Monday, June 3, 2013

இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் அவருக்குப்பின் வந்த இளம் இசையமைப்பாளர்களும்………………….



-   
(பதிவைப் படிக்க ஆரம்பிக்குமுன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதற்காக இங்கே செரினா வில்லியம்ஸின் படம்? என்ற கேள்வி வரும். காரணமிருக்கிறது. பதிவின் கடைசியில் இதற்கான பதில் இருக்கிறது.)

தமிழின் இரு பெரிய பத்திரிகைகளான குமுதத்திலும் ஆனந்தவிகடனிலும் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களின் பேட்டிகள் வந்துள்ளன. இளையராஜாவுடையது பேட்டி அல்ல; வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் சொல்லும் விடைகள். ஏஆர் ரகுமானுடையது விகடன் நிருபருக்கு அளித்த பேட்டி. இரண்டிற்கும் ‘வேறுபாடு’ இருந்தாலும் விடை ஒன்றுதான். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொல்லியுள்ள பதில்கள்.

‘உங்களுக்குப்பின் வந்த இசையமைப்பாளர்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்பதுதான் கேட்கப்பட்ட கேள்வி. இந்தக் கேள்வி இருவரிடமும் வெவ்வேறு வடிவத்தில் வைக்கப்படுகிறது. ‘இளைய இசையமைப்பாளர்களைப் பாராட்டாதது ஏன்?’ என்பது இளையராஜாவிடம் வைக்கப்படும் கேள்வி.






அவர் சொல்லியுள்ள பதில் இது; ‘அவர்கள் ஒரு படத்திற்கு இசை அமைத்துவிட்டார்கள் என்பது ஒரு தகுதி அல்ல. அதை நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்பதும் ஒரு தகுதி அல்ல. அதற்காக நான் பாராட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சரி அல்ல. நீங்கள் ஒரு பாடலைக் கேட்பதைப்போல நான் கேட்பதில்லை. அதில் எவ்வளவோ விஷயங்களும் உள்அர்த்தங்களும் உள்ளன. உண்மையிலேயே விஷயங்களை உள்ளடக்கிய பாடலை ஒரு உண்மைக்கலைஞனால் பாராட்டாமல் இருக்கமுடியாது. நீங்கள் பாராட்டிய விஷயங்கள் எல்லாம் ஒரு மாதத்திற்குமேல் தாங்கமாட்டேனென்கிறது என்றால் அதை நான் எப்படிப் பாராட்டுவது?ஏன் பாராட்டவேண்டும்?

ஒன்று……….அந்த இசையில் எனக்குத் தெரியாத ஒன்றை அடடா இதை நான் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே என்றும் இந்த ஐடியா எனக்கு வராமல் போய்விட்டதே என்றும் என்னை எண்ணவைக்கவோ கற்றுக்கொள்ள வைக்கவோ வேண்டும். இதுவரை இசைமேதைகள் தொடாதவற்றைத் தொட்டிருக்கவேண்டும்.

நான் இந்த ஜன்மம் முழுதும் கற்க வேண்டிய விஷயங்கள் நம் முன்னோர்களின் இசையில்தான் இருக்கிறது. அவர்களை வணங்கி வழிபடுவதே எனக்குப் புண்ணியம். அது இந்தத் தலைமுறைக்கு ஆகிற காரியமா என்ன?’-

-இதுதான் பல இசை விரும்பிகளால் இசைஞானி, ராகதேவன், இசைக்கடவுள் என்று கொண்டாடப்படுகிறவரின் பதில்.

கேள்வி ரொம்பவும் எளிமையானது. ‘உங்களுக்குப்பின் வந்த இளைய இசையமைப்பாளர்களை நீங்கள் ஏன் பாராட்டுவதில்லை? என்ற கேள்வியிலேயே –

“தம்பி நீ நல்லா வருவே. இன்னமும் நீ தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சுக்கணும். முயற்சி பண்ணு. உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு” என்று இளையவர்களை முதுகில் தட்டிக்கொடுத்தலோ ஊக்கப்படுத்துதலோ உற்சாகப்படுத்துததலோ அடங்கியிருக்கிறது.

இளையராஜா போன்ற மூத்த இசையமைப்பாளர்கள் இளைய இசையமைப்பாளர்களுக்கும் இளைய கலைஞர்களுக்கும் செய்யவேண்டிய மிக மிக சாதாரண கைங்கர்யம் இது என்பது மட்டுமல்ல, அதற்கான கடமையும் இளையராஜா போன்றவர்களுக்கு இருக்கிறது.
  
புகழ்பெற்ற மூத்த கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதும், பணம் சம்பாதிப்பதும், எந்நேரமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டே இருக்கவேண்டுமென நினைப்பதுவும் மட்டுமே அவர்களின் சமூகப் பங்களிப்பு ஆகிவிடமுடியாது.
தங்களுக்குப் பின்னே தங்கள் துறையில் தங்களைத் தொடர்ந்துவரும் இளையவர்களை முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் தட்டிக்கொடுத்து அவர்களை ஊக்குவிப்பதும்கூட அவர்களுடைய சமூகப் பங்களிப்புகளில் ஒன்றுதான்.

சமூகப் பங்களிப்பு மட்டுமல்ல, கடமையும்கூட. இதற்காக யாரும்  ‘நீங்கள் பள்ளிகளை ஆரம்பித்து இளைய கலைஞர்களை உருவாக்குங்கள்’ என்று சொல்லவில்லை.

வளரத் துடிக்கும் கலைஞர்களைக் குறைந்தபட்சம் வசைபாடுவதும் கேலி பேசுவதும் புறம் சொல்வதும், என்னைப்போல முடியுமா என்று சவால் விடுவதும், ‘உன்னிடம் என்ன இருக்கிறது?’ என்று நையாண்டி செய்வதும், எனக்குத் தெரியாத ஒன்றை நீ தந்துவிட்டாயா? என்று அகம்பாவத்துடன் வினவுவதும் ‘இந்த ஐடியா எனக்கு வராமல் போய்விட்டது என்று நான் ஒன்றும் நினைக்கவில்லையே’ என்று ஏகடியம் செய்வதும் எந்தவகையில் சேர்த்தி என்பதே புரியவில்லை.

இத்தகைய ஆணவப்போக்கு நல்லதொரு கலைஞருக்குத் தகுமா என்பதுதான் கேள்வி.

விஸ்வநாதனுக்குப் பிறகு திரைப்படத்துறைக்கு வந்து விஸ்வநாதனின் இடத்தைப் பிடித்தவர் என்று கருதப்படும் இளையராஜாவைப் போலவே இளையராஜாவுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தவர் என்று கருதப்படும் ஏ.ஆர். ரகுமானிடம் இதே கேள்வி அல்லது இதே தொனியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் என்ன பதில் சொல்லியிருக்கிறார் என்பதையும் பார்ப்போம்.

 

ரகுமான் சொல்கிறார்….”இப்ப வர்ற இளைஞர்களுக்கு நிறையத் திறமை தொழில்நுட்ப அறிவு இருக்கு. எதையும் தேடிப் பிடிக்கறதுக்கு அவங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ………….இப்ப ஒருத்தர் ஒரு விஷயத்தை நோக்கி கடுமையா உழைச்சா அதில் அவர் நிச்சயம் ஜெயிக்கலாம்.”- இது ரகுமான்!

இன்னொரு சிக்கலான, அவரது ஈகோவைத் தூண்டிவிடுகிறமாதிரியான அடுத்த கேள்வி வைக்கப்படுகிறது. “உங்க இடத்தை யார் பிடிக்கமுடியும்னு நினைக்கறீங்க?”

ரகுமான் சொல்கிறார்; “யார் நினைச்சாலும் பிடிக்கமுடியும். என் இடத்தைப் பிடிப்பது சுலபமான விஷயம். இசைக்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஒவ்வொருத்தரோட இசையும் ஒரு தனித்தன்மையோட இருக்கும். உங்க தனித்தன்மையும் மக்களுடைய அலைவரிசையும் ஒண்ணா சிங்க் ஆச்சுன்னா நாளைக்கு என் இடத்தில் நீங்க இருப்பீங்க. 

மக்கள் கேட்டா அது நல்ல பாட்டு. அவங்க கேக்கலைன்னா அது சுமாரான பாட்டு. அவ்வளவுதான். இதை மனசுல வச்சுட்டுத்தான் வேலைப் பார்க்கறேன்”

கேள்வி கேட்டவர் அவ்வளவு சுலபமாக ரகுமானை விடுவதாக இல்லை.

அவரது அகங்காரத்தை எப்படியாவது சிறிய அளவிலாவது சீண்டிப் பார்த்துவிட முடியுமா என்பதற்கேற்பவே அடுத்த கேள்வியையும் வீசுகிறார். “இவ்வளவு உயரம் வளர்ந்த பின்னாடி கர்வம் வர்றதைத் தடுக்கறது கஷ்டமாச்சே?”

“நானும் மனுஷன்தான். எனக்கும் தடுமாற்றங்கள் வரும். ஒரு விநாடிதான். கடவுளோட படைப்புக்களைப் பத்தி யோசிக்கும்போது நாமெல்லாம் ஒண்ணுமே கிடையாதுன்னு தோணும். அதோட தூக்கிப்போட்டுட்டு வேலைப் பார்க்கக் கிளம்பிடுவேன்” என்கிறார் ரகுமான்.

ஆக, எத்தனைக் கேட்டும் அங்கே கர்வத்துக்கோ அகங்காரத்திற்கோ ஆணவத்திற்கோ இடமில்லை. துளியும் இடமில்லை.

உலக அரங்கில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு இசைக்கலைஞன், ரசிக வட்டம் மட்டுமின்றி உலகின் வணிக எல்லைகளிலும் இளவரசனாக வலம் வந்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன்- எத்தனை இலகுவாகத் தன்னுடைய இயல்பை பாசாங்கற்று வெளிப்படுத்துகிறார் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாயிருக்கிறது.

‘நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்’ என்ற கண்ணதாசனின் வரி நினைவுக்கு வந்து செல்கிறது. Hats off Rahman!

இருவருடைய மனோநிலைகளையும் இங்கே பேசும்போது சிலருக்குக் கோபம் வரும். மிக அதிகமான கோபமே வரும். பலருக்கு இளையராஜாவுடன் ரகுமானைச் சேர்த்துப் பேசுவதே பிடிப்பதில்லை. இளையராஜா எத்தனைப் பெரியவர்? அவருக்குப் பக்கத்தில்போய் இந்தப் பையனை நிற்கவைப்பதா? என்று பொருமுகிறார்கள்.

அவர்கள் ஒரு விஷயத்தை சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள். இளையாராஜாவுக்கு முன்னால்  ஒரு மிகப்பெரிய முன்னோர்கள் வரிசையே இருக்கிறது- இளையராஜாவுக்கு முன்னால் எம்எஸ்வியே இருக்கிறார். அவருக்கும் முன்னால் கே.வி.மகாதேவன் இருக்கிறார். அந்த முன்னோர்கள் வரிசையில் கொஞ்சமும் ஆசூயை இல்லாமல் இளையராஜாவை நிறுத்துகிறார்கள். சிலர் அப்படி. இன்னும் சிலரோ இதைவிடவும் மோசம். இளையராஜாவை ஒரு சுயம்பு என்று எண்ணுகிறார்கள். தமிழ்த்திரை இசையைக் கண்டுபிடித்தவரே இளையராஜாதான். தமிழகத்திற்கும் உலகிற்கும் இசையை அறிமுகப்படுத்தியவரே இளையராஜாதான் என்று கண்மூடித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இசை என்பது இளையராஜா உலகிற்கு அளித்த கொடை என்பதாக இவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் ரசிகர் ஒருவரின் ஞாபகம் வருகிறது. தொலைபேசித் தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அது. எம்ஜிஆருக்கு உடல்நிலை மோசமாகி குணப்படுத்துவதற்காக அமெரிக்கா கொண்டுசெல்வதாகப் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்த எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் சொன்னார். “இவனுங்க எதுக்காக எங்க தலைவரை இப்படியெல்லாம் பண்றானுங்கன்னு தெரியலை. அவருக்கு என்ன ஆயிடப்போகுது? சாவா வந்துரும்? சாதாரண மனுசப்பிறவியா இருந்தா ஏதாவது ஆகும். எங்க எம்ஜிஆர் தெய்வம். அவருக்குப்போய் என்ன ஆயிடும்?”

கிட்டத்தட்ட இந்த ரசிகரின் மனநிலையில்தான் இணையத்தில் உலா வரும் பல இளையராஜா ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் சோகம். அந்த எம்ஜிஆர் ரசிகராவது பரவாயில்லை. அவருடைய படிப்பறிவு குறைவு. இணையத்தில் உலா வரும் பெரும்பாலான இளைஞர்கள் நன்கு படித்தவர்கள். படிப்பிற்கும் வேறு பல விஷயங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது இவர்களாலும் உறுதிப்படுகிறது. இவர்களின் அசைக்கமுடியாத சித்தாந்தம் இதுதான். ‘இசை என்றாலேயே இளையராஜாதான். அதற்கு முன்னும் யாருமில்லை; பின்னும் யாருமில்லை’.

பாவம் இவர்கள்.

காலம் இவர்களுக்காகவெல்லாம் காத்துக்கொண்டும் இருப்பதில்லை. இரக்கப்படுவதும் இல்லை. அதுபாட்டுக்குத் தேவையான சமயத்தில் ஒவ்வொருவரையும் தேவையான இடத்தில் தேவையான உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்துக்கொண்டே இருக்கிறது. அது பாட்டுக்கு நடைபோட்டுக்கொண்டே இருக்கிறது.

விஸ்வநாதனுக்குப் பிறகு இளையராஜா வந்தார். இளையராஜாவுக்குப் பிறகு ரகுமான் வந்தார். ரகுமானுக்குப் பிறகு இன்னொருவர் வருவார். இப்படித்தான் நடைபோடும் காலம். இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கவும் கூடாது. நின்ற இடத்திலேயே நின்று ‘குதித்துக்கொண்டிருக்கவும்’ கூடாது.

இளையராஜா குமுதத்தில் தெரிவித்திருந்த கூற்றுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் வந்ததாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இணையத்தில் எந்தவிதமான எதிர்ப்பும் வரவில்லை. மற்ற எல்லா விஷயங்களுக்கும் வீடுகட்டி சதிராடி கும்மியடித்து கூறுகட்டும் பதிவர்கள் இளையராஜாவின் இத்தகைய அடாவடித்தன பேச்சுக்கு வாயையே திறக்கவில்லை. இதையே ரகுமானோ அல்லது ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு புறம்போக்கோ சொல்லியிருந்தாலோ இந்நேரம் நாடு கடத்தும் அளவு படுத்தி எடுத்துவிட்டிருப்பார்கள்.

விகடனில் ரகுமானின் பேட்டி வருகிறது. அதே பேட்டி விகடனின் இணையத்திலும் வருகிறது. விகடன் இணைய இதழ் பின்னூட்டத்தில் இதற்கான கருத்துக்கள் நூற்றுக்கும் மேல் வந்துள்ளன. அவர்களில் யாரோ ஒருவர் ரகுமானையும் இளையராஜாவையும் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் போலும். அவ்வளவுதான். கிளர்ந்து எழுந்துவிட்டார்கள் இளையராஜாவின் ரசிகர்கள்.

