானது இணையதளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.. இதற்கு கலைஞரும் ஒரு காரணம். ஆளுங்கட்சியைப் பற்றி ஒரு சின்ன விமர்சனம் என்றாலும் பாயும் ‘அவதூறு வழக்குகள்’ கலைஞர் கருணாநிதியைப் பற்றி எவ்வளவு மோசமாக திட்டினாலும் போடப் படுவதில்லை

Amudhavan said...

நம்பள்கி said...
\\படித்தேன்! என்ன உழைப்பு!\\

நன்றி நம்பள்கி.

\\தெரிந்தே ஆடு கசப்புக்கு சென்ற மாதிரி, ஊடக backup, இருக்கும் சின்னப் பையன் கிட்டே ஏன் போகணும்? இது அவர் தவறு!\\

தெரிந்தேதான் போனார் என்பது உண்மை. இப்போதுகூட தன்னுடைய மூக்கை உடைப்பதுபோல் சொல்லப்படும் பல பதில்களை அதே விவாதம் இரவு பதினோரு மணிக்கு மறு ஒளிபரப்பு ஆகும்போது எடிட் செய்துவிட்டுத்தான் ஒளிபரப்புகிறார்கள் இந்த புல்தடுக்கி பயில்வான்கள்.
இவர்களிடம் வாதத்தால் வெல்லமுடியும் என்பதுதான் பழ.கருப்பையாவின் நிலைப்பாடு. பழ கருப்பையாவின் படிப்பறிவுக்கு முன்னால் இவர்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது பழ கருப்பையாவை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

\\BTW, What happened to the soft spoken pleasant personality (a good anchor) Mr. Panai Rai?\\

இம்மாதிரியான விவாதங்களுக்கு மட்டுமில்லை, தொலைக்காட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி பிரணாய்ராய்தான். சில பொருளாதார சிக்கல்களால் அவர் முன்பைப்போல் பிரகாசிக்க விரும்புவதில்லை என்று நினைக்கிறேன்.தவிர, அவரது வளர்ப்பு மகள் பர்கா தத் அவர் பார்க்கவேண்டிய பல வேலைகளைப் பார்த்துவிடுவதால் பிரணாய் ராயின் வேலைப்பளு குறைந்துவிடுகிறது போல.

\\உங்கள் இந்த பதிவு சினிமா பகுதியில் வந்ததால் பார்க்கத் தவறி விட்டேன்.\\
தமிழ்மணத்தில் என்ன காரணத்தாலோ பதிவுகள் இணைவதில் சிக்கல்.அதையும் மீறி இணையும் பதிவுகள் இம்மாதிரி கண்ட இடத்தில் சென்று பதிந்துவிடுகிறது. சில பதிவுகள் இணைத்து இரண்டொரு நாட்களுக்குப் பிறகுதான் தமிழ்மணத்தில் தெரியவே ஆரம்பிக்கிறது.






Amudhavan said...

Anonymous said...

//அப்படி ஒரு நிலைமை வந்தால் அதில் ஜெயலலிதா தம்மை ‘எப்படியாவது முன்னிறுத்திக் கொள்வார்’- என்றே தமிழன் நினைத்தான். ///
\\தமிழன் ஏன் அப்படி நினைத்தான்... எத்தனை பேர் இத்தனை ஆண்டும் முழங்கியும் அப்படிதான் தமிழன் நினைத்தான் என்றால் அத்தனை தமிழனும் முட்டாள்கள் என்பதை ஏற்க வேண்டும்... இல்லை உங்களைப் போன்றோர் சொல்வதில் ஏதோ பெரும் பிரச்சனை தவறு இருக்க வேண்டும்...இதில் இரண்டாவதை நீங்கள் ஏற்க மாட்டீர்கள்..ஆக முதல்தான் (உங்களைப் பொருத்தவரை) சரி.....\\

நண்பரே இந்தப் பதிவின் முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள். தமிழன் ஏன் அப்படி நினைத்தான் என்பதற்கு பதில் சொல்ல வேண்டியவை ஊடகங்கள். ஊடகங்களின் தாக்கம்- அதுவும் தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களின் தாக்கம் அத்தனை சாதாரணமானது அல்ல. சகல விஷயத்தையும் எழுபதுக்கும் பின்னிருந்து, அல்லது எண்பது, தொண்ணூறுகளுக்குப் பின்னிருந்துதான் இவனால் ஆரம்பிக்கவே முடிகிறது. இப்படியே பழக்கப்பட்டுப்போய்விட்டது ஒரு முழுத் தலைமுறை.
இது அரசியலில் மட்டுமல்ல இன்னும் பல்வேறு துறைகளிலும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதில் ஏதாவது ஒரேயொரு உதாரணத்தை நான் இங்கு சொல்லிவிட்டால்கூட விவாதம் திசை திரும்பிவிடும். ஆகவே பிறிதொரு சமயம் பேசலாம். வருகைக்கு நன்றி.

Amudhavan said...

தி.தமிழ் இளங்கோ said...
\\அ.தி.மு.க இணையதளத்தில் ஊடுருவி திமுகவை ’விமரிசனம்’ செய்வதைப் போல , தி.மு.க வானது இணையதளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.. இதற்கு கலைஞரும் ஒரு காரணம். ஆளுங்கட்சியைப் பற்றி ஒரு சின்ன விமர்சனம் என்றாலும் பாயும் ‘அவதூறு வழக்குகள்’ கலைஞர் கருணாநிதியைப் பற்றி எவ்வளவு மோசமாக திட்டினாலும் போடப் படுவதில்லை\\