‘நான் இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்தவனில்லை, வாழ்ந்தவன். என் இனிய பொன் இரவுகளை அவரது இசை மட்டுமே உருவாக்கமுடியுமென நான் நம்புகின்றேன். ஒரு இசை மேதையைப் புகழ இன்னொரு இசைமேதையைக் கேவலப்படுத்துவது என்ன நியாயம்?’ – என்று குமுறுகிறார் ஒருவர். இவருக்கு எந்த பதிலும் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் இவரே சொல்லிவிட்டார். நான் இளையராஜா இசையைக் கேட்டு வளர்ந்தவனில்லை- ‘வாழ்ந்தவன்.’ ஆக இளையராஜா இசையை மட்டுமே கேட்டுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த ஒரு காரணத்தினாலேயே இவர் இன்னமும் வளரவே இல்லை.

அவருக்கான பொன் இரவுகளை எப்படி இளையராஜா மட்டுமே உருவாக்கமுடியுமென அவர் நம்புகிறாரோ அப்படியே இன்னொருத்தருக்கான பொன் இரவுகளை லதா மங்கேஷ்கர் மட்டுமே உருவாக்கமுடியும். கிஷோர்குமார் மட்டுமே உருவாக்கமுடியும். முகமதுரபி உருவாக்கமுடியும். பி.சுசீலா உருவாக்கமுடியும். டிஎம்எஸ் உருவாக்கமுடியும். கேவிமகாதேவன் உருவாக்கமுடியும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி உருவாக்கமுடியும். வெறும் விஸ்வநாதனே உருவாக்கமுடியும். பிபிஎஸ் உருவாக்கமுடியும். கேஜே யேசுதாஸ் உருவாக்கமுடியும். ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கமுடியும். ஏன் இன்றைய ஹாரிசும் ஜிவிபிரகாஷ்குமாரும்கூட உருவாக்கமுடியும்.

அட அதெல்லாமில்லை என்றாலும் யாரோ ஒரு சரளாவோ கோமளாவோ கூட உருவாக்கமுடியும். ஆக, இது ஒன்றும் பிரச்சினை இல்லை.

இன்னொருவர் சொல்கிறார்; ‘அடக்கம் தனிமனித குணம். அதற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை. 1976-ல் வந்த இளையராஜாவின் பெருமையை இன்றும் கேட்டு ரசிக்கமுடியும். அவரது இசையமைப்பை வெல்ல இன்னொருவன் இன்றுவரை தமிழகத்தில் இல்லை. இனி ஒரு காலத்தில் வரலாம்.’

அடக் கஷ்டகாலமே, இன்றைய புதிய பாடல்களுக்கான நிகழ்ச்சிகளைத் தவிர பழைய பாடல்களை ஒளிபரப்புவதற்கென்றே ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் பொதிகை, ஜெயாடிவி, ஜெயாபிளஸ், ராஜ்டிவி, கேப்டன், வசந்த், மெகாடிவி, கலைஞர், விஜய் என்று ஏகப்பட்ட சேனல்களில் போதும் போதும் என்னுமளவுக்கு நிகழ்ச்சிகளை உருவாக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறார்களே.

போதாததற்கு வெறும் பழைய பாடல்களை போடுவதற்கென்றே ஏறக்குறைய நான்கோ ஐந்தோ தனிச்சேனல்களே உள்ளனவே. முரசு, ஜெயா மியூசிக் என்று. ஏதேதோ பெயர்களில்… இவற்றில் போடப்படும் பாடல்களை கவனித்திருக்கிறீர்களா?

எல்லாமே இளையராஜா காலத்துக்கு முற்பட்டவை.
 
அந்தப் பாடல்களுக்கு இருக்கும் மவுசையும் புகழையும் யாரால் சீர்குலைக்க முடியும்? அதனால்தானே உங்களைப் போன்றவர்களுக்குப் புரியட்டும் என்று கங்கை அமரனும் இளையராஜாவும் வாய்ப்புக்கிடைக்கும் இடத்திலெல்லாம் “நாங்கள் இன்றைக்கு 
வாழும் வாழ்க்கை இந்த பங்களா இந்தக் கார் இந்த வசதி இவையெல்லாம் விஸ்வநாதன் போட்ட பிச்சை” என்றல்லவா சொல்கிறார்கள்?



இளையராஜா இன்னமும் ஒருபடி மேலே போய் “விஸ்வநாதன் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எங்களின் இன்றைய சாப்பாடு” என்றல்லவா சொல்கிறார்!

இவற்றையெல்லாம் கேட்டபிறகுகூட இவற்றிலுள்ள தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் சவடால் பேச்சுப் பேச உங்களால் எப்படி முடிகிறது?
அதுவும் நீங்கள் ‘பதில்’ சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் என்ன அனாமத்து ஆசாமியா?

உலக அரங்கின் உச்சியிலே நிற்கும் ஒரு இந்தியன் – இசைத் தமிழன்!

ஏ.ஆர்.ரகுமானின் ஒரு இசை ஆல்பம் வருகிறது என்றால் உலகின் பல பகுதிகளிலே மக்கள் முதல்நாளே கியூவில் நின்று அதனை வாங்குகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் ஒரு படம் ஒப்புக்கொள்கிறார் என்றால் எத்தனைக் கோடிகள் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

திரைப்படத் துறையிலிருந்து ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

அது இரவு நேரம்…. ரகுமானைப் பார்ப்பதற்காக ஒரு நண்பர் போயிருக்கிறார். அங்கு சென்ற நண்பர் அங்கே பார்த்த காட்சியைப் பார்த்ததும் திகைத்துப் போயிருக்கிறார். காரணம் அந்த இரவு நேரத்தில் கையில் தலையணையுடன் இரண்டொருவர் காத்திருக்க……..சிலபேர் அங்கிருந்த சோபாக்களில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்களாம். இவ்வாறு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்தனைப் பேருமே இந்தியாவின், தமிழின், தெலுங்கின் மிகப்பெரும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!

அடுத்து நம்மைக் கூப்பிடமாட்டாரா, அடுத்து நம்முடைய பாடல் இசை வடிவம் பெறாதா…அடுத்த ஒப்புதல் நமக்குக் கிடைக்காதா என்று காத்துக்கிடக்கும் கூட்டம் அப்படிப்பட்டது!

-இப்படி ஒரு கமர்ஷியல் டிமாண்டும், நேரமின்மையும், உச்சகட்ட புகழும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை பவ்வியத்துடன் எவ்வளவு பணிவுடன் பேசுகிறார் என்பதைப் பாருங்கள்.

இளையராஜாவின் பணிவும் பவ்வியமும் வெறும் விஸ்வநாதன்-கண்ணதாசனுடன் முடிந்துவிடுகிறது. இவர்கள் இருவரைத்தவிர அவர் யாரையுமே மதிப்பதுமில்லை. மரியாதையுடன் பார்ப்பதுமில்லை.

வேறொரு வாசகர் விகடன் தளத்தில் இன்னொரு கருத்தை நினைவு கூர்ந்திருந்தார். ‘ஒரு பொங்கல் சன்டிவி நிகழ்ச்சியில் இளையராஜா சொன்னார். “எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று கியூவில் நிற்கிறார்கள். வேறு கதியே இல்லை. இன்றைக்கு இசைத்துறையில் கிடையாது. அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால் நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி. வேறு நாதியே இல்லை” அன்றிலிருந்து அவர் மீதிருந்த மரியாதையே போய்விட்டது’ என்று சொல்லியிருந்தார் அந்த வாசகர்.

உடனே அடக்கம் தனிமனித குணம் அதற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்று ‘அடக்கமின்மைக்கு’ ஆதரவாய்க் களம் இறங்க சிலர் ஓடி வருகிறார்கள்.

அடக்கமில்லாத ‘திறமையை’ இந்த உலகம் நிச்சயம் கொண்டாடும்.

எப்போது தெரியுமா?

தொடர்ச்சியான வணிகவெற்றிகள் இருந்துகொண்டே இருக்கும் சமயம்வரை.

வணிக வெற்றிகளின் பரபரப்பு என்றைக்கு ஓய்கிறதோ அன்றைக்கு அடக்கமின்மை, ஆணவம், கர்வம், தலைக்கனம், அகங்காரம் இம்மாதிரியான கல்யாண குணங்கள் கொண்ட ஆசாமி எத்தனைத் திறமையானவராக இருந்தாலும், எத்தனை சாதனைகள் செய்தவராக இருந்தாலும், எத்தனைக் காலம் ஆட்சி புரிந்தவராக இருந்தாலும் அதுபற்றியெல்லாம் கவலை இல்லாமல் காலச்சுழற்சியின் கடைசி முனைக்குத் தூக்கிக்  கடாசிவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கும்.

இன்னொரு அதிபுத்திசாலி ‘மன்மோகன் சிங்கிற்குக்கூடத்தான் அடக்கமும் பொறுமையும் இருக்கிறது. அதற்காக அவரை இந்தியாவின் சிறந்த பிரதமர் என்று சொல்லமுடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்.

இவர்களுக்கெல்லாம் பணிவு பண்பு இவை பற்றியெல்லாம் கவலைக் கிடையாது. கவலைக்கிடையாது என்பது மட்டுமல்ல; அவையெல்லாம் தேவையுமில்லை என்று நினைக்கிற கூட்டம்தான் இவர்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. ‘திறமை’ இருக்கிறவன் என்றால் டெல்லியில் ஐந்துபேர் சேர்ந்து ஒரு பெண்ணைக் கற்பழித்துக்கொன்றார்களே அவர்களில் ஒருவனுக்கு ஏதோ ஒரு ‘திறமை’ இருக்கிறது என்றால் அவனை விட்டுக்கொடுக்காமல் கொண்டாடவேண்டும் என்பது இவர் கட்சி போலும்..

நாம் இளையராஜாவுக்கு வருவோம்.

இளையராஜாவைப் பற்றி நினைக்கும்போது செரினா வில்லியம்ஸ் பற்றிப் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. செரினா உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் சாம்பியன். பதினைந்து கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்குச் சொந்தக்காரர். அவரை ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதியில் தோற்கடித்தவர் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் என்ற இருபது வயதான அமெரிக்க வீராங்கனை. அவர் செரினாவைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரினாவை நான் தோற்கடித்த பிறகு அவர் என்னுடன் பேசியது கிடையாது. மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்.

சக வீராங்கனைகளுடன் அவர் நன்கு பழகக்கூடியவர் என்று மக்கள் நினைக்கலாம். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அவர் கர்வம் பிடித்தவர். ஆஸ்திரேலிய போட்டியில் தோற்றபிறகு அவர் ஒரு வார்த்தைகூட என்னிடம் பேசவில்லை. சக வீராங்கனை என்ற முறையில் ஹாய் என்றுகூட சொல்லவில்லை. என்னை ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. அதன் பின்னர் நாங்கள் இருவரும் அறையைக்கூட ஒன்றாகப் பகிர்ந்துகொள்ளவில்லை. சமூக வலைத்தளத்தில்கூட என்னைப் பின்பற்றுவதைத் தவிர்த்துவிட்டார். தோல்விக்குப் பின்னர் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த அவர் என்னை உருவாக்கியதாக தெரிவித்திருந்தார். அதற்கு ‘என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்’ என்று நான் பதிலளித்திருந்தேன். ஆட்டோகிராபுக்காக நாள் முழுக்க நான் காத்திருந்தேன். நான் காத்திருந்த இடத்தை மூன்று முறை கடந்து சென்ற அவர் போஸ்டரில் கையெழுத்துப் போடவில்லை” என்றிருக்கிறார்.

செரினா வில்லியம்ஸின் இந்த குணங்கள் இளையராஜாவிடமும் இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

75 comments :

Unknown said...

எல்லா புகழும் இறைவனுக்கே!

arivuindia said...

Ilaiyaraja interview athuvum kodukkamalo allathu avatrai naan padikkamalo irunthaal... ennai poruthavari ilaiyaraja siranthavar enru solluven

பாகிஸ்தான்காரன் said...

மிக மிக அருமையான, உண்மையான கட்டுரை. இணையத்திலுள்ள ஓர் வயதான ராஜா ரசிகர், மிக விரைவில் உங்களை திட்டியோ இல்லை, ரகுமானை மட்டம் தட்டியோ பதிவிடுவார். அவரும் கூட ராஜா போலதான். நான் இசை ரசிகனில்லை. ஆனால் ஓய்வு நேரத்தில் சில சமயங்களில் பாடல் கேட்பேன். சில ஆண்டுகளுக்கு முன் வரை ராஜா இனை"யும்" கேட்பேன். ஆனால் இணையத்தை உபயோகிக்க ஆரம்பித்த பின் , ராஜாவினை கேட்பதையே குறைத்துவிட்டேன். தலைகனம் கூடியவர்களை ரசித்தால் எங்களுக்கும் தலை பாரம் கூடிவிடுமாம். அம்மாச்சி சொன்னார்கள்..
மிக மிக இனிமையான பதிவு. மொட்டை மாடியில் , முழு நிலா வெளிச்சத்தில் நண்பர்களுடனிருந்து அரட்டை அடிப்பதற்கு ஒப்பான இன்பத்தை உங்களின் பதிவு எனக்கு வழங்கியுள்ளது. மிக்க நன்றி

Jayadev Das said...

தமிழில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் [KV Mahadevan, MSV, Ilaiyarajaa, Rahman etc.], அந்தந்த காலகட்டத்திற்கு மக்களால் ரசிக்கப் பட்டவர்கள், அப்புறம் புதிய இசையமைப்பாளர் வந்த பின்னர் மார்க்கெட் இழந்து விட்டார்கள்.

ஆனாலும், பழைய பாடல்களைப் போலவே இளையராஜாவின் எண்பதுகள் பாடல்கள் தற்போது கேட்பதற்கு நன்றாக உள்ளன, ஆனால் புதிய இசையமைப்பாளர்கள் பாடல்கள் வந்த சில மாதங்களுக்குப் பிறகு ரசித்துக் கேட்க முடியவில்லை.

நீங்கள் MSV, ரஹ்மான் போன்றவர்கள் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னடக்கத்தைப் பற்றி சொல்லியுள்ளீர்கள். இளையராஜாவும் புகழ் உச்சியில் இருந்தவரே, மேலும் MSV துப்பிய எச்சில் என்று சொன்னதாக நீங்களே சொல்லியுள்ளீர்கள், அதை தன்னடக்கமாக நீங்கள் கருதவில்லையா?

இளையராஜா புகழ்ளின் உச்சியில் இருந்த சமயங்களில் தற்போது பேசுவது போல வெளிப்படையாக MSV யை தூக்கி வைத்து ஒருபோதும் பேசியதில்லை. வைரமுத்துவை பயங்கரமாக தாக்கி பேட்டி கொடுத்திருக்கிறார். பாடல் எழுதுவது வெறும் வார்த்தைகளை மாற்றி மாற்றி போடுவது தான் என்று சொல்லியிருக்கிறார். ஒரு படத்தில், சுற்றுலா செல்லும் கல்லூரி மாணவர்கள் உடன் வரும் பாதிரியாரை பாடச் சொல்வார்கள், அவருடைய பதிலையே பாட்டாக்கி பாடலாசிரியர்களை கேவலப் படுத்தியிருப்பார்கள்

அந்த வரிகள்

பாட்டெல்லாம் எனக்குப் பாடத் தெரியாது,
நான் பாடம் நடத்துவேன் pray பண்ணுவேன்
ஓ .......ஜீசஸ் forgive them.

அத்தோடு, திரைப் பட பாடல்களில்,

ராஜா...ராஜாதி ராஜன் இந்த ராஜா........

என்கிட்ட மோதாதே, நான் ராஜாதி ராஜனடா .......

போன்ற பாடல்களை தன்னடக்கம் என்று சொல்ல முடியுமா?

அது மட்டுமல்ல இளையராஜாவை பத்திரிகையாளர்கள் சந்திப்பதோ பேட்டி எடுப்பதோ அபூர்வம். எல்லோரையும் தவிர்த்து விடுவார், பொது நிகழ்சிகளிலும் பேசுவதில்லை. இறைவன் எம் மூலமாக செயல்படுகிறார் நான் வெறும் கருவிதான் என்று இவர் சொல்லிக் கொண்டாலும் ரஹ்மான் வந்து இவரை பீடத்திலிருந்து இறக்கிய பின்னர் ஆள் மனதளவில் சுக்கு நூறாக உடைந்து போனார். அதன் பின்னர் தான் வெளிப்படையாக MSV அவர்களை புகழ்வது, பொது நிகழ்சிகளில் பேசுவது, பத்திரிகையாளர்களிடம் பேசுவது என இறங்கி வந்திருக்கிறார், உண்மையில் தன்னை ஒரு கருவியாக இவர் கருதியிருந்தால், இவரது மார்க்கெட் போனலும் அது இவரை எந்த விதத்திலும் பாதித்திருக்காது. ஆனால் தற்போது இவருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கிறதா என்பது கேள்விக் குறி.

இளையராஜா ஆன்மிகம் பேசுகிறார், பற்றில்லாமை பற்றி பேசுகிறார், எல்லாம் அவன் செயல் என்கிறார், ஆனால் நகைக் கடை விளம்பரத்தில் நடிக்கிறார். விந்தை அல்லவா?

salimhariz said...

அபத்தம்

Anonymous said...

எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று கியூவில் நிற்கிறார்கள். வேறு கதியே இல்லை. இன்றைக்கு இசைத்துறையில் கிடையாது. அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால் நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி. வேறு நாதியே இல்லை

-- இது எப்போ? தரவு உண்டா?. "நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி" - இது தான் அவர் சொன்னது. சமீபத்திலும் சொன்னார். இது மார்கெட் பற்றியது அல்ல. அவரை பற்றியதும் அல்ல. பொதுவாக இசைப்பவனுக்கும் கேட்டப்பவனுக்கும் அந்த கணத்தில் ஏற்ப்பட்ட ஒரு தத்துவ நிலை.

உங்கள் மர மண்டைக்கு புரியாததை விட்டுவிடுங்கள்.

Unknown said...

மிக சரியான கருத்து தவறு செய்பவனே மனிதன் இளையராஜாவும் விதிவிலகல்ல

Anonymous said...

சில்லறை எழுத்தாளரான நீங்கள், உங்களிடம் இல்லாத பணிவு, அவரிடம் ஏன் எதிர்பார்த்தீர்கள்?

asanandan said...

U r Not COrrect On Ilayaraja.

Anonymous said...

இளையராஜாவின் திமிர் குணம் உலகம் அறிந்தது.

ஆனால் இளையராஜாவை திட்டுவதே வாழ்க்கையின் முக்கிய வேலையாக கொண்டிருகிண்றீர்களே இதற்க்கு காரணம் என்ன ?

தனிப்பட்ட முறையில் ஏதாவது காழ்ப்புணர்ச்சி இருக்கின்றதா ?

முதலில் நீங்கள் இதுவரை போட்ட பதிவுகளில் எத்தனை இளையராசாவை திட்டாமல் பதிவு போட்டிருக்கின்றீர்கள் ?

ஒன்று இளையராசா உங்களுக்கு கடுமையான கெடுதி செய்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் மனநோயாளியாக இருக்க வேண்டும்.

நாடி, நரம்பு முழுவதும் ராஜா வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி தொடர்ச்சியாக தாக்க முடியும்.

இளையாராஜா நல்லவர் வல்லவர் என்று நான் சொல்ல போவதில்லை. ஆனால் நீங்கள் வாழ் நாள் முழுவதும் ஒருவரை திட்டுவதிலேயே இருகின்றீர்கள்.

இளையராஜாவும் நீங்களும் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கின்றீர்கள். ஒரு கணம் சிந்திக்கவும்

Amudhavan said...

//எல்லா புகழும் இறைவனுக்கே! //
வருகைக்கு நன்றி ராசு கிரீஷாந்தன்.

Amudhavan said...

\\Do you know how to write comparitive reviews?\\
நிஜப்பெயருடன் வந்து எப்படி எழுதுவது என்பது குறித்து ஒரு பாடம் எடுங்களேன்.

Amudhavan said...

\\Ilaiyaraja interview athuvum kodukkamalo allathu avatrai naan padikkamalo irunthaal... ennai poruthavari ilaiyaraja siranthavar enru solluven \\
நல்ல முடிவு 'அறிவு இந்தியா'

Amudhavan said...

\\மிக மிக அருமையான, உண்மையான கட்டுரை. இணையத்திலுள்ள ஓர் வயதான ராஜா ரசிகர், மிக விரைவில் உங்களை திட்டியோ இல்லை, ரகுமானை மட்டம் தட்டியோ பதிவிடுவார். அவரும் கூட ராஜா போலதான். நான் இசை ரசிகனில்லை. ஆனால் ஓய்வு நேரத்தில் சில சமயங்களில் பாடல் கேட்பேன். சில ஆண்டுகளுக்கு முன் வரை ராஜா இனை"யும்" கேட்பேன். ஆனால் இணையத்தை உபயோகிக்க ஆரம்பித்த பின் , ராஜாவினை கேட்பதையே குறைத்துவிட்டேன். தலைகனம் கூடியவர்களை ரசித்தால் எங்களுக்கும் தலை பாரம் கூடிவிடுமாம். அம்மாச்சி சொன்னார்கள்..
மிக மிக இனிமையான பதிவு. மொட்டை மாடியில் , முழு நிலா வெளிச்சத்தில் நண்பர்களுடனிருந்து அரட்டை அடிப்பதற்கு ஒப்பான இன்பத்தை உங்களின் பதிவு எனக்கு வழங்கியுள்ளது. மிக்க நன்றி \\
பாகிஸ்தான்காரரின் பாராட்டுக்களுக்கு நன்றி.

Amudhavan said...

\\இளையராஜா ஆன்மிகம் பேசுகிறார், பற்றில்லாமை பற்றி பேசுகிறார், எல்லாம் அவன் செயல் என்கிறார், ஆனால் நகைக் கடை விளம்பரத்தில் நடிக்கிறார். விந்தை அல்லவா?\\
வாங்க ஜெயதேவ் தாஸ் சிறிய அளவில் என்றாலும் சரியாகவே கணித்திருக்கிறீர்கள். அவருடைய ஆரம்ப கால திறமை பற்றி இங்கே பேசவே இல்லை. அவரும் தமிழுக்குக் கிடைத்த நல்ல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான். அப்படித்தானே ஒருவர் மதிப்பிடப்பட வேண்டும்! ஆனால் அப்படியில்லாமல் பீத்தோவன் என்கிறார்கள், மொசார்ட் என்கிறார்கள் பாச் என்கிறார்கள் அவர்களுக்கு அடுத்து இளையராஜா என்கிறார்கள்......
'மனுஷ்யபுத்திரனுக்கு இணையான கவிஞனே இங்கே இல்லை அவர் இருக்கும் திசையை நோக்கி நாங்கள் வணங்குகின்றோம்'...என்பதுபோல் சிலர் பிதற்றும்போது நீங்கள் பாரதியார் படித்திருக்கிறீர்களா? கண்ணதாசன் தெரியுமா? என்றெல்லாம் கேட்டால் கோபம் வந்துவிடுகிறது. அதற்காக இவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கவா முடியும்?
தவறான தகவல்களையும் தவறான வரலாறுகளையும் இணையத்தில் பரப்புவதை அனுமதிப்பதற்கில்லை.

Amudhavan said...

\\அபத்தம் \\
சலீம் நீங்க பாராட்டறீங்களா கட்டுரை பற்றித் திட்டறீங்களா என்பது ஒன்றும் புரிபடவில்லை.

Amudhavan said...

\\"நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி" - இது தான் அவர் சொன்னது. சமீபத்திலும் சொன்னார். இது மார்கெட் பற்றியது அல்ல. அவரை பற்றியதும் அல்ல. பொதுவாக இசைப்பவனுக்கும் கேட்டப்பவனுக்கும் அந்த கணத்தில் ஏற்ப்பட்ட ஒரு தத்துவ நிலை.\\
இரண்டு தத்துவ ஞானிகளுக்கு இடையில் ஏற்படும் நிலை என்பது இதுதானா? புரிந்துவிட்டது.

Amudhavan said...

\\மிக சரியான கருத்து தவறு செய்பவனே மனிதன் இளையராஜாவும் விதிவிலகல்ல\\
வருகைக்கு நன்றி சக்கரக்கட்டி.

Amudhavan said...

\\சில்லறை எழுத்தாளரான நீங்கள், உங்களிடம் இல்லாத பணிவு, அவரிடம் ஏன் எதிர்பார்த்தீர்கள்?\\
ஞானிகளிடம் அதெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம் சார்

Amudhavan said...


asanandan said...

U r Not COrrect On Ilayaraja.
அப்படிங்களா சர்தான்.

Amudhavan said...

\\இளையராஜாவின் திமிர் குணம் உலகம் அறிந்தது.\\
உலகம் அறிந்த விஷயம்தானே அதை அவ்வப்போது சொல்வதில் என்ன குறை வந்துவிடப்போகிறது?

\\ஆனால் இளையராஜாவை திட்டுவதே வாழ்க்கையின் முக்கிய வேலையாக கொண்டிருகிண்றீர்களே இதற்க்கு காரணம் என்ன ?\\
இந்தக் கட்டுரையில்கூட எந்தெந்த இடத்தில் இளையராஜாவைத் 'திட்டியிருக்கிறேன்' என்று சொல்ல முடியுமா?

\\தனிப்பட்ட முறையில் ஏதாவது காழ்ப்புணர்ச்சி இருக்கின்றதா ?\\
அவரிடம் நமக்கு என்னங்க காழ்ப்புணர்ச்சி, அதுவும் தனிப்பட்ட முறையில்? 'இம்மாதிரி கவிதை தமிழில் இதுவரை வந்ததே இல்லை என்று சமீப கால கவிதை ஒன்றை ஒருவர் சொல்லும்போது 'கம்பன் படித்திருக்கிறாயா?' என்ற கேள்வியை மட்டும்தான் நான் கேட்கிறேன்.

\\முதலில் நீங்கள் இதுவரை போட்ட பதிவுகளில் எத்தனை இளையராசாவை திட்டாமல் பதிவு போட்டிருக்கின்றீர்கள் ?\\
மேலே உள்ள பதில்தான் இதற்கும்.
\\ஒன்று இளையராசா உங்களுக்கு கடுமையான கெடுதி செய்திருக்க வேண்டும். அல்லது நீங்கள் மனநோயாளியாக இருக்க வேண்டும்.\\
அவர் பாவம், நமக்கு ஒரு கெடுதியும் செய்யவில்லைங்க. அவருடைய ரசிகர்கள் என்ற பெயரில் நிறையப்பேர் இசைக்கு கெடுதி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மனநோயாளிகளிடமிருந்து மற்றவர்களை மீட்கும் வேலையைத்தான் நான் செய்கிறேன்.

\\நாடி, நரம்பு முழுவதும் ராஜா வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி தொடர்ச்சியாக தாக்க முடியும்.\\
இதைவிட என்னை வேறுமாதிரி அவமானப்படுத்தவே முடியாது. நம்ம பட்டியலில் ராஜாவுக்கு ஏழாவதோ அல்லது எட்டாவதோ இடம்தான். ஆனால் அவருக்கும் இடம் உண்டு என்பதுதான் இங்கே முக்கியம்.

\\இளையாராஜா நல்லவர் வல்லவர் என்று நான் சொல்ல போவதில்லை. ஆனால் நீங்கள் வாழ் நாள் முழுவதும் ஒருவரை திட்டுவதிலேயே இருகின்றீர்கள்.\\
ஒருவரை அல்ல; தவறு கண்டவிடத்து அதனை விமர்சிக்கும் பணியைத்தான் செய்துவருகிறேன். கலைஞரிலிருந்து ஜெயலலிதா, வைகோ, சீமான்,வைரமுத்து,ரயில்வே நிர்வாகம்,மத்திய அரசு என்று கண்ணில் படும் எல்லாத் தவறுகள் பற்றியும்தான் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். இளையராஜா பற்றிய தவறான கற்பிதங்கள் இணையத்தில் நாள்தோறும் வந்துகொண்டே இருப்பதால் அடிக்கடி எழுத நேர்கின்றது.

\\இளையராஜாவும் நீங்களும் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கின்றீர்கள். ஒரு கணம் சிந்திக்கவும் \\
என்னென்னவோ பேசிவிட்டு கடைசியில் நீங்கள் மேலே சொன்ன மனநோயாளி கேஸ் நீங்களாகவே இருக்கிறீர்களே.........பரிதாபம்தான்!

Anonymous said...

இளையராஜா ஏன் பணிவனவராக இருக்க வேண்டும்? அவருக்கு வந்த இசையை வந்தவருக்கு கொடுக்கிறார். வேண்டாம் என்பவன் வரவேண்டாம். இதில் பணிவு என்ன குனிவு என்ன?. பண்டத்தை விற்க நினைப்பவனுக்கு தான் அடுத்தவனை திருப்தி படுத்த பணிவாக நடிக்க வேண்டும். அந்த அவசியம் இல்லை. இசையை கொடுத்து விட்டால் பின்பு அதன் பாடு..

காரிகன் said...

அதிரடியான பதிவு பாராட்டுக்கள் அமுதவன் அவர்களே. இதைத்தான் நெத்தியடி என்று சொல்வார்கள். வந்த பின்னூட்டங்கள் காரமாக இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஜெயதேவ் தாஸ் இன்னும் பின்னி எடுத்திருக்கிறார். வவ்வால் அவர்களும் வந்து விட்டால் களை கட்டி விடும் என்று தோன்றுகிறது. இளையராஜாவை பற்றி விமர்சனம் செய்தாலே அபத்தமான கருத்துக்களோடு பலர் உதயமாவது தெரிந்ததே. நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தை எதிர்த்து பேச முடியாத கோபம் அவர்களுக்கு.இளையராஜா சொல்லியவைகள் on the record. அதை யாராலும் மறுக்க முடியாது. எனவே இந்த திமிர் பிடித்த பேச்சுக்களை வேறு வடிவில் ராஜா விசிறிகள் justify செய்வதை தவிர வேறு வழி இல்லை. இளையராஜாவை மிகவும் நேசிக்கும் ஒரு அன்பரிடம் சமீபத்தில் நான் "உங்களுக்கு இளையராஜாவிடம் பிடிக்காத ஒன்று என்ன?" என்று கேட்டதற்கு அவர் சொன்னது:"அவரின் அகங்காரம்". உண்மையில் பணிவு தன்னடக்கம் திறமையின் மறு பெயர் இல்லைதான். ஆனால் ஞானி என்று அழைக்கப்படும் ஒருவருக்கு மற்றவர்களை பாராட்டிப் பேச ஒரு வார்த்தைகூடவா கிடைக்காது?அதுவும் எல்லா சந்தர்ப்பங்களிலும்?இந்த அளவுக்கு கர்வம் கொள்ள இவர் என்ன கலை சேவையா செய்தார்? அல்லது இவர் தமிழ் இசையில் முதலிடத்தில் இருப்பவரா? (அப்படி இருந்தவர்களே நிறைகுடமாகத்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள்) என்ன ஒன்று நீங்கள் இன்னும் கூட நிறையவே எழுதி இருக்கலாம்
இதையும் படியுங்கள் http://inioru.com/?p=35551

Anonymous said...