தங்களின் நுட்பமான கருத்துக்களுக்கு நன்றி. 'அதிமுக இணையதளத்தில் ஊடுருவி திமுகவை விமர்சனம் செய்வதுபோல'... அதிமுக இணையதளத்தில் ஊடுருவியிருப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? 'இணையதளத்தில் ஊடுருவியிருக்கும் சில சக்திகள்' திமுகவை எதிர்க்கவேண்டும் என்பதற்காக அதிமுகவை ஆதரிக்கிறார்கள்.
திமுக இணையதளத்தை மட்டுமல்ல தொலைக்காட்சியையும்கூட சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சொல்லப்போனால் பத்திரிகைகளைப் பயன்படுத்தியதுபோல் எலெக்ட்ரானிக் மீடியாவைப் பயன்படுத்திக்கொள்வதில் ஒரு மாமாங்கம் பின்தங்கிவிட்டது திமுக. இப்போதுதான் அதற்கான சிந்தனையே அவர்களுக்கு வந்திருக்கிறது. பார்க்கலாம்...............
அவதூறு வழக்குகள், கருணாநிதியை எவ்வளவு கேவலமாக எழுதினாலும் கண்டுகொள்வதில்லை, அதே சமயம் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைக்கூட எழுதமுடியாது........ என்பதெல்லாம் கருணாநிதியின் நல்ல உள்ளத்திற்குக் கிடைத்த பரிசுகள்.
இம்முறை திமுக ஆட்சிக்கு வரும் என்று அவர்கள் சொல்கிறார்கள். அப்படி வந்தால் இந்தத் தவறுகள் எல்லாம் களையப்படும் என்று நினைக்கிறேன். இளைஞர்கள் வசம் ஆட்சியும் அதிகாரமும் போகும்போது 'மறப்போம் மன்னிப்போம்' என்பதுபோன்ற கலைஞரின் பத்தாம்பசலி கருத்தோட்டங்களுக்கெல்லாம் இடமிருக்கப்போவதில்லை.


ஜோதிஜி said...

நீங்க சொன்ன அளவுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் உங்க ஆதங்கம், ஆத்திரம்,கோபம் எல்லாமே வார்த்தைகளாக வந்து விழுந்துள்ளது. சில இடங்களில் மாற்றுக் கருத்து உள்ளது. மீண்டும் வருகின்றேன்.

Peppin said...

அருமையான அலசல் அய்யா! நன்றி நல்லதொரு பதிவிற்கு!!!!

காரிகன் said...

அமுதவன் ஸார்,

நீங்கள் ஒரு die hard தி மு க விசுவாசி என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள். ஜெயலலிதாவை ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள் என்ற உங்களின் ஆதங்கம் மட்டுமே இந்தப் பதிவிலும் தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட படி தி மு க வின் பிரசன்னாவின் பேச்சினால் யாரும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் இத்தனை தூரம் உயர்த்திப் பிடிக்கும் அளவுக்கும் தி மு க (கருணாநிதியின் தலைமைக்குப் பிறகு) )ஒன்றும் தமிழருக்காக தன்னமில்லாத சேவை செய்த இயக்கம் அல்ல. எத்தனை ஊழல்கள் அவர்கள் மீதும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. சொன்னால் ஏன் எம் ஜி ஆர் செய்யவில்லையா ஜெயலலிதா செய்யவில்லையா என்று கேட்பீர்கள். இதுதானே தி மு க வினரின் ஒரே பாதுகாப்பு. இந்தப் பதிவை படித்ததும் எனக்கு கொஞ்சம் அயர்ச்சியாகவே இருந்தது. ஏன் இத்தனை ஆவேசம் என்று தெரியவில்லை.

ஒரு காலத்தில் சன் டிவி மட்டுமே இருந்தது. அவர்களால் அ தி மு க வை பற்றிய ஒரே விதமான மூளைச் சலவை செய்ய முடிந்தது. இப்போதோ தந்தி, தமிழ் 7, புதிய தலைமுறை, பாலிமர் என்று பல தனியார் டிவிகள் வந்துவிட்டன. அவர்கள் கேட்கும் கேள்விகள் சம்பிரதாயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பதில் சொல்ல வேண்டிய அரசியல்வாதிகள் ஓடிப்போனால் அதற்கும் பேட்டி எடுப்பவர்களையும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? தி மு க அனுதாபி டி வி யாக இருந்தால் நீங்கள் இதைப் போல கேட்பீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஜெயலலிதாவை எதிர்ப்பதில் ஒரு பிராமண துவேஷம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். மேலும் அவர் ஒரு பெண். அதை விட அவர் ஒரு நடிகராக இருந்தவர். இது எல்லாமே சிலருக்கு அவர் மீது பயங்கர கோபத்தை வரவழைப்பதில் ஆச்சர்யங்கள் இல்லை.

ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்கப் போவதில்லை என்பதே உண்மை. ஆனால் கண்டிப்பாக திமுக கருணாநிதிக்குப் பிறகும் இங்கே உயிர் வாழும். திராவிட கட்சிகளின் தாக்கம் இல்லை என்றால் தமிழ் நாடு வேறு வண்ணம் பூசிக்கொள்ளும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

Amudhavan said...

Peppin said...
\\அருமையான அலசல் அய்யா! நன்றி நல்லதொரு பதிவிற்கு!!!!\\
பெப்பின் அவர்களுக்கு நன்றி.

Amudhavan said...

காரிகன் said...
\\ஜெயலலிதாவை எதிர்ப்பதில் ஒரு பிராமண துவேஷம் இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். மேலும் அவர் ஒரு பெண். அதை விட அவர் ஒரு நடிகராக இருந்தவர். இது எல்லாமே சிலருக்கு அவர் மீது பயங்கர கோபத்தை வரவழைப்பதில் ஆச்சர்யங்கள் இல்லை.\\

நீங்கள் சொன்ன காரணங்களைக் காட்டிலும் வலுவான நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே பதிவைப் படித்து அயர்ச்சியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மேலும் அயர்ச்சியைக் கூட்டவேண்டாம் என்பதற்காக நான் எதுவும் எழுதப்போவதில்லை. சிறிது நேரம் முன்பு முகநூலில் உலவிக்கொண்டிருந்தபோது இதனைப் படித்தேன். மொத்தத்தையும் ஏற்கவில்லை என்றபோதிலும் சிலவற்றை ஏற்கமுடிகிறது. ஜஸ்ட் ஒரு பார்வைப் பாருங்கள்.

1. வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானது ..
2 , சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
3 , பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
4, அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
5, கூடங்குளம் மக்களை ஏமாற்றியது -
6, பஸ் கட்டணம் உயர்தியது.
7, பால் விலையை உயர்த்தியது.
8, மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
9, கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
10, ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
11, தொழில் வளர்ச்சியை முடக்கியது .
12, தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
13, சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
14, கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
14, நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
15, கெயில் விவகாரத்தில் விவசாயிகளை வாட்டியது.
16, முல்லை பெரியாரில் மக்களின் முட்டியை உடைத்தது.
17, வில்லேஜ் & தாலுக் அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
18, சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
19, உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
20, அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
21, தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
22, எதிர்கட்சியை உடைத்தது.
23, கொடநாட்டில் உல்லாச வாசம்.
24, அரசு ஊழியர்களை தற்கொலை செய்ய வைத்தது.
25, பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
26, மீனவர்களை ஜெயிலில் தவிக்க விட்டது.
27, கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
28, படகுகளை பறிகொடுக்க வைத்தது.
29, மாற்றுதிரணாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
30, மக்கள் நல பணியாளர்களை மரணத்தை நோக்கி உந்தியது.
31, இலக்கு வைத்து மது விற்றது.
32, தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
33, காவல் துறையை ஏவல் துறையாக்கியது.
34, ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
35, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
36, மந்திரிகள் மண் சோறு தின்றது.
37, ஊழலில் திளைப்பது.
38, தாது மணலை கொள்ளையடித்தது.
39, ஆவின் ஊழல் .
40, கமல்ஹாசனை கலங்கடித்தது.
41, விஜயை வியர்க்க வைத்தது .
42, சினிமா விழாவை சின்னாபின்னாமாக்கியது.
42, சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
43, கனிமவளத்தை களவாடியது.
44, அப்துல் கலாமை அவமதித்தது.
45, ஊழல் IAS அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
46, 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
47, முட்டை, பருப்பு என அனைத்திலும் ஊழல்.
48, மின்சாரத்தில் கமிஷன் .
49, மணல் கொள்ளை.
50, லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
51 , பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
52, நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
55, ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
56, தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
57, திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
58, பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
59, செவிலியரை சொல்லியடித்தது.
60, உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
61, ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
62 ,RK நகரில் இமாலய கள்ள ஓட்டு.
63, செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
64, ஸ்டிக்கர் ஒட்டியது.
65, கோவனை கைது செய்தது.
66, பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
67, மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
68, ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
69, வெற்று வார்தைகளில் வர்ணஜாலம் காட்டியது.
70, விஷன் 2023 வெளியே வராமலே போனது .....
71, உபி சகோதரி உலகையே வாங்கி குவிப்பு .


Anonymous said...

Four dogs lol lolling.barbaric noise.

ஜோதிஜி said...

நான் சில கருத்துக்களை எழுதலாம் என்று நினைத்து இருந்தேன். நான் எழுத நினைத்த விசயங்களை விட கீழே கொடுத்துள்ள கட்டுரை கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது.

இந்தக் கட்டுரையை இன்று வாசித்தேன். உங்கள் பார்வைக்கு.உங்கள் பதிவுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும் சேமிப்புக்காக. உங்கள் கருத்தறிய ஆவல்.

ஜோதிஜி said...

விஜயகாந்த் ஏன் திமுகவுடன் கூட்டணி அமைக்கத் தயங்குகிறார்?

அதுவரை விஜயகாந்த் மட்டும் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுவந்த நிலைமையை மாற்றிக் கணிசமான எண்ணிக்கையுடன் சட்டப் பேரவைக்குச் செல்வதன் மூலம், தேமுதிகவை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உயர்த்த முடியும் என்பதால்தான் 2011-இல் அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தார் விஜயகாந்த். அவரது எதிர்பார்ப்பையும் தாண்டி, தேமுதிக அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக, திமுகவைவிட அதிக இடங்களில் வெற்றியும் பெற்றது.
இப்போது நிலைமை அதுவல்ல. திமுக கூட்டணியில் இணைவதால், அதிமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் அடுத்த சட்டப் பேரவையில் இருப்பது சாத்தியமல்ல என்பது விஜயகாந்துக்குத் தெரியும். 2006 தேர்தலில் காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் என்று மிக வலுவான கூட்டணி திமுகவுக்கு இருந்தும்கூட, அதிமுக 61 இடங்களில் வெற்றி பெற்றது என்றால், இப்போது அதைவிட அதிகமான இடங்களை நிச்சயம் பெற முடியும் என்று விஜயகாந்த் கணக்குப் போடுகிறார். தேமுதிக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணியில் இடம் தரப்படாது என்பது அவருக்குத் தெரியும்.

ஜோதிஜி said...

தேமுதிக தலைமையின் மிகப் பெரிய பயம், திமுகவின் நம்பகத்தன்மை. ஸ்டாலினுக்குப் போட்டியாக விஜயகாந்தை வளர்ப்பதிலும், தேமுதிகவை வலிமையான சக்தியாக வளரவிடுவதிலும் திமுகவுக்கு என்ன அக்கறை என்கிற யதார்த்த உண்மையை விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
"அதிமுகவைப் பொருத்தவரை, பேரம் பேசிக் குறைந்த இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்குத் தருவார்கள். ஆனால், தனது கூட்டணிக் கட்சிகளை வெற்றி பெறச் செய்ய எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். தொண்டர்களும் முனைந்து வேலை பார்ப்பார்கள். சுணக்கம் காட்டினால் தலைவியின் கோபத்துக்கு ஆளாவோம் என்கிற பயம் அவர்களுக்கு உண்டு. திமுகவைப் பொருத்தவரை, தலைமை நன்றாகவும், சுமுகமாகவும் இருக்கும். ஆனால், தொகுதியில் தொண்டர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யமாட்டார்கள். ஒன்று கூட்டணிக் கட்சி வேட்பாளரைக் கசக்கிப் பிழிந்து பணம் பெறுவார்கள். இல்லையென்றால் தங்களது திமுக வேட்பாளர் நிற்கும் தொகுதியில் வேலைபார்க்கச் சென்று விடுவார்கள். கூட்டணிக் கட்சியை பயன்படுத்தித் தான் வெற்றி பெறுவதில்தான் திமுக குறியாக இருக்குமே தவிர, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றி குறித்து அக்கறை காட்டாது. இதுதான் பாமக, தமுமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட எல்லா கட்சிகளின் அனுபவமும். அதனால்தான் அவர்கள் திமுக அணியில் சேர மறுக்கிறார்கள்'' என்று தமுமுக பிரமுகர் ஒருவர் கூறினார்.

ஜோதிஜி said...