//\\"நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி" - இது தான் அவர் சொன்னது. சமீபத்திலும் சொன்னார். இது மார்கெட் பற்றியது அல்ல. அவரை பற்றியதும் அல்ல. பொதுவாக இசைப்பவனுக்கும் கேட்டப்பவனுக்கும் அந்த கணத்தில் ஏற்ப்பட்ட ஒரு தத்துவ நிலை.\\
இரண்டு தத்துவ ஞானிகளுக்கு இடையில் ஏற்படும் நிலை என்பது இதுதானா? புரிந்துவிட்டது.//

"" இடையில் இருப்பது சொன்னது சொன்ன சொற்கள் மட்டும் தான் இருக்கவேண்டும். நீங்களாக சேர்த்து சொன்னால் உங்கள் மீது வழக்கு கூட தொடுக்கலாம். ஒழுங்கு மரியாதையாக திருத்திவிடுங்கள்.
பணிவு இருந்தால் உலகம் பாராட்டும் என்பது பிழப்பியல்வாதிகள் சொல்ல்வது, இல்லாவிட்டால் குற்றம் இல்லை. கூட்டுபாலியல் வன்முறை செய்தவர்களின் திறமையோடு ஒப்பிடுவது உங்கள் கிழ்தரத்தை காட்டுகிறது.

bandhu said...

இளையாராஜா பேசத் தெரியாதவர். ரஹமான் பேசத் தெரிந்தவர். இருவருமே திறமை வாய்ந்தவர்கள். இருவருமே அவ்வப்போது காப்பி அடித்தவர்கள்.

அது சரி.... ஒருவரை உயர்த்திச் சொல்ல மற்றொருவரை தாழ்த்தித்தான் தீரவேண்டுமா?

Amudhavan said...

Anonymous said...

\\இளையராஜா ஏன் பணிவனவராக இருக்க வேண்டும்? அவருக்கு வந்த இசையை வந்தவருக்கு கொடுக்கிறார். வேண்டாம் என்பவன் வரவேண்டாம். இதில் பணிவு என்ன குனிவு என்ன?. பண்டத்தை விற்க நினைப்பவனுக்கு தான் அடுத்தவனை திருப்தி படுத்த பணிவாக நடிக்க வேண்டும். அந்த அவசியம் இல்லை. இசையை கொடுத்து விட்டால் பின்பு அதன் பாடு..\\

திரு காரிகன் அவர்களின் பின்னூட்டத்தில் உங்களுக்கான பதில் இருப்பதாக நினைக்கிறேன்.

\\உண்மையில் பணிவு தன்னடக்கம் திறமையின் மறு பெயர் இல்லைதான். ஆனால் ஞானி என்று அழைக்கப்படும் ஒருவருக்கு மற்றவர்களை பாராட்டிப் பேச ஒரு வார்த்தைகூடவா கிடைக்காது?அதுவும் எல்லா சந்தர்ப்பங்களிலும்?இந்த அளவுக்கு கர்வம் கொள்ள இவர் என்ன கலை சேவையா செய்தார்? அல்லது இவர் தமிழ் இசையில் முதலிடத்தில் இருப்பவரா? (அப்படி இருந்தவர்களே நிறைகுடமாகத்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள்) \\
-இது திரு காரிகன்.

Amudhavan said...

காரிகன் said...
\\என்ன ஒன்று நீங்கள் இன்னும் கூட நிறையவே எழுதி இருக்கலாம்\\

வாருங்கள் காரிகன், வருகைக்கும் அழகிய பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்கள் தளத்தில் இன்னமும் அடிதடி சண்டைக்கான ஆசாமிகள் நுழையவில்லையா?
நீங்கள் மற்றவர்களைப் புகழ்ந்தும் பாராட்டியும் எழுதிக்கொண்டிருந்தால் இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று அவர்கள் பேசாமல்தான் இருப்பார்கள். குறிப்பிட்ட ஒருவரை விமர்சித்துவிட்டாலோ போதும்..... அத்தனைப் பேரும் அனானிமஸாக வந்து குவிந்து விடுவார்கள். இங்கே நடக்கிறதே. அதுபோல!
இவர்கள் எத்தனைப் பேர் வந்து கும்மியடித்தாலும் சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டுதானே இருப்போம்...........

Amudhavan said...

Anonymous said...
\\பொதுவாக இசைப்பவனுக்கும் கேட்டப்பவனுக்கும் அந்த கணத்தில் ஏற்ப்பட்ட ஒரு தத்துவ நிலை.\\

\\"" இடையில் இருப்பது சொன்னது சொன்ன சொற்கள் மட்டும் தான் இருக்கவேண்டும். நீங்களாக சேர்த்து சொன்னால் உங்கள் மீது வழக்கு கூட தொடுக்கலாம். ஒழுங்கு மரியாதையாக திருத்திவிடுங்கள்\\
திருத்துவது ஒருபுறம் இருக்கட்டும். உங்கள் பின்னூட்டத்தில் 'பொதுவாக இசைப்பவனுக்கும் கேட்டப்பவனுக்கும் அந்த கணத்தில் ஏற்ப்பட்ட ஒரு தத்துவ நிலை' என்றிருக்கிறீர்களா, இதில் இந்த 'கேட்டப்பவனுக்கும்' என்ற வார்த்தைக்கான அர்த்தம் விளங்காததனால்தான் கொஞ்சம் குழம்பி விட்டது. அது ஒருவேளை ஞானிகள் சம்பந்தமான தத்துவ விளக்கம் ஏதாவது இருக்குமோ என்று தோன்றிவிட்டது.

Amudhavan said...

bandhu said...

\\இளையாராஜா பேசத் தெரியாதவர். ரஹமான் பேசத் தெரிந்தவர். இருவருமே திறமை வாய்ந்தவர்கள். இருவருமே அவ்வப்போது காப்பி அடித்தவர்கள்.

அது சரி.... ஒருவரை உயர்த்திச் சொல்ல மற்றொருவரை தாழ்த்தித்தான் தீரவேண்டுமா?\\

bandhu, முதல் பாராவுக்காகவே உங்கள் மீது பாயப்போகிறார்கள்.
ஏங்க, உலகத்திலேயே இவருக்கு இணையாக, அல்லது தமிழ்நாட்டிலேயே அல்லது இந்தியாவிலேயே இவருக்கு இணையாக இன்னொரு இசையமைப்பாளர் இல்லை என்றுசிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர் தனிவாழ்க்கையில் எப்படி என்பதைப் பற்றி இங்கே எதுவுமே பேசவில்லை. சமூகத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை விமர்சிக்கக்கூடாதா?

Amudhavan said...

காரிகன் said...
\\என்ன ஒன்று நீங்கள் இன்னும் கூட நிறையவே எழுதி இருக்கலாம்\\

சொல்ல வந்தது விடுபட்டுப் போய்விட்டது. இப்போதே எல்லாவற்றையும் ஒரே பதிவிலேயே சொல்லிவிட்டால் எப்படி?
அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக்கொண்டே இருக்கலாம்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல இருக்கு. பின்னூட்டங்கள் கலைக்கட்டியிருக்கு, பல தகவல்களும் அறிய கிடைக்கின்றன.

செரி(யா)ன வில்லியம்ஸ் படம் ...ஹி...ஹி!

ராஜாவின் மண்டைக்கனம் அனைவரும் அறிந்த ஒன்றே,அதனை விளக்க ஒப்புமைக்கு ரெஹ்மான் எல்லாம் தேவையே இல்லை ,தனியாக சொன்னாலே விளங்கும், ரெஹ்மானை ஒப்புமைப்படுத்தினால் ,அவரின் ரசிகர்னு முத்திரை விழும் வாய்ப்புள்ளது! எனவே ராஜா பற்றி சொன்னது என்ன தான் 100% உண்மை என்றப்பொழுதும், நாம் சொன்னது வலிமையிழந்துவிடும்.

கலைஞனுக்கு வித்தாகர்வம் இருக்கத்தான் செய்யும் என ரசிகர்கள் சொல்லக்கூடும்,ஆனால் அந்த வித்தாக்கர்வம் வித்தையினால் வந்திருந்தால் பரவாயில்லை, தமது மார்க்கெட் ஏற்றத்தினால் உருவானால் அது வித்தாகர்வமல்லவே.

ராஜாவுக்கு இருந்தது ஞானச்செறுக்கெனில் அவரது முதல் படமான அன்னக்கிளியிலும் காட்டியிருக்க வேண்டும், அதன் இயக்குனர் தேவராஜ மோகன், மற்றும் தயாரிப்பாளர் எஸ்.பி.டி ஃபில்ம்ஸிடம் காட்டியிருப்பாரா தனது ஞானச்செறுக்கை,அப்பொழுது பம்மிக்கொண்டே தான் தனது முதல் பட வாய்ப்பை பெற்றிருப்பார், வெற்றி வந்ததும் வரும் "ஞானச்செறுக்கு' வெறும் வெற்றி மமதையே.


என்னைப்பொறுத்த வரையில் ஒரு கலைஞனின் வெற்றி மமதை/ஞானச்செறுக்கு என்பது அவரிடம் இணைந்து வேலை செய்பவர்களின் பிரச்சினை, சகிச்சுக்கிட்டு வேலை செய்தால் அவர்கள் இஷ்டம். கேட்கும் நமக்கு அந்த "பிம்பத்தின்" மீது எந்த ஒரு பற்றுமில்லை. பாடல் கேட்டால் மட்டும் போதும்!

ஆனால் இப்படிப்பட்ட "போலி ஞானச்செறுக்கு"க்கொண்டவர்களின் திறமையை ஏன் சமூகம் போற்றி பாடவில்லை ,மதிக்கவில்லை என எவனாவது கேட்டால் உதை தான் கொடுப்பேன் :-))

Anonymous said...

/இதில் இந்த 'கேட்டப்பவனுக்கும்' என்ற வார்த்தைக்கா/ எழுத்து பிழை, மன்னிக்க..

"--" க்கு இடைப்பட்டது ஒருவர் சொன்னதை சொல் மாறாமல் சொல்வது. இதை பின் ஒருவர் quote வாய்ப்பு உள்ளது, தவிருங்கள்.

Anonymous said...

//ஒருவேளை ஞானிகள் சம்பந்தமான தத்துவ விளக்கம் ஏதாவது இருக்குமோ என்று தோன்றிவிட்டது//

தத்துவம் என்பது எதோ ஞானிகளுக்கு இடையில் நடக்கும் விஷயம் அல்ல.

ரஹ்மான் சொன்ன அலைவரிசை மட்டும் எங்கே இருக்கிறது?. அதுவும் ஒரு தத்துவ சொல்லாடல் தான். எங்கோ ஒருவனுக்கு இசை தோன்றுகிறது - அது அவன்/அவள் வாழ்கை அனுபவத்தில் இருந்து வருகிறது. அது ஒருவனுக்கு பிடிக்கிறது - அதுவும் அவன்/அவள் வாழ்க்கை அனுபவத்தில் வந்த ஒரு டெஸ்ட் பொருத்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எவனோ கிராமத்தில் போட்ட மெட்டும், உரு மாறி வேறு எதோ விதத்தில் நாம் கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்...

சிவக்குமார் said...

ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு இளையராஜாவைத்தான் பிடிக்கும். ஆனால் அவரது பேச்சும் இயல்பும் என்னால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவரை வெறுத்துவிடுவேனோ என்று பயந்து அவர் பேட்டி கொடுத்தாலே படிப்பதில்லை. பொதுவில் எப்படிப் பேச வேண்டும் என்று ரஹ்மானிடம்தான் கற்கவேண்டும்.

Amudhavan said...

வவ்வால் said...
\\ராஜாவின் மண்டைக்கனம் அனைவரும் அறிந்த ஒன்றே,அதனை விளக்க ஒப்புமைக்கு ரெஹ்மான் எல்லாம் தேவையே இல்லை ,தனியாக சொன்னாலே விளங்கும், ரெஹ்மானை ஒப்புமைப்படுத்தினால் ,அவரின் ரசிகர்னு முத்திரை விழும் வாய்ப்புள்ளது!\\

சரி அப்படியே வைத்துக்கொள்வோம். விஷயம் என்னவென்றால் ராஜாவின் கேள்வி பதில்தான் முதலில் குமுதத்தில் வெளிவந்தது. இவர் எப்போதும் இப்படித்தானே என்று பேசாமல்தான் இருந்துவிட்டேன். அதற்கு அடுத்துதான் ரகுமானின் பேட்டி விகடனில் வெளிவந்தது. இந்த மனிதர் முற்றிலும் மாறாக வெளிப்படவேதான் இரண்டையும் சேர்த்து பந்திக்கு வைக்க முற்பட்டேன்.

\\ராஜாவுக்கு இருந்தது ஞானச்செறுக்கெனில் அவரது முதல் படமான அன்னக்கிளியிலும் காட்டியிருக்க வேண்டும், அதன் இயக்குனர் தேவராஜ மோகன், மற்றும் தயாரிப்பாளர் எஸ்.பி.டி ஃபில்ம்ஸிடம் காட்டியிருப்பாரா தனது ஞானச்செறுக்கை,அப்பொழுது பம்மிக்கொண்டே தான் தனது முதல் பட வாய்ப்பை பெற்றிருப்பார், வெற்றி வந்ததும் வரும் "ஞானச்செறுக்கு' வெறும் வெற்றி மமதையே.\\

தேவராஜ் மோகனிடம் அவர் எப்படி நடந்துகொள்வார் என்பதை நேரிலேயே பார்த்திருக்கிறேன். இளையராஜா இசையமைத்த தேவராஜ் மோகனின் பாடல் இசை கோர்ப்பின்போது உடனிருந்திருக்கிறேன். ராஜாவை கேலியும் கிண்டலுமாகத்தான் 'தீனிக்கு எடுத்துக்கொள்வார்' தேவராஜ் (மோகன்).ஆக, அப்போதெல்லாம் அவரிடம் எந்தச் செறுக்கும் இருந்ததில்லை.

\\கேட்கும் நமக்கு அந்த "பிம்பத்தின்" மீது எந்த ஒரு பற்றுமில்லை. பாடல் கேட்டால் மட்டும் போதும்!\\

அப்படி இருந்திருந்தால்தான் நமக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லையே. நாம் பாட்டுக்கு எஸ்எம்எஸ்ஸையும் ரசிக்கலாம், டி.ஆர்.பாப்பாவையும் ரசிக்கலாம்,வேதாவையும் ரசிக்கலாம் இளையராஜாவையும் ரசிக்கலாம். இவர் ஒருவர், ஒரே ஒருவர், ஒருவர் மட்டும்தான் என்றெல்லாம் சிலர் பூச்சாண்டி காட்டுவதனால்தானே அத்தனை வினையும்.....
வவ்வால் தங்களின் ஆலாபனைக்கு நன்றி.

Amudhavan said...

Anonymous said...

/இதில் இந்த 'கேட்டப்பவனுக்கும்' என்ற வார்த்தைக்கா/ எழுத்து பிழை, மன்னிக்க..

\\"--" க்கு இடைப்பட்டது ஒருவர் சொன்னதை சொல் மாறாமல் சொல்வது. இதை பின் ஒருவர் quote வாய்ப்பு உள்ளது, தவிருங்கள்.\\
பதிவிலேயே தெளிவாக உள்ளது.

'வேறொரு வாசகர் விகடன் தளத்தில் இன்னொரு கருத்தை நினைவு கூர்ந்திருந்தார். ‘ஒரு பொங்கல் சன்டிவி நிகழ்ச்சியில் இளையராஜா சொன்னார். “எல்லாரும் இளையராஜாவின் இசை வேண்டும் என்று கியூவில் நிற்கிறார்கள். வேறு கதியே இல்லை. இன்றைக்கு இசைத்துறையில் கிடையாது. அப்படி ஒன்றும் வரவும் போவதில்லை. அதனால் நான் அமைத்ததுதான் இசை. அதைக் கேட்க வேண்டியது உங்கள் தலைவிதி. வேறு நாதியே இல்லை” அன்றிலிருந்து அவர் மீதிருந்த மரியாதையே போய்விட்டது’ என்று சொல்லியிருந்தார் அந்த வாசகர்.'
-இது விகடன் தளத்திலிருந்து எடுத்தாண்டது. அதனால் இது சம்பந்தமாய் ஏதாவது பிரச்சினை எனில் விகடன் தளத்தையும் அதனை எழுதிய வாசகரிடமும் கேட்டுக்கொள்ளுதல் நலம்.

Amudhavan said...


Anonymous said...
\\ரஹ்மான் சொன்ன அலைவரிசை மட்டும் எங்கே இருக்கிறது?. அதுவும் ஒரு தத்துவ சொல்லாடல் தான். எங்கோ ஒருவனுக்கு இசை தோன்றுகிறது - அது அவன்/அவள் வாழ்கை அனுபவத்தில் இருந்து வருகிறது. அது ஒருவனுக்கு பிடிக்கிறது - அதுவும் அவன்/அவள் வாழ்க்கை அனுபவத்தில் வந்த ஒரு டெஸ்ட் பொருத்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எவனோ கிராமத்தில் போட்ட மெட்டும், உரு மாறி வேறு எதோ விதத்தில் நாம் கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்... \\
அதானே....நன்றாக இசையமைக்கும் எல்லாரையுமே கேட்டு ரசித்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதானே.........

Amudhavan said...

தமிழானவன் said...

\\ஆம் நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு இளையராஜாவைத்தான் பிடிக்கும். ஆனால் அவரது பேச்சும் இயல்பும் என்னால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அவரை வெறுத்துவிடுவேனோ என்று பயந்து அவர் பேட்டி கொடுத்தாலே படிப்பதில்லை. பொதுவில் எப்படிப் பேச வேண்டும் என்று ரஹ்மானிடம்தான் கற்கவேண்டும்.\\

தமிழானவன் தங்களின் வருகைக்கு நன்றி.

Anonymous said...

தனிப்பட்ட கருத்துக்களை ,நடவடிக்கைகளை ஆய்த்தால் ஏராளம் குறைகளை எல்லோரிடமும் காணலாம்.
இசை என்று வரும் போது ராஜா ராஜராஜன் என்ற நிலையிலே விண்ணுயர நிற்கின்றார்.அவர் தந்த இசையை ,அதன் நுட்பங்ககளை இன்னுமொரு நூற்றாண்டு கடந்தும் போற்றப்படும்.
ரகுமானின் இசை குப்பைத்தொட்டிக்குள் போவதை அவரே கண் முன் பார்த்துக்கொண்டிருப்பதாலேயே இந்த பாசாங்கு செய்கிறார்.
இவை உங்கள் துப்பறியும் நுண் அறிவுக்கு எட்டாது போலும்.வாழ்க உங்கள் நுண் அறிவு.

Amudhavan said...

Anonymous said...
\\இவை உங்கள் துப்பறியும் நுண் அறிவுக்கு எட்டாது போலும்.வாழ்க உங்கள் நுண் அறிவு.\\
\\தனிப்பட்ட கருத்துக்களை ,நடவடிக்கைகளை ஆய்த்தால் ஏராளம் குறைகளை எல்லோரிடமும் காணலாம்.
இசை என்று வரும் போது ராஜா ராஜராஜன் என்ற நிலையிலே விண்ணுயர நிற்கின்றார்.அவர் தந்த இசையை ,அதன் நுட்பங்ககளை இன்னுமொரு நூற்றாண்டு கடந்தும் போற்றப்படும்.\\
ஒரு பிரபலம் என்று வரும்போதே அவரது படைப்புகள் மற்றும் அவரது குணநலன்கள் என்று பார்ப்பதுதான் - என்னுடைய வழக்கம் அல்ல- இந்த உலகத்தின் வழக்கம். அப்படி வெறும் அவர்களுடைய 'படைப்புக்களுக்காக மட்டுமே' மதிக்கப்படும் விற்பன்னர்கள் உலகில் மிகவும் குறைவே.
அப்படியெல்லாம் அவர்களது குணநலன்கள் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இவருடைய இசைக்காக மட்டுமே இவர் பார்க்கப்பட வேண்டும் என்பதற்கு அடையாளமாக, மற்ற இசையமைப்பாளர்கள் செய்யாத அளவுக்கு இவர் என்ன செய்தார் என்பது புரியவில்லை.

அப்படி ஏதாவது புரிந்தால், நீங்கள் தயவுசெய்து நம்முடைய பிரபல தமிழ் சேனல்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள்தான் என்னென்னவோ பெயரில் இளையராஜாவுக்கு முன்னர் வந்த இசையமைப்பாளர்களின் பாடல்களை 'மட்டுமே' இரவுபூராவும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் எல்லா ராஜா ரசிகர்களும் சேர்ந்து இந்த 'அக்கிரமத்தை' உடனடியாக நிறுத்த ஏதாவது செய்யுங்கள்
பாடல் போட்டிகளும் ஏராளமாக நடக்கின்றன. அந்தப் பாடல்களைப் பாடும் பெரும்பாலானவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல்கள், வெறும் எம்எஸ்வி இசையமைத்த பாடல்கள் என்றே பாடுகிறார்கள்.
தேர்வு செய்ய உட்காரும் ஜட்ஜ்கள் சுத்த மோசம். அந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு "என்ன மாதிரியான கம்போசிஷன் இது. எப்படியெல்லாம் பண்ணியிருக்கார் எம்எஸ்வி" என்று அநியாயத்துக்கு உருகுகிறார்கள். இதையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் லட்சக்கணக்கானவர்கள் இதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று டிஆர்பி ரேட்டிங் சொல்கிறது.

இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் 'பார்க்கும்' பொதுமக்களுக்கெல்லாம் புத்தி சொல்கிறமாதிரி இதையெல்லாம் தடுத்து நிறுத்திவிட்டு இணையத்தில் வந்து பேசுங்கள்.
உடனடியாய் இதனைச் செய்யுங்கள்.

Anonymous said...

எப்படியாவது இளையாராஜாவைத் தாக்கி எழுத வேண்டும் என்பது தான் உமது நோக்கம்.
உங்களுக்கும் இசைக்கும் வெகு தூரம் என்பது உன்கள் பதிவுகளை வாசிக்கும் ஒருவர் இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

Amudhavan said...
//,......இவர் பார்க்கப்பட வேண்டும் என்பதற்கு அடையாளமாக, மற்ற இசையமைப்பாளர்கள் செய்யாத அளவுக்கு இவர் என்ன செய்தார் என்பது புரியவில்லை.....//

ஏன் ராஜா மற்றவர்களை விட சிறப்பானவர் என்பதை அவரது ஒவ்வொரு பாடலின் இடை இசையே காண்பிக்கும்.உங்களுக்குத் தான் அந்த ஞானம் இல்லையே !?
அவருடைய பின்னணி இசையை மேடையில் இசைக் குழுக்களால் பிரதி பண்ண முடிவதில்லை என்பதை பல இசைக்குழுக்கள் சொல்லித் தீர்த்து விட்டன.
ஒரு மெட்டை யாராவது போட்டு விடலாம்.அதற்கு பொருத்தமான பின்னணி இசை என்பது எல்லோருக்கும் எளிதில்லை.
ஏன் ராஜா சிறப்பானவர்.எம் .எஸ்.வீ அவரின் முன்னோடிஎன்றால் சில உதாரணங்களை பார்ப்போம்.
விஸ்வநாதன் காலத்தில் ஜி.ராமநாதன் .எஸ்.வீ.வெங்கட்ராமன் , சுப்பையாநாயுடு ,பின்னாளில் வீ.குமார , ஜி.தேவராஜன் , எம்.பி.ஸ்ரீநிவாசன்,விஜயபாஸ்கர் , ஷ்யாம் போன்ற பலர் அற்ப்புதமான பாடல்களைத் தந்தார்கள்.அவை எண்ணிக்கையிலும் குறைந்தவை அல்ல.எல்லோரும் அவற்றை விஸ்வநாதன் பாடல் என்று கற்பனை செய்தார்கள்.

ஆனால் இளையராஜா காலத்தில் நடந்தது அவருடைய ராஜாங்கமே.தனித்தவில் என்பார்களே.அது. இதனையே ஒரு கட்டுரையாக வடிக்கலாம்.
அவர் கொடுத்த ஹிட் பாடல்களை , அவருடைய பாடல்களே தான் வென்றது .இது பொய்யோ , புழுகோ கிடையாது.
பாடல்களை எல்லாம் பட்டியல் போட்டால் தனது காலத்தில் ராஜாவை போல தனியே கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர்கள் வேறு எவரையும் காட்ட முடியாது ஐய்யா.!
மற்ற எல்லா இசையமைப்பாளர்களுக்கும் நிகராக வேறு ஒருவரோ ,பலரோ தமிழ் சினிமாவில் இருந்திருக்கின்றார்கள்.ஆனால் ராஜாவின் காலத்தில் மட்டுமல்ல இன்றும் ராஜா ராஜாதான்!

Amudhavan said...


\\ஏன் ராஜா மற்றவர்களை விட சிறப்பானவர் என்பதை அவரது ஒவ்வொரு பாடலின் இடை இசையே காண்பிக்கும்.\\
நண்பரே, இதில்தான் உங்களுக்கும் எனக்கும் பிரச்சினையே. இளையராஜாவை வெறும் இடையிசையில் வித்தியாசமாகச் செய்தவர். பின்னணி இசை எனப்படும் இசை, அல்லது இன்டர்லூட் எனப்படும் இசையைக் கொண்டுவந்தவர் என்பதாக மட்டுமே சிறப்பிக்கும் உங்கள் கருத்தோடுதான் நமக்குப் பிரச்சினை. தமிழில், அல்லது உலகின் முதல் இசையமைப்பே இளையராஜாவுடையதே....போதுமா?

\\அவருடைய பின்னணி இசையை மேடையில் இசைக் குழுக்களால் பிரதி பண்ண முடிவதில்லை என்பதை பல இசைக்குழுக்கள் சொல்லித் தீர்த்து விட்டன.\\
ஏன் பிரதி பண்ண முடிவதில்லை என்பது தெரியுமா உங்களுக்கு? பிரதி பண்ண முடிவதில்லை என்தற்கான காரணம் அதன் நுட்பமோ 'கோர்ப்புத் திறனோ' மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத ரகசியமோ அல்ல என்பது தெரியுமா உங்களுக்கு? அதெல்லாம் போகட்டும்.
இளையராஜாவின் சரிவே இங்கிருந்துதான், இதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? இந்த BGM அல்லது பின்னணி அல்லது இன்டர்லூட் எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அதுபற்றியும், அதில் இளையராஜா என்ன செய்ய முன்வந்து தோற்றுப்போனார் என்பது பற்றியும் , இது எதுவுமே புரியாமல் ஒரு பெரிய கூட்டமே இந்த விஷயத்துக்காக இளையராஜாவைத் தூக்கிவைத்து கூத்தாடிக் குதித்துகொண்டிருக்கிறீர்களே உங்களுக்காகவும் தனியே ஒரு பதிவு எழுதுவதாக உத்தேசம். காத்திருங்கள்.

Anonymous said...

மெல்லத் திறந்தது கதவு படத்தில் இருமேதைகள் இணைந்தார்கள்.மெட்டுக்களை எம் எஸ்வீ போட்டார்.பின்னனி இசையை ராஜா செய்தார்.மெட்டுக்கு பொருத்தமான இசை.அந்த மெட்டுக்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது பின்னணி இசையே!

அந்த இசையின் ஆதிக்கம் தான் பலரும் இவை இளையராஜாவின் பாடல்கள் என எண்ண வைத்தது.அப்படியான இசையை வழங்க இந்தியாவில் ஏன் உலகத்தில் யாருமில்லை.
இந்திய இசையும் உலக இசையும் ஒன்றிணைந்த அற்ப்புதம் இசைஞானி.

இசைஞானிக்கு முன்பிருந்த "பழைய" இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களில் அவர்கள் பெயரை எடுத்து விட்டால் யார் இசையமைத்தது என்றே சொல்ல முடியாது.

எதை எழுதி என்ன பயன் ?முட்டையில் மயிர் புடுங்கும் நுண்அறிவாளிகளுக்கு புரியுமா?

Amudhavan said...


Anonymous said...

\\எதை எழுதி என்ன பயன் ?முட்டையில் மயிர் புடுங்கும் நுண்அறிவாளிகளுக்கு புரியுமா?\\

எல்லாம் சரி உங்களுடைய மற்ற விஷயங்களுக்கெல்லாம் பிற்பாடு பதில் சொல்லலாம் என்றிருந்தேன். கடைசியில் உங்களை நீங்களே இப்படி விமரிசனம் செய்துகொள்வதைப் பார்த்ததும் சிரிப்பும் பரிதாபமுமாகத்தான் வந்தது. பாவம் நீங்கள்.
உலகின் தலைசிறந்த ஒரே இசையமைப்பாளரைத் தூக்கி நிறுத்தும் நீங்கள் எதற்காக இப்படி உங்களுக்கு நீங்களே காமெடிப்பொருளாக மாறிவிட்டீர்கள் என்பதுதான் பரிதாபத்துக்குக் காரணம்.

காரிகன் said...

அந்த இசையின் ஆதிக்கம் தான் பலரும் இவை இளையராஜாவின் பாடல்கள் என எண்ண வைத்தது.அப்படியான இசையை வழங்க இந்தியாவில் ஏன் உலகத்தில் யாருமில்லை.
இந்திய இசையும் உலக இசையும் ஒன்றிணைந்த அற்ப்புதம் இசைஞானி.

வேற ஏதாவது புதுசா சொல்லுங்கப்பா. போரடிக்குது.

Amudhavan said...

அதனை இணைத்தார் இதனை இணைத்தார், மேற்கத்திய இசையைக் கலந்தார் (இதிலேயே எனக்கு சந்தேகம். மேற்கத்திய இசைக்கும் இவர்தானே 'பிதாமகனாக' இருந்திருக்க வேண்டும்? இவர் எதற்காக 'அதைக்'கொண்டுவந்து 'இதில்' சேர்த்தார்? இன்னொன்று, இவராகவே இதுவரை எங்குமே இல்லாத இசையைத்தானே உருவாக்கியிருக்கவேண்டும்? 'இருந்த' இசையில் கொண்டுவந்து எதற்காக 'எதையோ' சேர்த்தார்? ஒண்ணுமே புரியலை.) சரி, தொலையட்டும். அப்படியே இருந்தாலும் நிறையப் புதுமைகள் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்றுதானே சொல்ல வேண்டும்!
எதற்காக இவருக்கு இணை 'உலகிலேயே' யாருமில்லை என்ற கோணல் வாதம்?
இவர் காலத்தில் கொஞ்ச நாட்கள், அதுவும் கொஞ்ச நாட்கள் மட்டும்தான், (ஏனெனில் விஸ்வநாதன் ஒன்றும் உடனயாகப் போய்விடவில்லை. இளையராஜா வந்தபிறகும் நீண்ட காலத்திற்கு எம்எஸ்வி தலைமை ஸ்தானத்திலேயேதான் இருந்தார்.) இவரது ராஜ்ஜியம் நடந்தது. எம்எஸ்வி ஓய்வு பெறுவதற்குள் தேவா வந்துவிட்டார். தேவா காப்பி அடித்தார் என்றாலும் பல பாடல்கள் தேவா போட்டதா, இளையராஜா போட்டதா என்ற மாயையைத் தோற்றுவித்தது என்பது உண்மை. தேவா நீண்ட காலத்திற்கு Poor man's Ilayaraja வாகத்தான் இருந்தார்.(நான் தேவாவை ஒப்புக்கொள்வதில்லை என்பதும் வேறு விஷயம்)
ஏ.ஆர்.ரகுமான் வந்தபிறகு திரையுலகம் இளையராஜாவின் பிடியிலிருந்து இசை உலகைக் கைப்பற்றுவதற்கு தேவாவையும் பயன்படுத்திக்கொண்டது என்பது நிதர்சனம்.