தேமுதிக வாக்குகள் அப்படியே திமுகவுக்கு விழுவதுபோல, திமுக வாக்குகள் தேமுதிகவுக்கு விழாமல் போனால், திமுக ஆட்சியைப் பிடிப்பதும், தேமுதிக தெருவில் நிற்பதும் என்கிற நிலைமையல்லவா ஏற்படும்?'' என்கிற கேள்விதான் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜயகாந்தை யோசிக்க வைக்கிறது என்கிறார்கள்.
விஜயகாந்திற்கு இன்னொரு நியாயமான பயமும் இருக்கக்கூடும். அது, 1999 மக்களவைத் தேர்தலில் முரசொலி மாறனுக்குப் போட்டியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சேலத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியையும், 2009 தேர்தலில் ஈரோடில் ஈ.வெ.கி.ச. இளங்கோவனையும்போல, ஸ்டாலினுக்குப் போட்டியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னை திமுக ஏன் திட்டம்போட்டுத் தோற்கடிக்காது என்கிற விஜயகாந்தின் ஐயப்பாடு முக்கியமான காரணம். 1962 சட்டப் பேரவைத் தேர்தலில் கவியரசு கண்ணதாசனிலிருந்து தொடங்கி பலராலும் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுதான் இது.
"கூட்டணி பலத்தில் கணிசமான தேமுதிக உறுப்பினர்கள் வெற்றி பெற்று, விஜயகாந்த் தோற்கடிக்கப்பட்டால், அதனால் என்ன லாபம்? அந்த எம்.எல்.ஏ.க்கள் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்குத் தாவக்கூடும். திமுகவை ஆட்சியில் அமர்த்துவதிலும் மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதிலும் நமக்கு என்ன லாபம்? அதைவிட வலுவான மூன்றாவது அணி அமைத்து, கணிசமான வாக்குகளுடன் திமுகவை அதிக இடங்களில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளுவதுதான் புத்திசாலித்தனம், ராஜதந்திரம்'' என்று விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் கருதுவதாகத் தெரிகிறது.
தேமுதிகவைப் முன்னிலைப்படுத்தும் பாஜக அணியானாலும் சரி, மக்கள் நலக் கூட்டணியானாலும் சரி, 2006 இல் தனியாகவே நின்று போட்டியிட்ட போதே வென்ற விஜயகாந்த், இப்போது எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், வெற்றி பெறுவது உறுதி. திமுக கூட்டணியில் ஒருசில எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றாலும், விஜயகாந்த் வெற்றி பெறுவது உறுதி என்று சொல்ல முடியாது என்பதுதான் தேமுதிகவின் தயக்கத்துக்குக் காரணம்.
ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, தமது வெற்றியை உறுதிப்படுத்துவது என்கிற மூன்று நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை யோசிக்கலாம் என்று கருதுகிறார் விஜயகாந்த் என்கிறார்கள்.
திமுகவின் மூத்த தலைவர் ஒருவரிடம் தேமுதிகவின் இந்த நிபந்தனைகளைக் கூறியபோது அவர் சொன்ன பதில்: ""கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது இந்த நிபந்தனைகளை எல்லாம் போட்டிருப்பது தானே? 4% வாக்குகளை வைத்துக் கொண்டு விஜயகாந்த் அளவுக்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது!''
நன்றி: இன்றைய தினமணி

Amudhavan said...

ஜோதிஜி நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் இந்தக் கட்டுரையில் இருக்கும் சில விஷயங்கள் உண்மையாக இருக்கக் கூடும். ஆனால் கட்டுரை வந்திருப்பது தினமணியில் என்னும்போதுதான் அந்தப் பத்திரிகையின் நோக்கமும் புலனாகிறது.அவர்கள் நோக்கத்தைச் சரியாகவே நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஒரு தேர்தல் என்றாலேயே ஒரு சில கட்சிகள் மேலும் தலைவர்கள் மேலும் சில சந்தேகங்களும், சில மைனஸ் பாயிண்டுகளும் வரும். திமுக மீதும் அதன் தலைவர்கள் மீதும் வருகின்ற சந்தேகங்களையும், மைனஸ்களையும் அப்படியே அவர்களின் மீது பூசுவதும், மற்ற கட்சிகளின் மீதோ அதன் தலைவர்கள் மீதோ சந்தேகங்களோ, மைனஸ்களோ எழாதவாறு பார்த்துக்கொள்வதையும் சேர்த்தே சில பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நோக்கம் வேறு. அது சரியாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் குறித்திருப்பதுபோல் எங்கே நின்றாலும் ஜெயிக்கக்கூடிய விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் 'மட்டும்'தோற்கடிக்கப்பட்டு விடுவாராம். அப்படியென்றால் கூட்டணி இல்லாவிட்டால் அவரைத் திமுகவினர் 'தோற்கடிக்க' மாட்டார்களா?அப்படியானால் தேமுதிகவினர் ஸ்டாலினையோ கருணாநிதியையோ தோற்கடிக்கமாட்டார்களா? என்ன விளங்கிக்கொள்வது என்றே புரியவில்லை.
போகட்டும். இந்தக் கட்டுரையும் சரி, கருத்து எழுதுகிறவர்களும் சரி சில கணக்குகளையும், மேலோட்டமாய்த் தெரியும் ஒப்பீடுகளையும் வைத்துக்கொண்டுதான் கூட்டணி, பேரம் இவை குறித்த விஷயங்களையெல்லாம் பேசுகிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய - ஆனால் வெளியில் பேச முடியாத ஒன்று பணம்.... இதை யாரும் பேசுவதும் இல்லை, பேசவும் முடியாது. இதனை முன்னிறுத்தியும் பல கூட்டணிகள் உருவாகின்றன அல்லது உருவாகாமல் போகின்றன என்பதுதான் யதார்த்தம்.

நம்பள்கி said...

இவ்வளவு அரசியல் ஞானம் இருக்கு என்று விஜயகாந்து கேள்விப் பட்டால் அவர் அரசியலை விட்டு ஓடிப்போய்விடுவார். இது தின்மனி என்ற என்ற எலி திமுகவுடன் சேரக்கூடாது என்ற ஆதங்கத்தில் அம்மணமாக ஓடுகிறது!--எழுதப்பட்டது.இது மாதிரி எல்லாம் அவரை தூக்கித்தான் போன கடந்த நான்கு வருடம் அசிங்கப்பட்டார்.

தினமணியின் ஒரே எதிர்பார்ப்பு: திமுகவிடம் வி.காந்த் சேரக்கூடாது. அப்படி சேராமல் தேமுதிக அழிந்து போனால் அதிமுக அல்லது பாஜகவிற்கு நல்லது தானே.

இப்படி சோவிடம் ஏமாந்து தான் அதிமுக சென்ற முறை ஆட்சி அமைத்தது. வி.காந்த் இல்லை என்றால் சென்ற தேர்தலில் அதிமுகவிற்கு தனி மஜாரிட்டி கிடைத்து இருக்காது என்பதே உண்மை! தேமுதிகவை பிளந்ததும் அவர்கள் தான்! அதிமுக தலைமையிடம் அசிங்கப்படாத கட்சி மாறிகள் உண்டா? அந்த கால நால்வர் அணி உள்பட! தமிழக அரசியல் வாதிகளுக்கு எவ்வளவு சூடு பட்டாலும் உரைக்காது!

ஜோதிஜி said...

நீங்கள் ஒரு die hard தி மு க விசுவாசி என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள்

நண்பரே இவர் திமுக விசுவாசி என்பதை கலைஞரின் அபிமானி என்பது தான் சரியானதாகும். கலைஞர் மேல் உள்ள அபிப்ராயத்தை அவர் மகன்கள், மகள்கள், பேரன்கள் கூட மாற்றிக் கொள்வார்கள். ஆனால் அமுதவன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர்களாவது இருப்பார்கள். இவர்களைப் போன்றவர்களால் திமுக கட்சி பல முறை சூறைக்காற்றில் சிக்கினாலும் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றது. பல விமர்சனங்கள் இருந்தாலும்

ஜோதிஜி said...

நம்பள்கி உங்கள் பதிவுகளை விட உங்களின் விமர்சனங்கள் தான் மிகத் தெளிவாக அழகாக உள்ளது. ஆச்சரியமாகவும் உள்ளது. அரசியலில் கொள்கையிருப்பவர்கள் தான் கடைசி வரை கஷ்டப்படுவார்கள். ஆனால் விஜயகாந்த மிக மிக தெளிவானவர்.

ஜோதிஜி said...

2011 ஆம் ஆண்டு நான் விஜயகாந்த் குறித்து எழுதிய பதிவு இது. இன்று வரையிலும் ஒவ்வொரு வரியும் மாற்றத் தேவையில்லை என்கிற அளவுக்கு இருக்கின்றது.

http://deviyar-illam.blogspot.com/2011/03/blog-post_05.html

ஜோதிஜி said...

இந்த முறை தேர்தலில் தொடக்கம் முதல் இரண்டு பேர்களை கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஒன்று சீமான். மற்றொருவர் விஜயகாந்த.

சீமானைப் பொறுத்தவரையில் அவரின் உண்மையான நிலைப்பாடு இந்த முறை தேர்தலில் பங்கெடுப்பது இல்லை. அடுத்து வரும் தேர்தலுக்கு (2016)முன்னோட்டமாக இன உணவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

ஜோதிஜி said...

விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும். நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும். கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது.

பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே. வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை. மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.

ஜோதிஜி said...

கலையுலகம் முதல் இன்றைய அரசியல் உலகம் வரைக்கும் அத்தனையிலும் தான் கொண்ட நம்பிக்கையை விஜயகாந்த் இன்று வரைக்கும் மாற்றிக் கொள்ளவேயில்லை. இந்த நம்பிக்கை தான் இன்றைய அதிர்ஷ்ட திசையின் ஆரம்பம்?

டெல்லியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி நபர்களையே வாசலில் காக்க வைத்த போயஸ்தோட்டம் இன்று வேறு வழியே இல்லாமல் விஜயகாந்தை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.. குறிப்பாக பா.ம.கா வை கலைஞர் உள்ளே இழுத்தது காங்கிரஸ்க்கு எரிச்சலாக இருந்து இருக்குமே தவிர விஜயகாந்த்திற்கு மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு. மீதி இருக்கும் ஒரே வாய்ப்பு தேமுதிக மட்டுமே என்கிற நிலை வந்த போது அதிமுக வேறு என்ன செய்ய முடியும்?

தொடக்கம் முதல் விஜயகாந்த் கடைபிடித்த அமைதி ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் பிடிகொடுக்கவில்லை. எந்த வாய்ப்புகளையும் தவற விட தயாராய் இல்லை. டெல்லிக்கு படையெடுத்தது முதல் காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு புறம் தனது அக்கா விஜயலெட்சுமி மூலம் அழகிரி ஒரு பக்கம் என்று உருவாக அரசியல் சந்தையில் தேமுதிக முக்கியமானதாக போய்விட்டது.

விஜயகாந்த் அரசியல் வாழ்வில் இத்தனை பெரிய அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்று அவரே நினைத்து இருக்கமாட்டார்.

நம்பள்கி said...

இங்கு எழுதுபவர்கள்...
உண்மையை நாம எழுதினால் மு.க. ஜால்ரா என்பார்கள். ஆனால், அவர்கள் அதிமுக ஆட்சியின் அவலத்தை கண்டுக்கொள்ளவே மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் அதிமுகவை சப்போர்ட் செய்வது தான் சரி என்று நேரடியாக வாதாடாமல், முக என்ன யோக்கியமா என்று பேசுவார்கள். மு.க. மோசம் என்று தானே அதிமுக ஆட்சிக்கு வந்தது, இவர்கள் திமுகவை விட அதிக ஊழல் செய்வதற்க்கா? அதுக்கு திமுகவே இருந்து இருக்கலாம்.சரிய?!

அஜெண்டா வைத்து எழுதும் பத்திரிக்கைகளின் எழுத்தை நம்புபவர்கள் படித்தவர்கள் அதிகம். சட்டசபையே இயங்கவில்லை. ஏதாவது கேள்வி கேட்டுள்ளர்களா? நாம கேட்டால் die hard fan of முக என்று தினமணி வேலை செய்வார்கள். 110 விதியின் கீழ் அரசு செயல்படுகிறதே--சொல்வதை செய்கிறதா என்று இவர்கள் என்றாவது கேள்வி கேட்டதுண்டா? அறிவித்த திட்டங்கள் என்ன ஆச்சு? இல்லை அதை நடத்த பணம் இருக்கா என்று கேள்வி கேட்டதுண்டா? நாம் கேட்டல் முக ஜால்ரா? அப்ப நீங்கள் எல்லோரும் die hard fan of ஜெஜெ தானே!

இந்த சிரிய இடத்தில் எழுதுவதும் கடினம். ப்ளாக் அப்படி இல்லை. கையால் எழுதுவது எளிது. தவறும் குறைவு. தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்வது கொடுமை!