Umesh Srinivasan said...

ஒரு காலத்தில் வைஜயந்திமாலா ஹிந்தித் திரையுலகைக் கலக்கினாங்க. இப்ப அவங்களால அது முடியுமா? புதுசு புதுசா பொண்ணுங்க வந்து கலக்கிறாங்க. ஆனா, அவங்க கதாநாயகியாய் நடித்த நினைவுகள் பசுமையானவை, காலத்தால் அழியாதவை. இதுதான் இங்க எல்லாருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது.

காரிகன் said...

அதனை இணைத்தார் இதனை இணைத்தார், மேற்கத்திய இசையைக் கலந்தார் (இதிலேயே எனக்கு சந்தேகம். மேற்கத்திய இசைக்கும் இவர்தானே 'பிதாமகனாக' இருந்திருக்க வேண்டும்? இவர் எதற்காக 'அதைக்'கொண்டுவந்து 'இதில்' சேர்த்தார்? இன்னொன்று, இவராகவே இதுவரை எங்குமே இல்லாத இசையைத்தானே உருவாக்கியிருக்கவேண்டும்? 'இருந்த' இசையில் கொண்டுவந்து எதற்காக 'எதையோ' சேர்த்தார்? ஒண்ணுமே புரியலை.)

அமுதவன் அவர்களே, கலக்கல். ஒரு விதத்தில் உங்கள் கேள்விகள் எல்லாமே அர்த்தமுள்ளவைதான். சரி தொலையட்டும். அது அவர்கள் பாடு.

Amudhavan said...

வாருங்கள் உமேஷ், உங்கள் கேள்வி நியாயமானது. நானும் அதைத்தான் சொல்கிறேன். வைஜயந்திமாலா பத்மினி போல எல்லாம் இன்றைக்கு நடிகைகள் வரமுடியுமா? அதற்காக இன்றைக்கு வந்தவர்களைக் குறை சொல்லவும் வேண்டாம்.
வைஜயந்திமாலா, பத்மினி எல்லாம் ஒன்றுமே இல்லை ஹன்சிகா மோட்வானி மாதிரி அவருக்கு முன்னும் யாரும் வந்ததில்லை; இனிமேலும் வரமுடியாது என்று சொல்வதைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறேன்.

Anonymous said...

"நான் மறுக்கவில்லை'' என்று இளையராஜா மறுத்திருக்கிறார். அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள். அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம். 99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். "இதுதாண்டா சாக்கு'ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை "பாடறியேன்... படிப்பறியேன்...' என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை "மரி மரி நின்னே..' என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா. சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியது தான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. "மரி மரி நின்னே' என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.

கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. "அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?' பார்ப்பன எதிர்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. "இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி' என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்.

Anonymous said...

பாடல்களுக்கு இசை அமைப்பது என்பதைப் போலவே காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைப்பது என்கிற வித்தை பெரிதும் கைவரப்பெற்றவர். இதில் இருவருக்கு நிகர் இவரே.

சலனப்படம் என்பது காட்சி ரூபம் ஒலிரூபம் இரண்டும் சேர்ந்தது.

படம் பார்ப்பது. சலனம் கேட்பது. ஓர் ஒலி ரூபத்தைக் கொண்டு மனதிலோ Ilayarajaதிரையிலோ ஒரு காட்சியைக் கொண்டுவர முடியுமா. முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பூபாளம் இசைத்தால் அதிகாலை நேரம் மனக்கண்ணில் தோற்றமளிக்கிறது.

ஒலி ஒரு காட்சியைக் கொண்டுவருவது போல மணம்(வாசம்) கூட மனக்கண்ணில் காட்சியைக் கொண்டு வரும். நாக்கில்படும் ருசியும் மனசினுள் ஒரு காட்சியைக் கொண்டு வந்து நிறுத்தும்.

புலன்கள் விந்தையானவை!

இப்போது நவீன நாடகங்களில் ஒளி உத்தி அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திரை பிம்பங்களுக்கோ ஒலி உத்தி மிக அற்புதமாக கையாளப்படுகிறது. இந்தக் கலையை மிகச் சரியாக உயர்த்திக்காட்டியவர் பண்ணைபுரத்து ராஜா அவர்கள்தான். இதில் அவர் செய்து காண்பித்த ஜாலவித்தைகள் அர்ச்சுனன் கை பாணங்களுக்கு நிகரானவை.

"கதை சொல்லி" இதழுக்காக இசைஞாணி அவர்களை ஓர் நேர்காணல் என்று பார்க்கச் சென்று வந்த எழுத்துலக பிரம்மாக்களான பிரேமும் ரமேஷும், ஒரு பச்சிலைச் செடியைக் கொண்டுவரப் போன அனுமான் சஞ்சீவி மலையையே பெயர்த்துக் கொண்டுவந்ததுபோல ஏகப்பட்ட இசைச் செயதிகளோடு புதுவை திரும்பினார்கள். இந்த சிறிய புத்தகத்தைப் போல இன்னும் சில புத்தகங்கள் எழுத உள்ளார்கள் என்பது இப்போதைக்கு ஒரு செய்தி.


கி.ராஜநாராயணன்

Amudhavan said...

\\பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.\\

உங்களுக்குப் புரியாத விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கின்றன நண்பரே.

\\அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம். \\

மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன தெரியுமோ அதை மட்டுமே வைத்துக்கொண்டு அடுத்தவரையும் பார்க்கிறீர்கள், அது மட்டுமில்லாமல் அடுத்தவர்களும் அப்படியே பார்க்கவேண்டுமென்று நினைக்கிறீர்கள். பிரச்சினையே இதுதான்...........

\\தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?\\

இதைத்தான் வே. மதிமாறன் அவர் தளத்தில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறாரே. அதையே இங்கேயும் எழுதி போரடித்துவிட்டீர்களே...........

\\கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது.\\

ஓஹோ...அதனால்தான் கர்நாடக சங்கீதம் இந்த மண்ணைவிட்டே ஒழிந்துவிட்டதா? கரெக்ட். கர்நாடக சங்கீதம் எங்கேயும் ஒலிப்பதே இல்லை.............

\\பாடல்களுக்கு இசை அமைப்பது என்பதைப் போலவே காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைப்பது என்கிற வித்தை பெரிதும் கைவரப்பெற்றவர். இதில் இருவருக்கு நிகர் இவரே.\\

பின்னணி இசை அமைப்பது என்பது ஒரு கைதேர்ந்த கலைதான். அதில் தேர்ந்த பல இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவராக இருக்கலாம். அதற்காக 'இளையராஜா பின்னணி இசை கோர்ப்பில் வல்லவர். அந்தப் பணியைத் திறம்படச் செய்பவர் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதற்காக உலகிலேயே இவர்தான் சிறந்த இசையமைப்பாளர் என்று யாரேனும் சொல்வார்களா என்ன?
அது இருக்கட்டும். நான் மேலே பின்னூட்டத்தில் எழுதிய அதே விஷயம்தான். மறுபடி நினைவூட்டுகின்றேன். சீக்கிரம் இதற்கு ஏதாவது செய்யுங்கள். அவசரம்........

'இவருடைய இசைக்காக மட்டுமே இவர் பார்க்கப்பட வேண்டும் என்பதற்கு அடையாளமாக, மற்ற இசையமைப்பாளர்கள் செய்யாத அளவுக்கு இவர் என்ன செய்தார் என்பது புரியவில்லை.

அப்படி ஏதாவது புரிந்தால், நீங்கள் தயவுசெய்து நம்முடைய பிரபல தமிழ் சேனல்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்கள்தான் என்னென்னவோ பெயரில் இளையராஜாவுக்கு முன்னர் வந்த இசையமைப்பாளர்களின் பாடல்களை 'மட்டுமே' இரவுபூராவும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் எல்லா ராஜா ரசிகர்களும் சேர்ந்து இந்த 'அக்கிரமத்தை' உடனடியாக நிறுத்த ஏதாவது செய்யுங்கள்
பாடல் போட்டிகளும் ஏராளமாக நடக்கின்றன. அந்தப் பாடல்களைப் பாடும் பெரும்பாலானவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த பாடல்கள், வெறும் எம்எஸ்வி இசையமைத்த பாடல்கள் என்றே பாடுகிறார்கள்.
தேர்வு செய்ய உட்காரும் ஜட்ஜ்கள் சுத்த மோசம். அந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு "என்ன மாதிரியான கம்போசிஷன் இது. எப்படியெல்லாம் பண்ணியிருக்கார் எம்எஸ்வி" என்று அநியாயத்துக்கு உருகுகிறார்கள். இதையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் லட்சக்கணக்கானவர்கள் இதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று டிஆர்பி ரேட்டிங் சொல்கிறது.

இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் 'பார்க்கும்' பொதுமக்களுக்கெல்லாம் புத்தி சொல்கிறமாதிரி இதையெல்லாம் தடுத்து நிறுத்திவிட்டு இணையத்தில் வந்து பேசுங்கள்.
உடனடியாய் இதனைச் செய்யுங்கள்.

Anonymous said...

இப்போது நவீன நாடகங்களில் ஒளி உத்தி அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திரை பிம்பங்களுக்கோ ஒலி உத்தி மிக அற்புதமாக கையாளப்படுகிறது. இந்தக் கலையை மிகச் சரியாக உயர்த்திக்காட்டியவர் பண்ணைபுரத்து ராஜா அவர்கள்தான். இதில் அவர் செய்து காண்பித்த ஜாலவித்தைகள் அர்ச்சுனன் கை பாணங்களுக்கு நிகரானவை.

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் அவர்கள் இசை பற்றி அவ்வப்போது எழுதிய எழுத்துச் சிற்பி.அவர் சொன்ன
வார்த்தைகள் தான் அவை.
இசை பற்றிய அடிப்படையே உங்களுக்கு தெரியவில்லை என்பது உன்கள் எழுத்தே சாட்சி!
நீங்களும் இசையின் அடிப்படையும் தெரியாதவர்களுடன் [நான் தேவன்டா சிவாஜியின் ரசிகனுடன் ] புலம்புவதில் என்ன பயன்.கிடைக்கப்போகிறது நண்பரே !

இசை அஞ்ஞானி அமுதவன் - அர்த்தமற்ற எழத்து.

சந்தையிலே கிடப்பதல்ல கீதம்
சிந்தையிலே எழும் ஜீவலயம்.

Amudhavan said...

இந்த 'சிந்தையிலே எழும் ஜீவலயத்தை' முரசு, மெகா, ஜெயா ப்ளஸ் சேனல்களில் ஒரு நாளில் இருபது மணி நேரத்திற்கும் அதிகமாக ஒலி, ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்தனையும் இளையராஜா திரைக்கு வருவதற்கு முன் வந்த பாடல்கள்.

அந்த நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக டிஆர்பி ரேட்டிங் சொல்கிறது.

முதலில் அத்தனைச் சேனல்களின் அலுவலகம் முன்பும் கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தி, தர்ணா நடத்தி அந்தச் சேனல்களை நிறுத்தப் பாருங்கள். உங்களின் இளையராஜா ரசிகர்கள் அத்தனைப்பேரையும் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள்.

பிற்பாடு இங்கு வந்து பேசுங்கள். அவசரம், அவசரம்!

Anonymous said...

இப்போது நவீன நாடகங்களில் ஒளி உத்தி அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது. திரை பிம்பங்களுக்கோ ஒலி உத்தி மிக அற்புதமாக கையாளப்படுகிறது. இந்தக் கலையை மிகச் சரியாக உயர்த்திக்காட்டியவர் பண்ணைபுரத்து ராஜா அவர்கள்தான். இதில் அவர் செய்து காண்பித்த ஜாலவித்தைகள் அர்ச்சுனன் கை பாணங்களுக்கு நிகரானவை.
கி.ராஜநாராயணன்.
கி.ராஜநாராயணன் ஏன் அப்படி சொன்னார் என்றால் அவர் இளையாராவின் இசையை மட்டும் தான் கேட்டார் என்று அமுதவன் அவர்கள் புலம்புவார்.இளையாராஜா வுக்கு முந்திய [ ஜி.ராமனத்தை , விஸ்வநாதனை ]இசை அவர் கேட்டதில்லை.
அப்படித்தானே அமுதவன்.?இதற்க்கு அறிவு நாணயமாக [ அப்படி ஒன்று தங்களிடம் இருந்தால் ] பதில் சொல்லுங்கள்!

அந்த நிகழ்சிகளில் இளையராஜாவின் பாடல்களும் தான் ஒலிக்கின்றன.அதுமட்டுமல்ல இரவு நேரங்களில் ராஜாவின் பாடல்களை ஒலிபரப்பாத FM இருக்கிறதா? என்று துப்புத் துலக்குங்கள்.

suresh said...

இந்த உங்களின் இந்த பதிவோடு நான் நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன் - ஒரே ஒரு கேள்வியோடு...

அடக்கமாக இருக்கவேண்டும் என்ற குணம் இளையராஜாவுக்கு மட்டுமே இருக்கவேண்டிய ஒன்று இல்லையே...?

வாயிலேயே வடைசுடும் பல பேர் இங்கே அடங்காமல் திரிந்துகொண்டுதான் உள்ளனர் :)

வைரவர் said...

நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு ரஹ்மானால் இசையமைக்க முடியும் ஆனால் எந்திரன் படத்திற்கு ராஜாவால் இசையமைக்க முடியுமா?

suresh said...

@வைரவர்

நிச்சயம் முடியாது...

Anonymous said...

அது இரவு நேரம்…. ரகுமானைப் பார்ப்பதற்காக ஒரு நண்பர் போயிருக்கிறார். அங்கு சென்ற நண்பர் அங்கே பார்த்த காட்சியைப் பார்த்ததும் திகைத்துப் போயிருக்கிறார். காரணம் அந்த இரவு நேரத்தில் கையில் தலையணையுடன் இரண்டொருவர் காத்திருக்க……..சிலபேர் அங்கிருந்த சோபாக்களில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்களாம். இவ்வாறு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்தனைப் பேருமே இந்தியாவின், தமிழின், தெலுங்கின் மிகப்பெரும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!/

நீங்கள் சொன்ன தெலுங்கின் மிகப்பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தூங்கி கொண்டு இருந்தனர் என்று....அப்படி எத்தனை தெலுங்கு படைத்திருக்கு அவர் இசையமைத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள். ஒரே படம் அதுவும் அவர் வந்த புதிதில் அடித்தது...நீங்கள் சொல்லியதில் இருந்தே நீங்கள் தவறான இடுகை இட்டுள்ளீர்கள் என்று முடிவு கட்டிவிட்டேன்.

VSKumar said...