நான் பதிவு எழுதுவது, மக்கள் ஏமாந்து, இந்துக்கள் என்ற மமதையில் மற்ற மதத்தினரை வெறுத்து, சமூக ஒற்றுமையை பலியாக்கி "அவர்களை" ஆட்சியில் உட்காரவைக்கிறார்கள். மோடி மத்திய ஆட்சியை கைப்பற்ற மட்டும்தான்...பிறகு...சாந்தமான 'முகம்' (அப்படிதான் பிராமணர் அல்லாதவர்கள் சொல்கிறார்கள்] கொண்ட ஜனசங்க ஆட்கள் ஆட்சி வரும். மூக்கை சுற்றி வளைத்து தொட உதவி செய்கிறீர்கள். பார்ப்போம், சாமிகளும், மதமும் சோறு போடுதா என்று.

இடஒதிக்கீடு ஒழியப்போகுது. அப்ப தெரியும்! தமிழ்நாடு முற்றிலும் அவர்கள் கையில் போகும்--அந்த நன்னாளை என்று என் அன்பு சகோக்களுக்கவும் அனுபவிக்க வேண்டும் பெரியாரின் அருமை புரிய வேணும் என்று விரும்புகிறேன்! இது நடப்பது உறுதி!

வருண் said...

I see genuine people in US who care about their country, wondering

why an average, "poor middle class guy" votes for a right-wing, GOP candidate?? Republican party is for rich people and for fundamental christians!!! They feel bad for the "ignorance" among their poor middle-class people.

The same is true, in TN,

"why these poor uneducated dravidians worship brahmins and happy when they are ruled by brahmins- who always think they are superior to these filthy dravidians????"

Dravidians like late pattaapatti and late raja natarajan were happier when they were ruled by brahmins. They think they are better than dravidian rulers.

The pity is THEY CAN NOT SAY THAT loudly!!! Because they are ashamed of what they are doing! They rather blame MK or any dravidian for their "impotency"!

Now it is not limited to late pattaapatti or late natarajan, there are SO MANY dravidians for in the same category that THEY ARE HAPPY when a brahmin rules the uneducated brain-dead dravidians including themselves! This is the honest truth! :)

There is no point in blaming brahimins. It is all filthy uneducated ignorant dravidians fault!!! I never blame brahmins for dravidians' ignorance!

Amudhavan said...

ஜோதிஜி திருப்பூர் said...
\\விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும். கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது. பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே. வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை. மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.\\
ஜோதிஜி நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. எஸ்ஏசிக்கும் இப்ராஹிம் ராவுத்தருக்கும் மட்டுமல்ல இவர்களையெல்லாம் தாண்டி இவர் என்றென்றைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டியது இன்னொரு பெண்மணிக்கு. அவரும் ஒரு நடிகை. இவருக்காக அவர் என்னென்னவெல்லாம் செய்தார், இவரை முன்னுக்குக் கொண்டுவர, ஒரு 'நடிகராக' நிலைநிறுத்த எப்படியெல்லாம் பாடுபட்டார் கடைசியில் அவருக்குக் கிடைத்தது என்ன என்பதெல்லாம் மிகச்சிலரே அறிவார்கள்.
இந்த உலகில் இந்த சமூகத்தில் இப்படி யாராலும் புரிந்துகொள்ள முடியாத சில சம்பவங்கள் சமாச்சாரங்கள் நம்மைச் சுற்றிலும் நடந்தபடியேதான் உள்ளன.
இந்த ஒரு சிலர் வரிசையில் நான் விஜயகாந்த்தையும் சேர்க்கிறேன். இதில் தமிழகத்தில் இன்று முதலில் இருப்பவர் ஜெயலலிதா. மூன்றாமவர்தான் விஜயகாந்த்.
யார் என்ன சொன்னாலும் என்னுடைய பார்வை இதுதான்.

திமுகவுடன் சேர்ந்தால் விஜயகாந்தை திமுக தோற்கடித்துவிடும். கட்சியை வளரவிடமாட்டார்கள், ஸ்டாலினை முதல்வராக்க விஜயகாந்த் ஏன் பாடுபட வேண்டும்? கருணாநிதியிடம் பாடுபட்டவர்கள், பழிவாங்கப்பட்டவர்கள் ஏராளம் உண்டு. என்றெல்லாம் பாட்டுப்படிக்கும் புண்ணியவான்கள் இதே formula வை மற்றவர்கள் மீதோ குறிப்பாக ஜெயலலிதா மீதோ செலுத்திப் பார்க்கத் தவறுகிறார்கள். சென்றமுறை ஜெயலலிதாவுக்காக உழைத்த விஜயகாந்தின் இன்றைய கதி என்ன? அவருடன் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்ற உறுப்பினர்கள் எவ்வளவு பேர்? இன்று தேமுதிகவில் இருப்பவர்கள் எவ்வளவு பேர்? அவருடைய கட்சியை உடைத்து ஒன்றுமில்லாமல் செய்தது யார்?
முந்தாநாள்வரை அவர்கள் டெல்லியின் சுப்ரீம்கோர்ட்டு படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது யாரால்?
\\1999 மக்களவைத் தேர்தலில் முரசொலி மாறனுக்குப் போட்டியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சேலத்தில் வாழப்பாடி ராமமூர்த்தியையும், 2009 தேர்தலில் ஈரோடில் ஈ.வெ.கி.ச. இளங்கோவனையும்போல, ஸ்டாலினுக்குப் போட்டியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னை திமுக ஏன் திட்டம்போட்டுத் தோற்கடிக்காது என்கிற விஜயகாந்தின் ஐயப்பாடு முக்கியமான காரணம். 1962 சட்டப் பேரவைத் தேர்தலில் கவியரசு கண்ணதாசனிலிருந்து தொடங்கி பலராலும் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுதான் இது.\\
என்று இப்படியெல்லாம் 57 லிருந்தும் திரேதா யுகத்திலிருந்தும் உதாரணங்கள் எடுத்துச்சொல்லும் மகாத்மாக்கள், சாயந்திரமானதும் ஒவ்வொரு டிவி சேனலிலும் உட்கார்ந்துகொண்டு 'இங்க பாருங்க.... இங்க பாருங்க' என்று பேசிக்கொண்டிருக்கும் மாபா பாண்டியராஜன்களையெல்லாம் தயாரித்து அனுப்பிவைத்திருப்பவர் யார் என்பதைச் சொல்லியிருக்கிறார்களா? பாண்டியராஜனை எந்தக் கட்சியை உடைத்து கூட்டிவந்திருக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கிறார்களா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இவையெல்லாம் கலைஞர் மீதுள்ள அபிமானத்தால் பேசுவதாக நினைக்கவேண்டாம்.கேவலமாகவும் படு கேவலமாகவும் அரசியல் செய்பவர்களை கொஞ்சம்கூட கண்டுக்காமல் விட்டுவிட்டு கலைஞரை மட்டுமே கேள்விக்குட்படுத்தும் உத்தம சீலர்களைக் கேள்விகேட்கத் தோன்றுகிறது என்பதுதான் விஷயம்.