. திரு. அமுதவன் அவர்களே, உங்கள் இடுகைகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் உங்களுக்கு ராஜா சாரின் மேல் கோபம் என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது. அதற்க்கு காரணம் என்வென்று உங்களை தவிர வேறு எவரும் கூரிவிடலாகாது. ஆனால் ஒன்று தெரிகிறது, எண்பதுகளில் உங்களுக்கு ராஜா சார் ஏதோ காரணத்தால் பேட்டி கொடுக்க இயலாமல் போயிருக்கும். அதனால் தான் தங்கள் இந்த வகையில் அவரை பற்றி மிகவும் மட்டமாக எழுதுகிறீர்கள் என்று எனக்கு என்ன தோன்றுகிறது. நீங்கள் எம்.எஸ்.வி. அய்யாவை பற்றி எவ்ளோ வேண்டுமானாலும் எழுதுங்கள் நாங்கள் கேட்க, படிக்க எப்போதும் ஆவலாக இருக்கிறோம். ஆனால் இசையில் இன்னும் பாலபாடமே கற்றுவரும் ரகுமானை இசைஞானியோடு ஒப்பிடுவது நன்றாக இல்லை. உங்களமாதிரி ஒரு குழுதான் இசைஞானிக்கு எதிராக களம் இறக்கிவிடப்பட்டு தொடர்ந்து கை கொடுத்து வருகிறது ரகுமானை. மணிரத்னம் இரண்டு படங்களுக்கு பின் ரகுமானை விட்டு விலகி இருந்தால் இந்நேரம் ரகுமான் தமிழ் திரையுலகில் இல்லை. அதற்க்கு பின் பாரதிராஜா, பாலச்சந்தர் பயன்படுத்தி தூக்கி எறிந்தனர். இம்முவருமே இன்று அவர் இசையில் தோல்வி அடைந்து ரசிகர்களின் வெறுப்பின் எல்லைக்கு நிற்கின்றனர். இது தான் உண்மை. ஆனால் ராஜா சார் இன்றும் தொடர்ந்து தமிழ் திரைப்படத்துறைக்கு கடந்த முப்பத்தாறு வருடங்களுக்கு மேல் கொடுத்து வருகிறார். இன்றைய அவர் பாடல்களை கேட்காமல் நிங்களே நல்ல இருக்காது என்று முடிவு செய்தால் அதற்க்கு அவர் பொறுப்பல்ல. கேட்க கேட்க நல்ல இருக்கும் என்று ரகுமான் பாடல்கள் நல்ல இருக்கும் என்று சொல்வது போல. இன்றைய ராஜா சார் பாடல்களையும் நீங்கள் அடிக்கடி கேட்டால் உங்களுக்கு பிடிக்கும். ரகுமான் மொத்தம் தமிழில் அறுபத்தைந்து படங்கள் மட்டுமே கொடுத்துள்ளார். அதில் பின்னணி இசையமைத்தது என்று பார்த்தால் மணிரத்னம், பாரதிராஜா, ஷங்கர், பாலச்சந்தர் (அதில் ஒரு படத்திற்கு பிரவீன் மணி) ஆகியோர் படத்திற்கு மட்டுமே இருக்கும், மற்றவைக்கெல்லாம் சபேஷ் முரளி, பிரவின்மணி, ஹாரிஸ் ஜெயராஜ், அண்ட் சில சில்லறைகள் தான் பின்னணி இசையமைத்திருக்கும். பாடல்கள் ஹிட் கொடுத்தால் போதுமா? படத்தை நம் மனதில் பதிய வைக்க வேண்டிய பின்னனி இசை தரமாக கொடுக்குவேன்டமா? இதில் ரகுமானை எந்த வகையில் சேர்ப்பீர்கள்? ஆஸ்கார் என்றும் ஒரு அளவுகோல் அல்ல. அப்டி பார்த்தல் ஜெய்கோவை காட்டிலும் ரகுமான் சில நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார். அதுக்காக அவர் இசையில் ஜெய்கோ மட்டும் தான் ஆஸ்கார் வாங்கியதால் சிறந்த பாட்டு என்று உங்களால் சொல்ல முடியுமா? அது போலதான் ஆஸ்கார் வாங்கியதால் அவர்தான் சிறந்த உலக இசையமைப்பாளார் என்று முடிவு கட்ட முடியாது. மணிரத்னம் மட்டும் தூக்கி போட்டால் ரகுமான்ஐ தமிழ் திரையுலகம் தூக்கி எரிந்து விடும். இதுதான் உண்மை. திறமைதான் என்றும் ஜெய்க்கும். இன்றும் புதிய இயக்குனர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களின் படங்களுக்கு அடையாளம் கொடுப்பவர் இளையராஜா. ராஜா சார் கர்வம் படைத்தவர்தான். வித்தை தெரிந்தவர் எப்போதும் கர்வம் படித்தவன்தான். இது உலகம் அறியும். அரைகுறைகள் தான் தங்களது குறைகள் வெளிய தெரியாமல் இருக்க அடுத்தவர்களின் குறையை சொல்லாமல், அவர்களால் ஏற்படும் துயரை மறைக்க முன்னிற்பர். அப்போதுதானே தங்களது குறை தெரியாமல் இருக்கும். கர்வம் இல்லாமல் இந்த ஜால்ரா திரையுலகில் இருந்தால் இந்நேரம் ராஜா சார் அந்த கால இசையமைப்பாளராய் நமக்கு தெரிவார். முப்பத்தாறு வருடங்களில் தமிழில் எழுநூறு படங்கள் கொடுத்துள்ளார் அதில் நிச்சயமாக ஐநூறு படங்கள் ஹிட், சூப்பர் ஹிட் தாண்டி பிளாக் பஸ்ட்டர் ஆனவை. ரகுமானோ இந்த இருபத்திரண்டு வருடங்களில் வெறும் அறுபத்தி ஐந்து படங்கள் தந்து வெறும் இருபது படங்களுக்குள் ஹிட், சூப்பர் ஹிட், பிளாக் பஸ்ட்டர் கொடுத்துள்ளார். விபரங்கள் வேண்டுமென்றால் விக்கிபீடியாவில் ரகுமானை பத்திய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவும் எல்லாம் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட படங்கள் தான் அவைகள். ராஜா சார் இசையில் வாழ்ந்த நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் அன்றைய எல்லா முன்னணி நடிகர்கள் அனைவரும் சொல்லல்லாம். அவர்கள் அவர் திறைமை அறியாமல் அவரை விட்டு போனபின்தான் அவர்கள் தங்களுக்கு எவ்ளோ பெரிய சூனியம் வைத்துக்கொண்டோம் என்று இன்றும் புழுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதில் பிழைத்தவர்கள் ரஜினியும், கமலும் தான். மறைந்த முரளி அவர்கள் தான் மகனின் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேர்மையாக, தன் மனதில் உள்ளதை அவ்ளோ அழகாக வெளிபடுத்தினார் தன் இறப்புக்குமுன்னால். இன்னும் நிறைய சொல்லலாம் ஆனால் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்களோ என்று எனக்கு சிறிய எண்ணம்.

VSKumar said...

நீதானே என் பொன் வசந்தம் படத்திற்கு ரஹ்மானால் இசையமைக்க முடியும் ஆனால் எந்திரன் படத்திற்கு ராஜாவால் இசையமைக்க முடியுமா?
suresh said...
@வைரவர்

நிச்சயம் முடியாது...//

எந்திரன் ஒன்றும் காவியப்படம் அல்ல. பல ஆங்கில படங்களின் கலவை தான் அது. அதுக்கு ரகுமான் இறக்கிய அந்தாந்த படங்களின் இசையை போடுவதற்கு நிங்களே போதும். பாடல்களும் என்னவோ ரகுமானின் சொந்த மூலையில் உதித்த பாடல்களாக நீங்கள் நினைக்க வேண்டாம். யுடுப் போனால் ஒரிஜினல் எல்லாம் வெளிய தெரியும். இளையராஜா சார் இசையமைத்திருந்தால் இந்நேரம் அப்படம் பின்னணியில் ஒரு காவியமாக இருந்திருக்கும் (நான் சொல்வதை கேட்டு நீங்கள் சிரிப்பீர்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் இதுதான் உண்மை.). நீதானே பொன் வசந்தம் படைத்திருக்கு ரகுமானால் இசையமைத்திருக்க முடியும். ஆனால், தன் கதாபாத்திரத்தை இன்று வெளியே அனைவரும் பேசும்படியாக உயிரோடு நடமாட காரணம் ராஜா சாருக்கு நன்றி தெரிவித்தாரே நடிகை சமந்தா. அவருக்கு தெரிந்த இசைஞானம் உங்கள்ளுகேல்லாம் இல்லாதது நினைத்து சிரிப்புதான் வருகிறது. எந்த நடிகை இவ்வாறு ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் எந்த மேடையிலாவது. நீதானே பொன் வசந்தம் ரகுமானோ அல்லது ஹாரிஸ் ஜெயராஜோ இசையமைத்திருந்தால் இந்நேரம் அப்படத்தினை எல்லோரும் மறந்திருப்பர். அந்த படம் ரகுமானின் ஓடாத படங்களின் நிலையில் ஒன்று கூடியிருக்கும் அவ்ளோதான்.

VSKumar said...

நேத்து முளைத்த காளான்களே ஒரு படத்துக்கு இசையமைத்து விட்டு தினமும் தொலைகாட்சியில் ''இந்த படத்து பாடல்கள் எல்லாம் சூப்பரா வந்திருக்கு, நிச்சயமா தமிழ் சினிமாவை இன்னொரு தடவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்'' என்று வாரம் ஒரு முறை வந்து சொல்வார்கள். பாடல் வந்து படம் வந்த பின் தான் தெரியும். பாடல்கள் தமிழ் சினிமாவை விட்டே போயிருக்கும். இது எத்தனை தடவை தமிழ் சினிமாவில் நடந்திருக்கு. பாடலை கேட்டுவிட்டு நாம் சொல்லணும் அது நல்ல பாட்டு, சூப்பர் ஹிட் பாட்டு என்று. அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இசைஞானி சொல்வார் நான் சொல்ல மாட்டேன் நீங்கள் (மக்கள்) தான் சொல்ல வேண்டும் பாடலை பற்றி என்று தன்னடக்கமாக. அதெல்லாம் உங்கள் காதுக்கு கேட்கவில்லையா?

Amudhavan said...

Anonymous said...
\\அது இரவு நேரம்…. ரகுமானைப் பார்ப்பதற்காக ஒரு நண்பர் போயிருக்கிறார். அங்கு சென்ற நண்பர் அங்கே பார்த்த காட்சியைப் பார்த்ததும் திகைத்துப் போயிருக்கிறார். காரணம் அந்த இரவு நேரத்தில் கையில் தலையணையுடன் இரண்டொருவர் காத்திருக்க……..சிலபேர் அங்கிருந்த சோபாக்களில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்களாம். இவ்வாறு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அத்தனைப் பேருமே இந்தியாவின், தமிழின், தெலுங்கின் மிகப்பெரும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்!/

நீங்கள் சொன்ன தெலுங்கின் மிகப்பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தூங்கி கொண்டு இருந்தனர் என்று....அப்படி எத்தனை தெலுங்கு படைத்திருக்கு அவர் இசையமைத்து இருக்கிறார் என்று சொல்லுங்கள். ஒரே படம் அதுவும் அவர் வந்த புதிதில் அடித்தது...நீங்கள் சொல்லியதில் இருந்தே நீங்கள் தவறான இடுகை இட்டுள்ளீர்கள் என்று முடிவு கட்டிவிட்டேன். \\

இல்லை அனானிமஸ், திரைபடத்துறையைப் பற்றிய பல விஷயங்கள் உங்களுக்குப் புரிவதற்கு நியாயமில்லை. இந்த மறுமொழி மட்டுமல்ல இதற்கு அடுத்து வந்திருக்கும் நான்கைந்து மறுமொழிகளும்கூட உங்களால் இடப்பட்டதாக இருக்கலாம்.(அப்படி இல்லையென்றாலும் அதுபற்றிய கவலை வேண்டாம்) இந்த மறுமொழியிலும் சரி கீழேயுள்ள மறுமொழிகளிலும் சரி ஏ.ஆர்.ரகுமானை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இங்கே நான் ரகுமானின் திறமை பற்றியும் அவரது ஆற்றல் பற்றியும் வாதிட வரவில்லை.

அதற்கு வேறு சமயம்பார்க்கலாம்.

இங்கு நான் சொல்ல வருவது அவருக்கு இருக்கும் இன்றைய மார்க்கெட் நிலவரம்.
மேலே நான் எழுதியிருக்கும் காட்சி அன்றாடம் அவருடைய ரிகார்டிங் ஸ்டுடியோவில் நடைபெறும் ஒன்றுதான். தெலுங்கில் அவர் இசையமைத்தாரா என்பது முக்கியமில்லை. அவரைத் தெலுங்கில் அல்ல வேறு எந்த மொழியில் இசையமைக்கவும் பார்க்கவும் கேட்கவும் காத்திருக்கும் கூட்டம்தான் அது. அவர்கள் பார்த்துப் பேசி அவர் மறுத்திருக்கவும் கூடும்.
மேற்கண்ட காட்சியைச் சொன்னவர் ரகுமான் இசையமைத்த படத்திற்குப் பாடல் எழுதப்போயிருந்த நமது பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர்தான். ஆகவே இது தவறான தகவல் அல்ல.
இதற்கு மேலும் நீங்கள் பிடிவாதம் பிடிப்பீர்களேயானால் உங்கள் வசதிக்கேற்ப நினைத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

Amudhavan said...

VSKumar said...
\\திரு. அமுதவன் அவர்களே, உங்கள் இடுகைகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் உங்களுக்கு ராஜா சாரின் மேல் கோபம் என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது. அதற்க்கு காரணம் என்வென்று உங்களை தவிர வேறு எவரும் கூரிவிடலாகாது. ஆனால் ஒன்று தெரிகிறது, எண்பதுகளில் உங்களுக்கு ராஜா சார் ஏதோ காரணத்தால் பேட்டி கொடுக்க இயலாமல் போயிருக்கும். அதனால் தான் தங்கள் இந்த வகையில் அவரை பற்றி மிகவும் மட்டமாக எழுதுகிறீர்கள் என்று எனக்கு என்ன தோன்றுகிறது. \\
குமார் அவர்களே தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி. இளையராஜா மீது எனக்கு எதற்குக் கோபம்? சில வரலாறுகள் சரியாகச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் சில மாபெரும் மனிதர்களின் சாதனைகளை அப்படியே தவிர்த்துவிட்டு வேறொரு மனிதரை மட்டுமே கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களை அவர்களுக்கு உரிய மரியாதையுடன் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் சில புறக்கணிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கட்டமைத்து இணையத்தில் எழுதி வருகிறேன்.
இதில் இளையராஜா பற்றிய பதிவுகள் பிரதானமாய் இருக்கின்றன. காரணம் அவரைப் பற்றி இன்றைய இளையதலைமுறை கொண்டிருக்கும் தவறான அதீத பிம்பங்கள்.
இதை விட்டுவிட்டு நான் ஏதோ அவரைப் பார்க்கப்போயும் பேட்டி எடுக்கப்போயும் அவர் மறுத்துவிட்டதாகவும் அதனால் கோபம் கொண்டு அவரைத் தாக்கி எழுதிக்கொண்டிருப்பதாகவும் புதியதொரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
இரண்டு மறுப்புக்கள். ஒன்று, அவரைத் 'தாக்கி' நான் எழுதுவதில்லை. மற்றவர்கள் இவற்றையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று சொல்வதும் இவர் இப்படியெல்லாம் பேசலாமா என்று சொல்வதும் அவரைத் 'தாக்கு'வதாகாது.
இரண்டாவது, எண்பதுகளில் அவரை நிறைய தடவை சந்தித்திருக்கிறேன். நிறையப் பேசியிருக்கிறோம். பேட்டிக்கெல்லாம் போனதில்லை. பேட்டிக்கென்று போயிருந்தாலும் அவரிடம் பேட்டியெடுப்பது அன்றைய தினத்தில் எனக்கு சுலபமான ஒன்றாகவே இருந்திருக்கும்.

Arun Prasath said...

Kavignar, kalaivanar, KVM, MSV &TKR, sirkali, PBS, Jesudoss, Rahman

idhu ponra oru silarukke Dhiramai, pukazh, dhanmaiyana kunam ivaiyellam orusera amaiyum!

Amudhavan said...

அருண் பிரசாத் சுப்பிரமணியனின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

தனிமரம் said...

பாடலை ரசிப்போம் அது காலத்தின் நிலையாமை .நிலமை .நிலை நிறுத்தும்! அது ரசிகர் மனதில் வாழும் காலம் நாட்க்களைப்பொறுத்து!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ரகுமான் எங்கு எப்படி பேசவேண்டும் என்று அறிந்தவர். அவர் பேசியது உண்மையான வெளிப்பாது என்று கூற முடியாது. என்றாலும் சபையில் இப்படித்தான் பேச வேண்டும் என்று அறிந்தவர் . இளையராஜா இது போல் பேசுவது இளையரராஜா ரசிகர்களுக்கே மன வருக்தம் தரக் கூடியதுதான். கொஞ்சம் நாவடக்கத்தை கடைபிடிப்பது ராஜா மட்டுமல்ல யாருக்குமே நல்லது

VSKumar said...

அமுதவன் அவர்களே,

உங்களை பற்றி நான் கூறியது ஒரு விடயம் தான்.

நீங்கள் கூறிய பதில்களை மறுபடியும் படியுங்கள் உங்கள் மனதில் அவர் மேல் இருக்கிற கோபம் புலப்படும்.

//இல்லை அனானிமஸ், திரைபடத்துறையைப் பற்றிய பல விஷயங்கள் உங்களுக்குப் புரிவதற்கு நியாயமில்லை. இந்த மறுமொழி மட்டுமல்ல இதற்கு அடுத்து வந்திருக்கும் நான்கைந்து மறுமொழிகளும்கூட உங்களால் இடப்பட்டதாக இருக்கலாம்.(அப்படி இல்லையென்றாலும் அதுபற்றிய கவலை வேண்டாம்) இந்த மறுமொழியிலும் சரி கீழேயுள்ள மறுமொழிகளிலும் சரி ஏ.ஆர்.ரகுமானை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இங்கே நான் ரகுமானின் திறமை பற்றியும் அவரது ஆற்றல் பற்றியும் வாதிட வரவில்லை.

அதற்கு வேறு சமயம்பார்க்கலாம். //

எனக்கும் திரைப்படத்துறை பற்றி அவ்ளோ தெரியாதுதான் உங்கள் அளவுக்கு. அதற்காக ஒரு கலைஞனை இந்த அளவுக்கு இன்னொருவருடன் தேவையில்லாமல் ஒப்பிடுவது என்பது தேவை இல்லாத ஒன்று. ராஜா சார் என்றும் தன் முன்னோடிகளை எங்கும் விட்டு கொடுத்தது இல்லை இந்த நிமிடம்வரை. ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் நமது இசையை இன்னொரு தளத்திருக்கு தான் கொண்டு செல்கிறார்களா? அவர்களிடம் திறமை இருக்கலாம், அந்த இசையை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுபடியாக இருக்கிறதா? அந்த நிலைமை தானே போய் கொண்டு இருக்கிறது..உண்மையான இசை கலைஞன் தன் மண் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த இசை அழிவதை கண்டு வெதும்பி கொண்டு தான் இருப்பார்கள். ரகுமான் அவர்களை பாராட்டியோ அல்லது வாழ்த்தியோ இருக்கட்டும், ஏனென்றால் அந்த குட்டையை உருவாக்கியதே அவர் தானே. நான் ரகுமானை தாக்கித்தான் எழுதுகிறேன். நீங்கள் இளையராஜாவை என்ன மாதிரி நினைத்துகொண்டு இந்த கட்டுரைகளை எழுதுகிறிர்களோ, அதே மனநிலையில் தான் நானும் ரகுமானை பற்றி எழுதுகிறேன். ராஜா உள்ளொன்றும் வைத்து கொண்டு வெளி கொண்டு பேசும் மனிதர் அல்ல. கிராமத்து மனிதர் அதனால் அவரிடமிருந்து இந்த மாதிரி உண்மைகள் சகஜமாக வரும். ஆனால் மற்றவர் போல் போலியாக பேச தெரியாது. அடுத்தவர்கள் தன்னை பற்றி மதிப்பாக நினைக்கவேண்டும் என்று தன்னை பெரிய அறிவு ஜீவியாக காட்ட வேண்டும் என்று பேச தெரியாதவர் தான் இசைஞானி. நாம் அவரை புரிந்து கொண்டாலே, அதெல்லாம் தவறாக தெரியாது.

//
இரண்டு மறுப்புக்கள். ஒன்று, அவரைத் 'தாக்கி' நான் எழுதுவதில்லை. மற்றவர்கள் இவற்றையெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று சொல்வதும் இவர் இப்படியெல்லாம் பேசலாமா என்று சொல்வதும் அவரைத் 'தாக்கு'வதாகாது.//

அப்ப இது என்ன மாதிரி பதிவு?

//இரண்டாவது, எண்பதுகளில் அவரை நிறைய தடவை சந்தித்திருக்கிறேன். நிறையப் பேசியிருக்கிறோம். பேட்டிக்கெல்லாம் போனதில்லை. பேட்டிக்கென்று போயிருந்தாலும் அவரிடம் பேட்டியெடுப்பது அன்றைய தினத்தில் எனக்கு சுலபமான ஒன்றாகவே இருந்திருக்கும்.//

அப்போ, உங்களுக்கு அவரிடம் சுலபமாக இருந்திருக்கும் அளவில் அவரிடம் பழகி இருக்கிறீர்கள்..உங்களிடம் அவர் என்றாவது கடுமையாகவோ, தலைகனம் கொண்டவராகவோ நடந்து கொண்டுள்ளாரா? இதே போன்றே நீங்கள் ரகுமானிடம் பழகி இருக்கிறீர்களா? உங்கள் மனசாட்சிபடி கூறுங்கள்.

VSKumar said...

இங்கு நான் சொல்ல வருவது அவருக்கு இருக்கும் இன்றைய மார்க்கெட் நிலவரம்.
மேலே நான் எழுதியிருக்கும் காட்சி அன்றாடம் அவருடைய ரிகார்டிங் ஸ்டுடியோவில் நடைபெறும் ஒன்றுதான். தெலுங்கில் அவர் இசையமைத்தாரா என்பது முக்கியமில்லை. அவரைத் தெலுங்கில் அல்ல வேறு எந்த மொழியில் இசையமைக்கவும் பார்க்கவும் கேட்கவும் காத்திருக்கும் கூட்டம்தான் அது. அவர்கள் பார்த்துப் பேசி அவர் மறுத்திருக்கவும் கூடும்.
மேற்கண்ட காட்சியைச் சொன்னவர் ரகுமான் இசையமைத்த படத்திற்குப் பாடல் எழுதப்போயிருந்த நமது பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர்தான். ஆகவே இது தவறான தகவல் அல்ல.
இதற்கு மேலும் நீங்கள் பிடிவாதம் பிடிப்பீர்களேயானால் உங்கள் வசதிக்கேற்ப நினைத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட வேண்டியதுதான்.//

நான் இதில் ஏன் பிடிவாதம் பிடிக்க போகிறேன்...அங்கே தூங்கி கொண்டு இருந்த இயக்குனரையோ, தயாரிப்பாளரையோ நிங்களோ நானோ பார்த்ததில்லை..ஒரு பாடலாசிரியர் கூறினார் என்று கூறுகிறார்கள் அவர் யார் என்று உலகமே அறியும். அவர் ஒரு ஜால்ரா, கூஜா தூக்கி என்பதை ஊர் அறியும். இதெல்லாம் வாதத்திற்கு ஒவ்வாத காரணம். இன்றைய இசையமைப்பாளர்களை போன்றே ரகுமானும் தான். அவர் தன்னை, தனது இசையை மார்க்கெட்டிங் செய்து கொண்டு வருகிறார் அவ்ளோதான். உங்களை போன்றவர்கள் தான் அவரை இன்னும் பிடித்து கொண்டு இருக்கிறீர்கள். அவர் நமக்கு கொடுத்த பாடல்களை கொண்டு போய் ஒரு இசை அறிந்த வெளிநாட்டு காரனிடம் கேட்க வைத்தால் நமது மானம் பறிபோகும். எல்லாம் அங்கே இருந்து வந்த இசைதானே. அவன் சிரிப்பான். அவருக்கு சுடுவதில் தான் உண்மையான திறமை இருக்கிறது. அதனை மார்க்கெட்டிங் செய்வதில் தான் நல்ல ஆற்றல் இருக்கிறது. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் அவரை பற்றி சொல்லி கொண்டு போனால் அது எனக்கும் அவருக்குமான வாய்க்கால் தகராராய் அதனை நீங்கள் மாற்றி விடுவீர்கள். அதனால் இனிமேல் ராஜா சார் பற்றி இந்த மாதிரி பதிவுகள் இடுவதை நிறுத்தி கொண்டால் நலம் என்று உங்களிடம் வன்மையாகவே சொல்லி கொள்கிறேன். நன்றி வணக்கம்.

பின் குறிப்பு :எங்களுக்கு அவர் கடவுளாகவே இருக்கட்டும். அந்த பக்கம் நீங்கள் வரவேண்டாம். நீங்கள் உங்கள் அபிமானவரை புகழ்ந்து எழுதுங்கள் நாங்களும் ஒன்றும் வர மாட்டோம்.

Amudhavan said...

\\இன்னும் அவரை பற்றி சொல்லி கொண்டு போனால் அது எனக்கும் அவருக்குமான வாய்க்கால் தகராராய் அதனை நீங்கள் மாற்றி விடுவீர்கள். \\
நீங்கள் ரகுமானைப்பற்றி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போங்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டு நான் எதற்காக அதனை உங்களுக்கும் ரகுமானுக்குமான வாய்க்கால் தகராறாக மாற்றப்போகிறேன்? என்னுடைய பதிவு பற்றிய விமரிசனங்களுக்கோ பொதுவான விமரிசனங்களுக்கோதான் நான் பதில் தருவேன்.

\\இனிமேல் ராஜா சார் பற்றி இந்த மாதிரி பதிவுகள் இடுவதை நிறுத்தி கொண்டால் நலம் என்று உங்களிடம் வன்மையாகவே சொல்லி கொள்கிறேன். \\
இது என்னமாதிரியான மிரட்டல் என்று தெரியவில்லை. ஏனெனில் இதைவிட
மிரட்டலாகவும் ஆபாசமாகவும் பெயரில்லாமல் சிலர் எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். சமயத்திற்கு உதவும் என்று. அவர்களில் ஒருவராக உங்களை நான் நினைக்கவில்லை. ஆனால் பெயர் போட்டே இப்படி மிரட்டல் விடுப்பதால் அந்தப் பட்டியலில் நீங்களும் இருக்கவேண்டாமே என்பதனால் இதனை இங்கே தெரிவிக்கிறேன்.

Kali Kabali said...

தனி திறமையினால் புகழ் பெற்றவர்கள் மீது கூறப்படும் மலிவான குற்றச்சாட்டு. ஒதிக்கிவிடுவொம் அதை! நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து கொள்வோம். இதில் விமர்சனம் செய்பவரின் தரம் என்ன என்பதை நல்லாவே புரிந்துகொள்ள முடிகிறது. ரொம்ப கீழே இறங்கி ஒருவரை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. இது என் கருத்து!!

sekar said...

இருள் படிந்த மனித மனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் துடிக்கும் திரு.அமுதவன் அவர்களுக்கு வணக்கம் .

எப்படியோ வாழ வேண்டும் என்று நினைத்துச் சிலர் அடுத்தவரைப் புகழ்ந்து எழுதி வாழுபவர்கள் மத்தில் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைக்கும் உங்களின் உயர்ந்த எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்.

Paramasivam said...

நான் திரு குமார் அவர்கள் கருத்துகளுடன் (அவர் வன்மையாக கூறுவதை தவிர்த்து) உடன் படுகிறேன். ஏனோ எனக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் இளையராஜா பாடல்கள் பிடித்த அளவுக்கு மற்றவர்கள் போட்ட பாடல் பிடிப்பதில்லை. காரணம் தெரியாது. நீங்கள் அனைவரும் இளையராஜா வை தாக்குவதின் காரணமும் தெரியாது. மிகவும் எளிய குடும்பத்தில் இருந்து, அதுவும் இசை பரம்பரை இல்லாத குடும்பம் மற்றும் சிறிய கிராமத்தில் இருந்து சென்னை வந்து இத்தனை வருடங்கள் இத்தனை படங்களுக்கு இசை அமைத்ததை சிறிது எண்ணிப் பார்க்கிறேன். அதில் நான் என்னை மறந்து அனுபவித்ததை எண்ணிப் பார்க்கிறேன். அவ்வளவே. இதில் பணிவு, திமிர் என்பது குறித்து இவ்வளவு விவாதம் ஏன் என தெரியவில்லை. என்னைப் பொறுத்த வரை நீங்கள் குறிப்பிடும் இரண்டு இசை அமைப்பார்களும் நல்ல புரிதலுடன் உள்ளார்கள். நாமும் அவ்வாறே இருப்போமே. இருவரும் தமிழர்கள். ஹிந்தி படவுலகம் தான் இனிய இசை கொடுக்க முடியும் என எண்ணியவர் களை, தங்கள எண்ணம் தவறு என மாற்றிக் கொள்ள வைத்தவர்கள். நாமும் இருவரையும் ஒப்பிடாது, பாராட்டுவது தான் முறை.

tekvijay said...

//இளையராஜா இன்னமும் ஒருபடி மேலே போய் “விஸ்வநாதன் த்தூ என்று துப்பிய எச்சில்தான் எங்களின் இன்றைய சாப்பாடு” என்றல்லவா சொல்கிறார்! இவற்றையெல்லாம் கேட்டபிறகுகூட இவற்றிலுள்ள தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல் சவடால் பேச்சுப் பேச உங்களால் எப்படி முடிகிறது?//

இளையராஜாவை விடும். ரகுமான் இப்படி இளையராஜாவைப்பார்த்து சொல்லியிருக்கிறாரா?! ரகுமான் ஆரம்பகட்டட்தில் ராஜாவிடம் நோட்ஸ் எடுத்து வாசிக்கும் வேலையை செய்திருக்கிறார். பின்னர் ஒரு இடைவெளிக்குப்பின், ராஜாவிடம், அவரின் இசைக்கூடத்திலுள்ள சிந்தஸைசரை இயக்கும் பணியை செய்திருக்கிறார். அப்போதும் ராஜாவின் நோட்ஸை பார்த்து வாசிக்கும் வேலை இருந்திருக்கும். எனவே, ராஜா போட்ட பிச்ச்சை தான் ரகுமானின் ஞானம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிராரா அடக்க சிகாமணியான ரகுமான்?

அல்லது ரகுமான் ஒரு சுயம்புவா? அவராகவே இசையை கற்றுக்கொண்டுவிட்டாரா?!

Post a Comment