ஜோதிஜி said...

பணத்திற்காகத் தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்ற கூற்று மாபா பாண்டியராஜன் விசயத்தில் தவறானது. அவர் சேர்த்த பணத்தை தொலைக்க, தான் சேர்த்து வைத்த நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளவே அரசியலில் வந்துள்ளார் என்பதே சரியானதாகும். அவர் தேமுதிக முதல் இன்று வரை தொலைத்த பணம் பல கோடிகள் இருக்கக்கூடும். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது தான் ஆச்சரியம்.

Amudhavan said...

நம்பள்கி said..
\\இடஒதிக்கீடு ஒழியப்போகுது. அப்ப தெரியும்! தமிழ்நாடு முற்றிலும் அவர்கள் கையில் போகும்--அந்த நன்னாளை என்று என் அன்பு சகோக்களுக்கவும் அனுபவிக்க வேண்டும் பெரியாரின் அருமை புரிய வேணும் என்று விரும்புகிறேன்! இது நடப்பது உறுதி!\\
நம்பள்கி இங்கே என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்துவருகிறார். நல்ல செல்வமும் செல்வாக்கோடும் இருக்கிறார். தமிழகம் மழை நீரில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருந்த நேரம் அந்தச் செய்திகளையெல்லாம் டிவியில் பார்த்து அழாத குறையாக குமுறிக்கொண்டிருந்த நேரம்.. வீட்டிற்கு வந்திருந்தார். "அட அந்த ஜனங்களுக்காக மட்டும் வருத்தப்படாதீங்க. அவங்களுக்கு வருத்தப்பட்டீங்கன்னா பொல்லாத பாவம் உங்களையும் சூழ்ந்துரும். இவங்க நடந்துக்கறதுக்கு அவங்க இன்னமும் என்னென்னவெல்லாம் படப்போறாங்க நீங்களே பார்க்கத்தான் போறீங்க... இத்தனை வெள்ளம் வந்திருக்கு ஆட்சியாளர்கள் அதுவும் முதலமைச்சர் வாயே திறக்கலை. அந்தம்மா எங்கேன்னும் தெரியலை. இம்மாதிரி இங்கே சித்தராமய்யா இருந்திருந்தார்னா இன்னேரம் என்ன ஆகியிருக்கும் யோசிச்சுப் பாருங்க. அவர் வீட்டையெல்லாம் தூள்தூளாக்கியிருப்பாங்க.......... அதுமட்டுமில்லை, இன்னும் இரண்டொரு மாசம் கழிச்சுப் பாருங்க இந்த அம்மாவைப்போல முதலமைச்சர் யாருமில்லைன்னு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜனங்களே சொல்றாங்களா இல்லையா பாருங்க....
அதுமட்டுமில்லை, இன்னும் கொஞ்சநாள்ள இட ஒதுக்கீடு ஒழிந்துபோய் தமிழ்நாடு முழுக்க ஒரு வழியாகி என்ன கதியாகப்போகுதுன்னு பாருங்க" என்றார்.
அவருடைய கூற்றை ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் நடந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஜோதிஜி said...

நடிகை ராதிகா, நடிகை விஜயசாந்தி, நடிகை குஷ்பு, நடிகை ரோஜா போன்றவர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும். அவர்கள் போராட்டத்தை, அவமானங்கள், இழப்புகளைத்தாண்டியும் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையை, திறமையை காட்டும் அளவுக்கு சமூகத்தில் ஜெயித்துள்ளனர்.

Amudhavan said...

வருண் said...
\\There is no point in blaming brahimins. It is all filthy uneducated ignorant dravidians fault!!! I never blame brahmins for dravidians' ignorance!\\

ஆமாம் வருண் என்னுடைய கருத்தும் இதுதான்.

Amudhavan said...

காரிகன் said...
\\இப்போதோ தந்தி, தமிழ் 7, புதிய தலைமுறை, பாலிமர் என்று பல தனியார் டிவிகள் வந்துவிட்டன. அவர்கள் கேட்கும் கேள்விகள் சம்பிரதாயமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\\

கரெக்ட் காரிகன். எனக்கும் உங்களுடைய கருத்துத்தான். அவர்கள் அதனை ஒரு பாணியாகவே, சம்பிரதாயமாகவே செய்துகொண்டபிறகு எல்லா நெறியாளர்களிடமும் அது ஒரு பாணிபோலவே தொற்றிக்கொண்டு விட்டது. ஆகவே பார்க்கிறவர்களிடமும் இதுதான் சம்பிரதாயம்போலும் என்ற எண்ணமும் வந்துவிட்டது.
எல்லாரைப் போலவும் நாமும் ஏன் சம்பிரதாயமாகவே இந்த நெறியாளர்களைப் பார்க்காமல் கொஞ்சம் வேறுமாதிரியாகப் பார்க்கலாமே என்றுதான் நானும் சம்பிரதாயக் கேள்விகள் எழுப்பாமல் அவர்களை நோக்கி வேறு மாதிரியான கேள்விகளை எழுப்பினேன்.

Arul Jeeva said...

தங்கள் பதிவை தாமதமாகத் தான் படிக்க நேர்ந்தது .தேர்தல் நேரத்தில் தேவையானதொரு பதிவு.சமூக மாற்றத்தை ஊடகங்களும் ,செய்தித்தாள்களும் காலங்காலமாக செய்துகொண்டுதானிருக்கின்றன.அதை நடுநிலையோடு செய்தால் நலமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம் .அதனைச் செய்யாதபோது தான் இது போன்ற பதிவுகள் தேவைப்படுகின்றன .
தாங்கள் முகநூலில் படித்ததாக பகிர்ந்த செய்திகள் மிக அருமை . தேர்தலைச் சந்திக்குமுன் சிந்திக்க வேண்டிய செய்திகளைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள் .

சார்லஸ் said...

காரிகன் ஜி , ஜோதிஜி போன்றோர் உங்களை கருணாநிதி அனுதாபி என்று சொல்கிறார்கள் . ஆனால் அவர்களுடைய பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவர்கள் இருவரும் ' அம்மா ' வின் ஜால்ரா போல அப்பட்டமான காட்சி தோன்றுகின்றதே! கட்டுரையின் கருத்தை விட்டு விட்டு அவர்களும் திமுகவின் ஆட்சியில் நடந்த விசயங்களை பாண்டேக்கள் போல விமர்சனம் செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள்.


விமர்சனங்களை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கருணாநிதியும் அவதூறு வழக்கு போடும் ஜெயலலிதாவும் இங்கு ஒரே தராசில்தான் நிறுத்தப்படுகிறார்கள் . ஆனால் தராசு சமமாயில்லை . பெரும்பான்மையான ஊடகங்கள் இன்னும் அம்மாவின் பக்கமே சாய்ந்திருக்கின்றன. அது எதனால் என்பது தெரியவில்லை. பயமா , பணமா , பக்தியா ...இல்லை ஏதேனும் குயுக்தியா என்பதும் புரியவில்லை. ஒருவேளை மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து விட்டாலும் கூட அவர்களின் அம்மா விசுவாசம் எப்போதும் மாறாமலே இருக்கும். அந்த விசயத்தில் ரொம்ப நேர்மையானவர்கள். கருணாநிதி நல்லது ஏதாவது செய்தாலும் அதிலுள்ள குறைகளை நார் நாராய் கிழித்துப் போட எப்போதும் தயாராகவே இருப்பார்கள்.

Amudhavan said...

Arul Jeeva said...
\\தங்கள் பதிவை தாமதமாகத் தான் படிக்க நேர்ந்தது .தேர்தல் நேரத்தில் தேவையானதொரு பதிவு.சமூக மாற்றத்தை ஊடகங்களும் ,செய்தித்தாள்களும் காலங்காலமாக செய்துகொண்டுதானிருக்கின்றன.அதை நடுநிலையோடு செய்தால் நலமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம் .அதனைச் செய்யாதபோது தான் இது போன்ற பதிவுகள் தேவைப்படுகின்றன .\\
நன்றி அருள் ஜீவா, மிகவும் நன்றி.

Amudhavan said...

சார்லஸ் said...
\\விமர்சனங்களை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கருணாநிதியும் அவதூறு வழக்கு போடும் ஜெயலலிதாவும் இங்கு ஒரே தராசில்தான் நிறுத்தப்படுகிறார்கள் . ஆனால் தராசு சமமாயில்லை . பெரும்பான்மையான ஊடகங்கள் இன்னும் அம்மாவின் பக்கமே சாய்ந்திருக்கின்றன. அது எதனால் என்பது தெரியவில்லை. பயமா , பணமா , பக்தியா ...இல்லை ஏதேனும் குயுக்தியா என்பதும் புரியவில்லை. ஒருவேளை மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து விட்டாலும் கூட அவர்களின் அம்மா விசுவாசம் எப்போதும் மாறாமலே இருக்கும். அந்த விசயத்தில் ரொம்ப நேர்மையானவர்கள். கருணாநிதி நல்லது ஏதாவது செய்தாலும் அதிலுள்ள குறைகளை நார் நாராய் கிழித்துப் போட எப்போதும் தயாராகவே இருப்பார்கள்.\\
வாங்க சார்லஸ், இங்கே புரியாத, புரிபடாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.
பெரும்பான்மையான ஊடகங்கள் இன்னும் ஜெயலலிதாவின் பக்கமே சாய்ந்திருப்பதற்கு பயமா, பணமா, பக்தியா என்கிறீர்கள். நிச்சயம் மூன்றாவது இல்லை. முதல் இரண்டும் அடங்கலாம். கூடவே இன்னமும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே அந்தக் காரணங்கள் புரியவரும். தங்களின் வருகைக்கு நன்றி.

காரிகன் said...

சால்ஸ்,

உங்கள் கருத்தைச் சொல்லாமல் நான் என்ன சொன்னேன் என்பதை அதையும் உங்கள் கணிப்பின்படியேயும் பரப்புரை செய்துவிட்டு சென்றிருக்கிறீர்கள். உங்களது மற்ற நண்பர்கள் போலல்லாது திரு அமுதவன் என்னை இந்த ஒரு சிறிய எதிர் வினைக்காக எதிர்ப்பார் என்று நீங்கள் எதிர்ப்பார்த்தது வழக்கம்போலவே உங்களுக்கு ஏமாற்றமாகவே இருந்திருக்கும்.

நான் அவரிடம் முரண் படுவதும் ஒருவிதத்தில் எங்களின் புரிதலின் இன்னொரு பரிமாணமே. நீங்கள் பாவம். இதை வைத்துக்கொண்டு ஒரு குதியாட்டம் போடலாம் என்று இருந்திருப்பீர்கள். என்ன செய்வது?

திமுகவை விமர்சித்தால் நான் ஜெ வின் ஆள் என்ற சிறுபிள்ளைத்தனமான முடிவு உங்களைப் போன்றவர்களால்தான் எடுக்க முடியும். நெருப்பு எரிகையில் யார் குளிர் காய்ந்தால் என்ன?

வருண் said...

Kaarigan!

You are saying that I have offended the "dravidian race" and that I have used "politically incorrect" language.

Well, It is true that I did offend them pretty badly.

Forget about who you are! Just look at them from an unbiased point of view! Today in the dravidan country temple and bhagthi is in peak! Their caste feelings and groupism are in peak too! As you can see, they all become God-fearing people! On the other hand, corruption is in peak too! They get money for casting their vote!

They literally cried when Cunha gave a verdict on corruption charges agains their brahmin Goddess! THEY WERE crying and there was "oppaari" everywhere!!They were accusing Cunha as a bad-guy for doing his job.

Well, Are they not behaving like uneducated country brutes who lack brain and education??

Should I address them with "respect"? WHY??? We dont respect animals because they dont know what is right and wrong and they can not think? You know that right? Why cant we do that to these dravidian animals when they can not think using whatever they have in their head? I dont see anything wrong with that! Thanks for letting me clarify my stand and justify my statements! Take care!

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! எனது வலைத் தளத்தில் 'தொடரும் தொடர் பதிவர்கள்' என்ற பதிவினில் உங்கள் வலைத்தளம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். நன்றி!

Amudhavan said...

தங்களின் அத்தனைப் பதிவுகளையும் தவறாமல் படிக்கும் பழக்கம் இதில் கொஞ்சம் தவறிவிட்டது. சென்று படித்துப் பார்த்தேன். அந்தப் பதிவில் பின்னூட்டமும் எழுதியிருக்கிறேன். நன்றி.

Post a Comment